இந்தியன் ஒருவனின் ஏக்கம்…
செண்பக ஜெகதீசன்
வந்திடும் தேர்தல் விரைவில்
வராது தூக்கம் இரவில்,
முந்திட ஆசைதான் எவர்க்கும்
மூல தனமாய்ப் பொய்கள்,
தந்திரம் பலவாய் வேட்டை
தட்டிப் பறித்திட ஓட்டை,
மந்திரி ஆனதும் உடனே
மறந்து விடுவதா கடமை…!
ஜாதிக் கட்சிகள் முளைக்கும்
சேர்ந்தே வயிற்றை வளர்க்கும்,
பேதம் பெருகி வளரும்
பிரிவினை வாதம் பெருகும்,
நீதி கிடப்பில் கிடக்கும்
நித்தம் சண்டை நடக்கும்,
மோதிப் பெற்ற வெற்றி
மோதலாய்ச் சபையில் வெடிக்கும்…!
காந்தி நேருவைக் காட்டி
கண்ணியத் தலைவரைச் சொல்லி,
ஏந்திக் கையில் கொடியை
ஏற்பார் ஓட்டுப் பிச்சை,
வேந்தன் நீதான் என்பார்
வென்றதும் யார்நீ என்பார்,
காந்தி காட்டிய சாந்தியைக்
காணப் போவது என்றோ…!
படத்திற்கு நன்றி
நல்ல கவிதை. ஏக்கம் தீரும் நாளுக்காய் உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.
ஏக்கத்தில் என்னுடன் பங்குகொண்டு,
ஊக்கம்தரும் பாராட்டு நல்கிய
இளங்கோவன் அவர்களுக்கு
என்
இதயம் கனிந்த நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…