நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்: தொடர்-11
பெருவை பார்த்தசாரதி
சென்ற இதழின் தொடர்ச்சி :
கடந்த இரண்டு இதழ்களில், நூல்களின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, இந்த இதழில் ஒருவர் நூல்களின் மூலமாகப் பெற்ற அறிவை மற்றவரோடு பகிர்ந்து கொள்கிறாரா?… என்று சிந்தித்தோமானால், கற்ற அறிவைப் பகிர்ந்து கொள்ளுதலும் என்பதும் ஒரு வகையில் வழிகாட்டுதல்தான் என்பது விளங்கும்.
எரியாத வெற்று விளக்கினால் என்ன பயன்?.. அதிலிருந்து வரும் வெளிச்சத்தினால் மட்டுமே விளக்குக்குப் பெருமை உண்டாவதைப் போல், கற்ற கல்வி அறிவின் மூலம், மற்றவருக்கு உதவினால்தான் கற்றவருக்குப் பலன் உண்டாகும்?. இல்லையேல் கற்றதினால் பயன் ஒன்றுமில்லை என்பதைத்தான் வள்ளுவனும் இயம்புகிறான்.
கடந்த பத்துத் தொடர்களில், ஒரு குறிப்பிட்ட துறை அதாவது இலக்கியம், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், வரும் தலைமுறையினருக்கு எவ்வாறு வழிகாட்டுகிறார் என்பதைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தோம். முன்னோர்கள் கற்ற அறிவைப் பின்னவர்களுடன் பகிர்ந்து கொள்ளாவிடில், இவ்வுலகம் ஒரு சாதாரண விளக்கு போல ஜோதி ஏற்றப்படாத விளக்காகவே இருந்திருக்கும். பண்டைக் காலத்தில் நம் முன்னோர்கள், அறிவாளிகள், விஞ்ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோரெல்லாம், தமது அறிவைப் பின் வரும் தலைமுறையினர் அறியும் வகையில் ஏட்டில் எழுதியிராமல் சென்றிருந்தால், மக்களுக்கு நல்வழிகளைக் காட்டியிருக்க முடியுமா? என்ற கேள்விக்கு இன்னும் விடை கண்டுபிடித்திருக்க முடியாது.
தற்போதைய இளம் தலைமுறையினர் பலர், தங்களுக்குள்ளேயே ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்குத் தாங்களே பதிலும் சொல்லிக் கொண்டிருப்பதை அவ்வப்போது கேள்விப் பட்டிருப்போம். அதாவது தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற அனைத்து வளர்ச்சிக்கும், விஞ்ஞான அறிவியல் முன்னேற்றத்துக்கும், அண்டை நாட்டிலிருந்து தருவித்தவை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் உண்மையல்ல. இங்கிருந்துதான் எல்லா அறிவுச் செல்வங்களையும் மற்ற நாடுகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன என்பதற்கு ஒரே ஒரு சான்றை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன். அவ்வப்போது நம் நாட்டில் அறிவுப் பற்றாக்குறை வரும் போதெல்லாம், அனைவரும் ஒன்றை மட்டும் தவறாது நினைவூட்டும் வார்த்தை “அறிவுப் பற்றாக்குறை” அதாவது ஆங்கிலத்தில் ‘BRAIN DRAIN’. இந்த அறிவுப் பற்றாக்குறை என்பது இயற்கையாக விளைந்தது அல்ல. நாட்டில் மலிந்து கிடக்கும் எண்ணற்ற அறிவுக் களஞ்சியங்களை, நாம் மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டோம், சரியாகப் பாதுகாக்கவும் தவறி விட்டோம் என்பதே நமது நாட்டில் உள்ள மேதைகளும், அறிவாளிகளும் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிற விஷயமாகி விட்டது.
பலவிதமான நண்பர்களை நாம் பெற்றிருக்கிறோம், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி செய்து கொள்கிறோம். ஒரு நண்பர் தமக்குத் தெரிந்த விஷயங்களை மற்ற நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்வதால்தான், நண்பர் என்ற சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. உதவிக்கரம் நீட்டாத நண்பர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் எவ்விதப் பிரதிபலனும் இல்லாமல் உதவும் நண்பன் எப்போதுமே நமக்கு உண்டு என்று சொன்னால் அது நல்ல பண்புடைய தரமான நூல்கள் என்று சொன்னால் தகும் அல்லவா!. இத்தகைய நூல்களிலிருந்து பெறுகின்ற அறிவு ஒன்றுதான் அனைவருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
அறிவு தரும் நூல்களைத் தேர்தெடுத்துப் படிக்கின்ற ஒருவர், தாம் பெற்ற படிப்பறிவின் மூலம் அறிவு சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது சிந்தனை விசாலமடைந்து, அறிவுத்திறன் மேன்மை அடைகிறது. ஒரு விஷயத்தைத் தனியாகச் சிந்திப்பதை விட, பலருடன் சேர்ந்து அதே சிந்தனையை பகிர்ந்து கொள்ளும்போது, புதுப்புது கருத்துக்கள் பலரிடமிருந்து வேறுவேறாக வெளிப்படுகிறதல்லவா!.
ஜார்ஜ் பெர்னாட்சா அவர்கள் குறுகிய காலத்தில் நிறைய புத்தகங்களைப் படித்திருக்கிறார். காலத்தையும் நேரத்தையும் மிகச் சரியாகப் பயன்படுத்திப் பல சாதனைகளைப் புரிந்திருக்கின்ற அறிஞர் பெருமக்கள் பலரில் குறிப்பிடத்தக்கவர். பெர்னாட்சா அவர்கள் இளமையில் தாம் கற்றதை மற்றவர் அறிய வேண்டும் என்ற எண்ணத்தில், முதலில் எழுத்துப் பணியைத் தொடங்கினார். முதன் முதலில் அவர் எழுதத் தொடங்கியபோது அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி என்பது கிட்டவில்லையாம். ஆனால் அதற்காக அவர் வருந்தவில்லை, மாறாகத் தொடர்ந்து தமது அறிவைப் பெருக்கி உலகப் புகழ் பெற்றார் என்பதும் யாவரும் அறிந்ததே. பல துறைகளில் எழுதி உலகத்தையே தம் பக்கம் திருப்பிக் காட்டினார். இவரைப் போலவே, இங்கிலாந்தின் தேசியக் கவிஞரும், நாடக ஆசிரியருமான ஷேக்ஸ்பியரின் சிந்தனைகள் இலக்கியத்துக்கும், நாடகத்துக்கும் ஒரு நிலைத்த படிமத்தை உருவாக்கியது. அனேகமாக உலகில் உள்ள அனைத்து எழுத்தாளர்களுமே தமது எழுத்துக்களில் ஷேக்ஸ்பியரின் சிந்தனைகளை மேற்கோள் காட்டத் தவறியதில்லை என்றே கூறலாம்.
அறிவை வளர்க்கிறேன் என்ற பெயரில் ‘பொய்யான மற்றும் தீய செய்திகளை அறிந்து கொள்வதை விட ஒன்றுமே தெரியாமல் இருப்பது நல்லது’ என்கிறார் பெர்னாட்சா. பல்கலைக் கழகங்கள் பல அறிவுக் களஞ்சியமாகத் திகழுகின்றன. யாரும் அறிவைச் சரியான முறையில் பகிர்ந்து கொள்ளாததால், அங்கே அறிவு நிரம்பி வழிகிறது என்கிறார் இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற பெர்னாட்சா அவர்கள்.
“Beware of false knowledge; it is more dangerous than ignorance.”
“Of course there’s a lot of knowledge in universities: the freshmen bring a little in; the seniors don’t take much away, so knowledge sort of accumulates”………..George Bernard Shaw
கற்ற அறிவைப் பகிர்ந்து கொள்ளுதலில், முக்கியப் பங்கு வகிப்பவர் புத்தகத்தை எழுதுபவர்கள்தான். இவர்கள் தாம் பெற்ற அறிவைப் புத்தகம் மூலமாக இவ்வுலகுக்குத் தந்து மிகச் சிறந்த பணியாகிய அறிவைப் பரப்பும் சேவையில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் ஒரு தலைமுனையிருக்கு மட்டுமல்லாது, வாழையடி வாழையாக அடுத்தடுத்து வருகின்ற அனைத்துத் தலைமுறையினருக்கும் தாம் பெற்ற அறிவையும், அறிவுச் செல்வத்தையும் தொடர்ந்து வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை. ஒரு புத்தகத்தில் புதைந்து கிடக்கும் அறிவுக் களஞ்சியத்தை மக்கள் படித்து உணரத் தொடங்கி விட்டால், அந்த அறிவுச் செல்வமானது படித்தவரிடமிருந்து வழிவழியே தொடர்ந்து மற்றவரிடம் ஒரு சங்கிலித் தொடர் போல் சென்றடைகிறது.
இந்த அறிவுச் சங்கிலித் தொடர் அறுபட்டு போகாமல் பாதுகாக்க, நூலாசிரியர்களும், புத்தக வெளியீட்டாளர்களும், பதிப்பாசிரியர்களூம் அரும்பாடு பட்டு வருவதை இன்றும் நாம் காண முடிகிறது. இதற்குச் சான்றாக 50 ஆண்டுகளுக்கு முன்னால், இருந்த பதிப்பகங்களை விட இன்று 150 விழுக்காடு இதன் வளர்ச்சி அடைந்திருப்பதைச் சொல்லலாம்.
ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது, புத்தக விற்பனை வளர்ச்சியும் விரிவடைகிறது என்றால், எல்லோருக்கும் படிக்கும் ஆர்வம் மிகுந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். சென்னையில் இந்த வருடம் 2012 ல் நடந்த புத்தகக் கண்காட்சியில், அறிஞர் பெருமக்கள் எழுதிய எண்ணற்ற புத்தகங்களை வெளிக்கொணர்ந்து புதிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள் புத்தக வெளியீட்டாளர்கள்.
எப்பாடு பட்டாவது செல்வத்தையும், பொருளையும் அடைந்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு முயன்றோர் எல்லோருமே அதை எளிதில் அடைந்து விடுவதில்லை. இதைப் பற்றிய சிந்தனை சிறிது கூட இல்லாத ஒரு சிலருக்கு, எவ்வித முயற்சியும் இல்லாமல் செல்வமனைத்தும் கிட்டி விடுவதும் உண்டு. இதற்கு மாறாக, நாம் அறிவாளியாக வேண்டும், எழுத்தாளராக வேண்டும், என்று நினைப்பவெரெல்லாம், விரும்பி முயன்று அந்த அறிவைப் பெறாமலிருந்ததாகச் சான்று இல்லை. ஒழுக்கமும் பண்பும் கூட விடாமல் முயன்றால் விரும்பிப் பெற்று விடலாம். தாம் அடைந்த செல்வம் முழுவதையும் செலவு செய்து அச்செல்வத்தை இழந்தவர்கள் உண்டு, இதற்கும் மாறாகப் பெற்ற கல்விச் செல்வத்தை ஒருவரும் இழந்ததாக எங்கும் நாம் அறிந்ததில்லை, அதுபோல் பெற்ற கல்விச் செல்வத்தை எந்த அளவுக்குப் பகிர்ந்து கொள்ளுகிறோமோ, அதே அளவு கல்வி அறிவைக் கூடுதலாகப் பெருக்கிக் கொள்ள முடியும். இவை அனைத்துக் கருத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள அனைவரும் அறிந்த ஒரு பழந்தமிழ்ப் பாடலொன்றைத் தக்க சமயத்தில் நினைவு கூர்ந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
வெள்ளத்தால் அழியாது;
வெந்தணலால் வேகாது
வேந்த ரானும்
கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் குறவு றாது
கள்ளர்க்கோ மிகவரிது;
காவலுக்கோ மிகவெளிது;
கல்வி யென்னும்
உள்ளத்தே பொருளிருக்க
உலகெல்லாம் பொருள்தேடி
உழல்வதென்ன!
“பசுவைக் குளிப்பாட்டிப் பொட்டிட்டு அதை “இலக்குமி” என்றழைப்பார்கள். அந்தப் பசுவுக்குத் தீனி மட்டும் சரியாகக் கொடுக்க மாட்டார்கள், அது போலச் சிலர் இலக்கியங்களைப் படிப்பார்கள், பாராட்டுவார்கள், வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும், கற்ற அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் மாட்டார்கள்” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார், செல்லுமிடங்களிலெல்லாம் தம் உரையில் அடிக்கடி வலியுறுத்துவார். “அறிவைத் தேடுங்கள்! அது நம்மை ஆற்றலுடையவனாக்கும், அறிவு தனிமையில் நமது தோழனாகும், துன்பத்திற்கு ஆதரவளிக்கும், இன்பத்திற்கு வழிகாட்டும், நண்பர்களுக்கிடையில் அது ஒரு நல்லாபரணம், பகைவரிடமிருந்து நம்மைக் காக்கும் கேடயம்” என்றார் நபிகள் நாயகம்.
திரைக் கவித் திலகம் கவிஞர் மருதகாசியைப் போலவே, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் அனைத்துமே, தமிழர்களின் சிந்தனையைத் தூண்டி விடுகின்ற விதத்தில் அமைத்து இருப்பதை உணர முடியும். படித்தவர்கள் தமது அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உயரிய கருத்தை உள்ளடக்கியவாறு அவரது பாடல் வரிகளில் அமைத்து இருப்பதை உற்று நோக்கினால் அதில் உள்ள கருத்து எளிதில் புலப்படும். மக்கள் அந்தக் கருத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கில், ‘எல்லாந்தாம் படிச்சீங்க என்ன பண்ணிக் கிழிச்சீங்க” என்று மக்களை வன்மையான வரியில் கண்டிப்பது போல் வலியுறுத்தி இருப்பார். இங்கே அந்த இனிமையான பாடல் வரிகளையும் காண்போம்……..
“சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சுடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க
முன்னாலே வந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க
சித்தர்களும் யோகிகளும்,
சிந்தனையில் ஞானிகளும்,
புத்தரோடு உத்தமர் காந்தியும், ஏசுவும்,
எத்தனையோ உண்மைகளை,
எழுதி எழுதி வச்சாங்க,
எல்லாந்தா படிச்சீங்க,
என்ன பண்ணி கிழிச்சீங்க”
அறிவைப் பெருக்க வேண்டுமென்றால், படிக்கும் பழக்கத்தையும் அதை நம்மிடையே ஊக்குவிக்கும் நூலகத்தின் பங்கையும் அடுத்த இதழில் அறிவோம்.
(தொடரும்)
Arumaiyilum arumai. idhai padithathil perumai. sarathyin ippani thodara vazhthukkal