நான் அறிந்த சிலம்பு – 17
மலர் சபா
புகார்க்காண்டம் – 03.அரங்கேற்று காதை
யாழ்ப் புலவன் – சென்ற பகுதியின் தொடர்ச்சி
உச்சத்தில் நிற்கும் தாரம்;
அதன் தாக்கத்தால்
இறுதியில் நின்ற கைக்கிளை முதலாய்
அனைத்து இசைகளும்
நூல் முறைக்கேற்பத் தத்தமக்குப்
பொருந்திய முறையான
திரிபுகள் பெற்றுப் பொலிந்தன.
(உழை இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை
வலமுறை: கைக்கிளை, துத்தம், குரல்
இடமுறை: தாரம், விளரி, இளி)
வலமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி
கைக்கிளை படுமலைப் பாலையாய்
துத்தம் செவ்வழிப் பாலையாய்
குரல் அரும் பாலையாய்த் திரிந்தன.
இடமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி
தாரம் கோடிப் பாலையாய்
விளரி விளரிப் பாலையாய்
இளி மேற்செம் பாலையாய்த் திரிந்தன.
இங்ஙனம்
படுமலைப் பாலை தொடங்கி
மேற்செம் பாலை இறுதியாகத் தொடர்கையில்
நீண்டு கிடக்கும் சுரங்களின் வரிசையுடைத்து
யாழதன் இசை.
ஆதியும் அந்தமுமாய்
நின்றிருக்கும் நரம்புகளைப்
பொருத்தமுறக் கொண்டிருப்பது
யாழதன் இசை.
அரும்பாலை முதலான
இடமுறைப் பாலைகள்
மெலிந்து இசைக்கும்
யாழ் தன்னில்.
கோடிப்பாலை முதலான
வலமுறைப் பாலைகள்
மெலிந்து இசைக்கும்
குழல் தன்னில்.
வலிவு மெலிவு சமம்
இம்மூவகை ஓசைகளின்
நரம்படைவு கெடாத
பண்ணீர்மை குன்றாத
முறையான இயக்கம்
எழுத்து எழுத்தாய்
இசையச் செய்திடவல்ல
யாழ் ஆசிரியன் தானும்…
(வலிவு – மேல் / உச்சம்; தாரம்
மெலிவு – கீழ் /மந்தம்
சமம் – சமன் / மத்திமம்)
ஆடல் ஆசான் தன்னொடு
இசையோன் தன்னொடு
முத்தமிழ்ப் புலவன் தன்னொடு
தண்ணுமை ஆசிரியன் தன்னொடு
குழலோன் தன்னொடு
யாழ்ப் புலவன் தானும்
ஒருமித்திருந்தனன்
நாட்டிய அரங்கதனில்.
அடிப்படையான சிலப்பதிகார வரிகள் இங்கே 82 – 94:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram7.html
படத்துக்கு நன்றி:http://en.qantara.de/wcsite.php?wc_c=9189