இறைவன் மேல் கோபம்
நாகேஸ்வரி அண்ணாமலை
ஒவ்வொரு வருடமும் இந்தியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கிச் செல்லும் வழக்கத்தை இப்போது கொண்டிருக்கிறோம். இந்த முறை அப்படி வரும் வழியில் பழம்பெருமை வாய்ந்த ஜெருசலேம் இருக்கும் இஸ்ரேலுக்கும் சென்று வர முடிவு செய்தோம். ஜெருசலேத்தையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் பார்த்துவிட்டு இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவ் நகர விமானநிலையத்தில் ஜோர்டனின் தலைநகரமான அம்மான் செல்வதற்காகக் காத்திருந்தோம். அங்கு வந்த பல பயணிகளில் ஒரு குடும்பம் என் கவனத்தைக் கவர்ந்தது.
அந்தக் குடும்பத்தில் தந்தை, தாய், ஒரு மகள், இரண்டு பையன்கள் ஆகியோர் இருந்தனர். இது ஐந்து அங்கத்தினர்கள் அடங்கிய சாதாரணக் குடும்பம் என்றாலும் மற்றக் குடும்பங்களை விட சிறிது வேறுபட்டது. பையன்களில் ஒருவனுக்கு முதிர்ந்த வளர்ச்சி இல்லை. கைகள், கால்கள் இரண்டும் மற்ற உறுப்புகளும் வலுவிழந்து இருந்தன. அவன் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய வயது எவ்வளவு என்று கணிக்க முடியவில்லை என்றாலும் மொத்தத்தில் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடிந்தது.
அந்த மூன்று குழந்தைகளில் யார் மூத்தவர் என்று தெரியவில்லை. பெண்ணிற்கு பதினாலு வயது இருக்கும். மன, உடல் வளர்ச்சி அடையாத பையன் இந்தப் பெண்ணிற்கு மூத்தவனா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இன்னொரு பையனுக்கு – இவன் கடைசிப் பிள்ளையாக இருக்க வேண்டும் – எட்டு வயது இருக்கும். அந்தக் குடும்பத்தினர் யூத இனத்தைச் சேர்ந்தவர்களா அல்லது அரேபிய இனத்தைச் சேர்ந்தவர்களா என்று கூற முடியவில்லை. அதனால் அவர்கள் பேசிய மொழியும் என்ன மொழியென்று அறுதியாகக் கூற முடியவில்லை. வளர்ச்சி குறைந்த பையன் அவ்வப்போது பெற்றோர்களின், கூடப் பிறந்தவர்களின் கவனத்தைக் கவர முயன்று வந்தான். அவர்கள் என்ன மொழியில் பேசினார்கள் என்று தெரியாதாகையால் அவன் பேசியது தெளிவாக இருந்ததா என்று நிர்ணயிக்க முடியவில்லை.
தாயைப் பொறுத்த வரை அவர் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். பிள்ளைகளைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தந்தை வளர்ச்சி குன்றிய பையனைத் தவிர மற்ற இரண்டு குழந்தைகளிடமும் மிகுந்த கவனம் செலுத்தினார். பதின்ம வயதுப் பெண்ணான மகள் மிகக் கவர்ச்சிகரமாக உடை அணிந்திருந்தார். அடிக்கடி தந்தை அந்தப் பெண்ணைக் கொஞ்சிக்கொண்டிருந்தார். தன் பொம்மைக் காரோடு விளையாடிக்கொண்டிருந்த கடைசிப் பையன் அடிக்கடி அப்பாவிடம் வந்து ஏதோ கூறிவிட்டுப் போனான். அவன் தன் அருகில் வரும் போதெல்லாம் தந்தை அவன் மீது கவனம்செலுத்தி அவனை உற்சாகப்படுத்த ஏதாவது சொல்வார். வளர்ச்சி குன்றிய பையன் தன் மீது மற்றவர்கள் கவனம் திரும்ப வேண்டும் என்று நினைத்த போதெல்லாம் திடீரென்று கிறீச்சிடுவான். அப்போது மட்டும் தந்தை அவன் பக்கம் திரும்பி அவனைச் சமாதானப்படுத்த முயல்வார்.
அந்த வளர்ச்சி குன்றிய பையனையும் அந்தக் குடும்பத்தார் அவனை நடத்திய விதத்தையும் பார்த்து என் மனதில் ஒரு வித சோகம் ஏற்பட்டது. தாய், தந்தை இருக்கும் போதே இந்தப் பையனுக்கு இந்த நிலைமை என்றால் எல்லாக் குழந்தைகளும் பெரியவர்களாகி அவரவர் வாழ்க்கைப் பாதையில் செல்லும்போது இவனை யார் பார்த்துக்கொள்வார்கள் எண்ணம் தந்த விளைவுதான் என் சோகத்திற்குக் காரணம். அந்தப் பெண்ணைப் பார்த்தால் வளர்ச்சி குன்றிய தன் சகோதரனைப் பின்னால் பார்த்துக்கொள்ளும் பெண்ணாகத் தோன்றவில்லை. சின்னப் பையன் எப்படி வருவான் என்று இப்போதைக்குச் சொல்ல முடியவில்லை.
இந்தியாவிற்குத் திரும்பியதும் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சந்திக்க நேர்ந்தது. இந்தக் குடும்பத்திலும் இரண்டு பையன்கள், ஒரு பெண். மூத்த பையனுக்குக் காது சரியாகக் கேட்காது. அதனால் சரியாகப் பேசவும் வராது. அது மட்டுமல்ல, யாரிடமும் சரியாகப் பேச மாட்டான். யாரிடமும் வேலைபார்த்துச் சம்பாத்தியம் பண்ணிக்கொள்வானா என்று சொல்ல முடியவில்லை. கடைசி வரை இவன் யாரோடாவது சேர்ந்துதான் இருக்க வேண்டும். இரண்டாவது பையன் ஒரு பேக்டரியில் வேலை பார்க்கிறான். தந்தை தோட்ட வேலை செய்யும்போது தான் பேக்டரியில் வேலைபார்ப்பது இவனுடைய தற்பெருமையைக் கொஞ்சம் கூட்டியிருக்கிறது. கடைசிப் பெண்ணிற்கு பதினான்கு வயதாகிறது. இந்தப் பெண்ணும் சகோதரனைக் கவனித்துக்கொள்வாள் என்று கூறுவதற்கில்லை. தாய், தந்தை காலத்திற்குப் பிறகு இவனை யார் கவனித்துக்கொள்வார்கள் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.
அமெரிக்காவில் இப்படித் தாங்களாகத் தங்களைக் கவனித்துக்கொள்ள முடியாதவர்களை அதற்குரிய இல்லங்களில் சேர்த்துவிடுகிறார்கள். அரசாங்கம் இவர்களைக் கவனித்துக்கொள்ள இந்த இல்லங்களுக்கு நிதிஉதவி அளிக்கிறது. அதற்கு மேல் பெற்றோர்களும் பணம் செலுத்த வேண்டும். இப்படி இவர்களைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் இருந்தாலும் பலர் அவர்களை அடித்துத் துன்புறுத்துகிறார்களாம். சிலர் இதனால் இறந்து கூடப் போயிருக்கிறார்களாம். இந்த வகைச் செய்திகள் பத்திரிக்கைகளில் வந்த வண்ணம் இருக்கிறது.
போட்டி, பொறாமை, சுயநலம் மிகுந்த மனிதர்கள் மத்தியில் இவர்களைப் படைத்த இறைவன் மேல் எனக்கு அதிகக் கோபம் வருக்கிறது. படைப்புத் தொழிலின் இரகசியம்தான் என்ன?