விலை போகாத சிலை
செழியன்
மவுனத்தை …
முகத்தில் தேக்கி
மற்ற சங்கடங்களை
மனதில் புதைத்து ..
வரன் தன்னை பார்க்க
வரும்போது மட்டும்
சிரிப்பை ….மென் சிரிப்பை
செயற்கையாய் செய்து கொண்டு இருக்கிறாள்.
கருவில் 300 நாட்கள்
அவளைச் சுமந்தாள் அவள் தாய்.
உருவில் 30 ஆண்டு
வளர்ந்து
கல்யாண சந்தையில்
காசாகாமல் இருப்பதால்
பெற்றோர் சிந்தையில்
இன்னும்
சுமையாகவே இருக்கிறாள்.
எதிர் வீட்டிலிருக்கும் ராகவனோ
பக்கத்து வீட்டில் இருக்கும் கேசவனோ
குடியிருக்கவில்லை …..
குமரியின் மனதில் .
ஆனால் ……
அவள் ஜாகத்தில்
முதலாம் வீட்டில் ராகுவும்
ஏழாம் வீட்டில் கேதுவும்
இருக்கிறார்களாம்.
குருவும் ..
சந்தில் இருக்கும் இவள் வீட்டையும்
ஜாதகத்தில் இருக்கும் ஏழாம் வீட்டையும்
பார்கவில்லையாம்.
சினிமாவில் …..
இவள்
உச்ச நட்சத்திரமாக இருந்திருந்தால்
இவளே தள்ளிப் போட்டிருப்பாள்
இவளின் திருமணத்தை.
ஆனால் …..இவள்
மூலம் நட்சத்திரமாம்
அதுதான் காரணமாம்
கல்யாணச் சந்தையில்
காசாகாமல் இருக்கிறாள்.
அவள்
முகத்தில்…. மவுனத்தையும் கொள்ளமுடியும்.
மனதில் மகிழ்ச்சியையும் கொல்லமுடியும்.
புகைப்படத்துக்கு நன்றி:
பெண்மையின் வேதனையை ஒரு ஆண்மகன் இத்தனை துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும் விதம்….ஆஹா…அற்புதம்.
சமூக அவலங்களைச் சாடும் கவிதைகளைப் படையுங்கள் நண்பரே!
முகில் தினகரன்.