‘கம்பனின் காவியம்” ;இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”

19

 

தமிழிலக்கிய உலக மாநாடு
07.07.2012 சனிக்கிழமை

‘காப்பியங்கள் ‘ அமர்வில் ஆற்றிய தலைமை உரை

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

முன்னுரை :
கம்பன் –
கன்னித் தமிழுக்குக் காவிய மாளிகை கட்டி எழுப்பியவன்!

பல்லாயிரம் வீரர்களோடு படையெடுத்துச் சென்று
பல்லாயிரம் பேர்களைக் கொன்று
புவிச் சக்கரவர்த்தியானவர் பலருண்டு!
பன்னீராயிரம் பாடல்களால் படையெடுத்து வந்து
பல்லாயிரம் பேர்கள் உள்ளம் புகுந்து
கவிச் சக்கரவர்த்தி ஆனவன்.கம்பன் !
கம்பனின் காவியத்தை ஓரங்கட்டிவிட்டுத்
தமிழிலக்கிய வரலாற்றை (ஏ) மாற்றி எழுதமுடியுமா?
எழுதினால் அந்த வரலாறுதான் விடியுமா?
காலம் பல மறைந்தாலும் புதுக்
கோலம் சிறிதும் குறையாமல் தமிழ்
ஞாலம் போற்றும் வண்ணம்
ஆலம் விழுதெனக் காலூன்றி நிற்கும் ‘கம்பனின் காவியம்’
இன்றும் என்றும் காலத்தை வென்றும் வாழும் ! ஏன்?’

காலமெல்லாம் கம்பனுக்குக் கடும் எதிர்ப்பு :

இரவென்றும் பகலென்றும் ஓராமல் மெய்வருத்தம் பாராமல் பசி நோக்காமல் கண்துஞ்சாமல் எவ்வெர் தீமையும் மேற்கொள்ளாமல் செவ்வி அருமையும் பாராமல் அவமதிப்பும் கொள்ளாமல் கருமமே கண்ணாகி ஒருமுக மனத்தொடு அரிய காவியம் தீட்டி முடித்த கம்பனுக்குக் காவியத்தை அரங்கேற்ற முடிந்ததா? அன்னை எனத் தன்னை ஆதரித்த வெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலை நாடிச் செல்லுகிறான் கம்பன். இதுவரை உதவிய வள்ளலோ முதுமையைக் காரணம் காட்டிக் கம்பனைச் சோழ மன்னனிடம் ஆற்றுப்படுத்துகிறார். மன்னவன் முன் வந்து நின்றான் கம்பன். தன்னரசுச் சிக்கல்களை முன்னிறுத்தி அரசவை அரங்கேற்றம் இயலாதெனக் கை விரித்த காவலன் திருவரங்க ஆசார்யாளுக்குத் திருவோலை வரைந்தனுப்புகிறான். அக்காலத்தில் திருவரங்கப் பெரு நகரில் பெரும் புகழோடு வீற்றிருந்த பெருந்தகை .ஸ்ரீ மந்நாதமுனிகள். கம்பன் காவியம் அங்காவது அரங்கேறியதா? இல்லையே! தில்லை வாழ் தீட்சிதர்கள் மூவாயிரம் பேர்களின் ஒப்புதல் பெற்று வா எனக் கம்பனைப் பணிக்கிறது அந்த வைணவக் கொழுந்து. அதனை விழுந்து வணங்கி எழுந்து கம்பன் ஓடுகிறான் தில்லையை நோக்கி! அங்கே, நாகம் தீண்டிய பாலகன் ஒருவனைத் தன் நாகபாசப் படலத்துப் பாடல்கள் சில பாடி உயிர்ப்பித்தானாம் கம்பன். அது கொண்டு கம்பன் காவியத் திறங் கண்டு தம் ஒப்புதலை அளித்தனராம் தீட்சிதர்கள். அதோடு தீர்ந்ததா கம்பனின் அலைச்சல்!.அடுத்து, திருநறுங்கொண்டை திருத்தலத்தில் வாழ்ந்த அருக சமயத்தினரையும் அணுகி அவர்கள் ஒப்புதலையும் பெறுகிறான். இப்படி அங்கும் இங்கும் அலைகழிக்கப்பட்டு இறுதியில் மறுபடி திருவரங்கம் சேர்ந்த கம்பனின் காவிய அரங்கேற்றம் தொடங்கும் வேளை. அப்போதும் அவனுக்குப் புதுச் சோதனை! ‘நஞ்சடகோபனைப் பாடினையா?’ என்றொரு குரல் அரங்கேற்றத்தைத் தடுக்கிறது! வேறு வழி இன்றிச் சடகோபரந்தாதி பாடி முடித்தானாம் கம்பன். (காண்க : நஞ்சடகோபனைப் பாடினையோ வென்று நம்பெருமாள் விஞ்சிய வாதரத்தால் கேட்பக் கம்பன் விரித்துரைத்த செஞ்சொலந்தாதிக் கலித்துறை நூறும்’ – சடகோபரந்தாதிப் பாயிரம்).

அரங்கேற்றம் தொடங்குகிறது. தொடர்வதற்கும் ஆயிரம் இடையூறுகள் ! குறுக்குக் கேள்விகள்! அத்தனையையும் தீர்த்து வைத்துக் காவிய அரங்கேற்றத்தைத் தொடர்வற்குள் கம்பன் பட்ட பாடு தறி படுமோ தாளம் படுமோ! இரணிய வதைப் படலத்துக்கு வந்த போது எழுந்தது எதிர்ப்புச் சுனாமி ! வைணவ அறிஞர்களும் ஆசார்யர்களும் அரங்கேற்றத்தைத் தொடர விடாமல் மறித்தனர். கைகளை நெறித்தனர்! கம்பனுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். வால்மீகி பாடாத ஒன்றைக் கம்பன் எப்படிப் பாடலாம் என்று! கம்பன் பிறந்த தேரழுந்தூர் ஆமருவியப்பன் ஆலயத்தில் ஸ்ரீ ராமன் சன்னதியில் பிரகலாதனும் நரசிம்ம மூர்த்தியும் அருகருகே இருந்து சேவை சாதிப்பதை யாவரும் அறிவர். அவதார மூர்த்தியாக இருந்து இராமர் சாதித்ததை விடச் சாதாரண பிறவியாக இருந்து பிரகலாத ஆழ்வார் சாதித்த காட்சிகளே தன்னை அதிகம் ஆட்கொண்டதாகக் கம்பன் கூறுகிறான். அதனால்தான் அப்படலத்தைப் படைத்ததாகக் கம்பன் விளக்கம் கூற ஸ்ரீமந்நாதமுனிகள், குறுக்கிடுகிறார் : பிரகலாதன் வரலாறு நாராயண மூர்த்தியையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இரணிய வதைப் படலத்தைக் கேட்டுப் பின் முடிவு செய்யலாம் என்றார். அரங்கேற்றம் தொடர்ந்தது. “அங்கிருக்கிறானா? இங்கிருக்கிறானா? எங்கிருக்கிறான் நாராயணன் “என்று அகங்காரத்தோடு இரணியன் வினவப் பிரகலாதன் , “தூணிலும் உளன் அணுவினைச் சத கூறிட்ட கோணிலும் உளன்” என்றான். கேட்ட இரணியன் சினத்தோடு தூணை உதைக்க, ‘இசைதிறந் தமர்ந்த கையா லெற்றினா லோடும் திசைதிறந்த அண்டங் கீறிச் சிரித்தது சீயம்’ என்று கம்பன் பாடினான். உடனே, எதிர் சன்னதியில் எழுந்தருளி இருந்த மோட்டழகிய சிங்கர் சரக் கம்பம் கரக் கம்பம் செய்தருளினாராம். இதனால், எடுத்த கை நரசிங்கர் எனப் பெயர் பெற்றாராம். ஸ்ரீமந்நாதமுனிகள், ‘இரணிய வதைப் படலம் ஒன்றே போதும் கம்பரது தமிழ்க் காப்பியம் தெய்வீகக் காப்பியம் தான் என்பதற்கு ஐயமே இல்லை.இனி இப்படலம் காவியத்தில் இடம் பெறத் தடை இல்லை என்றாராம். (காண்க : அபிதான சிந்தாமணி ; காஞ்சி முனைவர் மா. வரதராசன் எழுதிய ‘கவிச் சக்கரவர்த்தி கம்பர் வாழ்க்கை வரலாறு’ : பக்கம்-111 – 112).

இங்கே குறிப்பிட்ட எதுவும் வரலாறு எனக் கொள்வதற்கில்லை. ஆனால், இக்கதைகள் கம்பனுக்கு அவன் காலத்திலே இருந்த எதிர்ப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன, பட்டியல் இடுகின்றன.

கம்பனுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சிகள் வெளியில் இருந்து மட்டுமல்ல வைணவத்துக்கு உள்ளிருந்தும் தலைவிரித்தாடி இருக்கின்றன. ”நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை போன்ற வைணவப் பெரியார்கள் கம்பரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் ; அக் கவிஞர் பெருமானின் சொல்லையும் பொருளையும் மேற்கொண்டு ஆண்டிருக்கிறார்கள் ; உத்தமச் சமயக் கொள்கைகளும் பக்தித் திறமும் விளங்க இயற்றப்பட்ட இவ்விராமாவதார நூல், திருமால் அடியார்களுடைய அருளிச் செயல்கள் போலக் கொள்ளத்தக்க பெருமை உடையதெனினும் சமயாசாரியர்களும் பக்திமான்களும் அவ்வாறு கொண்டு வழிபட்டுப் போற்றவில்லையே ! ” – சொல்லுபவர் பெரும் பேராசான் மு இராகவ ஐயங்கார் . அவர்தம் தமிழ்ப் புலமை வளத்தையும் வைணவப் பற்று உளத்தையும் ஆய்வுத் திறத்தையும் ஊர் அறியும் பார் அறியும். கம்பரின் இராம அவதாரம் , வால்மீகம் போலப் புனித நூலாக ஏற்கப்படவில்லை. வைதீக வைணவர்கள் ஏற்கவில்லை! ஆகவே கம்பன் காவியத்துக்கு வைதீக வைணவர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியே வந்துள்ளனர். காரணங்களை அலச வேண்டிய நேரம் இதுவல்ல. சுருங்கச் சொல்லின் வால்மீகத்துக்குத் தரும் ஏற்றத்தைக் கம்பரின் காப்பியத்துக்குத தர மறுக்கும் வீர வைணவர்கள் வையகத்தில் உண்டு. (காண்க : முனைவர் ம. ரா. போ. குருசாமி : ‘கம்பர் முப்பால்’ பக்கம் – 182-183).

இருபதாம் நூற்றாண்டில் இராமாயண எதிர்ப்பைத் தமிழகத்துள் நுழைத்த ‘பெருமை’ ஈரோட்டுப் பெரியார் ஈ.வே. ராமசாமிக்கே உரியது. இருபத்து நான்கு மணிநேரமும் இராமனையே நினைத்துக் கொண்டிருப்பவர் ஈ.வெ.ரா என்று கூடக் கூறுவர். பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையிலே பட்டை தீட்டப்பட்ட கூர் வாள் அறிஞர் அண்ணாதுரை. இவ்விருவரும் கம்பனுக்கு எதிராகப் போர் தொடுத்தவர்கள் என்றே சொல்லலாம். பின்னவரின் நூல்களான கம்ப ரசமும், தீ பரவட்டும் நூலும். அக்கால அரசினரால் தடை செய்யப்பட்டு இருந்தாலும் அக்கால இளைஞர்கள் இடையே புழங்கி வந்துள்ளன. இவர்களின் வழித் தோன்றலான தி.க பெருமக்கள் கி வீரமணியும் கொளத்தூர் மணியும் கம்பன் (இராமாயண) எதிர்ப்பில் இன்றும் ஈடுபடும் முன்னணி வீரர்கள். (காண்க : கம்பனுக்குக் காவடியா? விடுதலை தலையங்கம் தேதி: 27-05-2010 http://www.viduthalai.com/20100527/news05.html ).
இவ்வண்ணம் காலம் தோறும் கம்பனின் காவியம் காழ்ப்புணர்ச்சிக்கும் கடும் எதிர்ப்புக்கும் உள்ளானாலும் கம்பனின் காவியமோ கம்பனின் புகழோ காலக் காற்றில் கரைந்து போகும் கற்பூரங்களாக ஆகவில்லை! எதிர்க் காற்றில் ஏறிப் பறக்கும் காற்றாடிகளாகவே அவை விளங்குகின்றன!

காலமெல்லாம் கம்பனுக்குக் கைகொடுக்கும் ஆதரவுகள் :

எத்தனை எத்தனை எதிர்ப்புகள் கம்பனுக்கு எனச் சுருக்கமாகப் பார்த்தோம். அத்தனை அத்தனை எதிர்ப்புகளுக்கு இடையிலும் கம்பன் கொடி பறக்கக் காற்றாக உதவியவர்கள் காலம் தோறும் இருந்தே வந்திருக்கிறார்கள். திருவரங்கத்தில் நடந்தேறிய கம்பன் காவிய அரங்கேற்றத்துக்கு வர இயலாத சடையப்ப வள்ளல், தம் திருவெண்ணெய் நல்லூரில் கம்பரை அழைத்து வந்து முழுக் காவியத்தையும் முற்றோதிப் பொருள் விளக்கச் செய்தார். கேட்டார்ப் பிணிக்கும் தகையதாய்க் கேளாரும் வேட்பக் கம்பன் மொழிந்த காவியம் வீடு தோறும் முழங்கியது ; அக்கம் பக்கம் உள்ள நாடுகளிலும் புழங்கியது. கம்பனின் புகழ் எங்கும் பரவியது. வைதீக வைணவர்கள் எதிர்ப்பையும் மீறி வைணவ ஆசார்யர்களாகிய பெரியவாச்சான் பிள்ளையாலும் நம்பிள்ளையின் உபந்நியாசப் பட்டோலை கொண்டருளிய வடக்குத் திருவீதிப் பிள்ளையாலும் இக்காவியம் ஆதரிக்கப் பெற்றது. ‘நாலாயிரத் திவ்விய பிரபந்த வியாக்கியானங்களில் மேற்கோளாகவும் காட்டப்பட்டுள்ளது. எனவே ’13 -ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் பிரசாரம் பெற்று விட்டது ‘ என உரையாசிரியர் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் குறிப்பிடுகிறார். (காண்க : கம்ப ராமாயணம் – பால காண்டம் பக்கம் XVI). புத்தமித்திரர் எழுதிய வீரசோழியம் என்னும் இலக்கண நூலுக்கு உரை எழுதிய பெருந்தேவனார் 17 -ஆம் வரியில் கம்பரைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். நன்னூல் விருத்த உரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் ‘கரியன் கம்பர்’ என்கிறார்.

கடந்த காலங்களில் இப்படிப் பல புலவர்கள் கம்பனுக்குத் தம் ஆதரவுக் கை நீட்டினர் என்றால் 20 – நூற்றாண்டிலும் ஆதரவுக்குக் குறைவு இல்லை. கம்ப ராமாயணத்தை எரிக்க முயன்ற போது, அதை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார் பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை. இதே கால கட்டத்தில் “சிலம்புச் செல்வர்” ம.பொ.சி. “இலக்கியத்தின் எதிரிகள்” என்னும் தலைப்பில் கட்டுரை எழுதிப் பெரியாரின் போக்கைக் கண்டித்தார். (காண்க : http://www.projectmadurai.org/). இவர்களுக்கு எல்லாம் முன்னதாகக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘

அம்புவிக்கு வாய்த்த அருட்கவி; ஐயமின்றி
உம்பரமு தொத்த உயிர்க்கவி-கம்பனும் தன்
மந்திரச் சொல்லால் வனைந்த கவி; என்றேனும்
வெந்திடுமோ தீயால் விளம்பு.

என்று இராமாயண எரிப்புக்கு வெண்பாவில்எதிர்க்குரல் எழுப்பினார். மேலும்

ஓலை எரியும் தாளெரியும்
உள்ளத் தெழுதிவைத்து நிதம்
காலை மாலை ஓதுகவி
கனலில் வெந்து கரிந்திடுமோ.
என்று கேட்கின்றார்.
கம்பருடைய காப்பியத்தின் சுவைகளை யெல்லாம் திரட்டிக் ‘கம்பராமாயண சாரம்’ என்ற பெயரால் நூல் இயற்றினார் வெ.ப. சுப்பிரமணிய முதலியார். கம்பருடைய காப்பியத்தைப் போற்றிப் புகழ்வதற்கென்றே தம் வாழ்நாள்களை யெல்லாம் அர்ப்பணம் செய்தார் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்.கம்பர் தமிழில் இயற்றிய ராமாயணத்தின் பெருமையை ஆங்கிலத்தில் எழுதி அகில உலகுக்கும் அறிவித்தார் வ.வே.சு. ஐயர். அரசியல் மேடைகளில் தமிழைத் தென்றலாகத் தவழவிட்ட சீவானந்தம் கம்பனைப் போற்றியவர் ; கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்த்த அறிஞர் கூட்டம் ஒன்று “இரசிகமணி” டி.கே.சிதம்பரநாத முதலியார் தலைமையில் இயங்கியது. “இரசிகமணி”யின் “வட்டத்தொட்டி” நண்பர்களில் ஒருவரான “கம்பனடிப்பொடி” சா.கணேசன் காரைக்குடியில் கம்பன் கழகம் தொடங்கி, ஆண்டுதோறும் “கம்பன் விழா” நடத்தத் தொடங்கியபோது, அசுர வளர்ச்சி கண்டது அந்த இயக்கம். மீ.ப.சோமு, அ.சீனிவாசராகவன் ஜஸ்டிஸ் மகராஜன் போன்றவர்கள் . கம்பனுக்குத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர்கள். (காண்க : https://groups.google.com/forum/?fromgroups#!topic/mintamil/Ea3hOXYlBkQ). பெரியாரைப் பெரிதும் பின் பற்றிய பாவேந்தன் பாரதிதாசன் கூடப் பெரியாரின் இராமாயண எரிப்புக்கு உடன்படவில்லை. ரசிக மணி டி கே சி கம்பனின் பன்னீராயிரம் பாடல்களில் ஈராயிரம் இடைச்செருகல் எனத் தள்ளிய போது துள்ளி எழுந்து, ‘கம்பன் பாட்டில் கை வைக்க டி கே சி யார் ?’ என்று கேட்டவன் பாவேந்தன். இப்படிப் பலருடைய ஆதரவைப் பெற்ற கம்பனும் அவன் காவியமும் மேலும் பரவக் கம்பன் அடிப்பொடி எனத் தன் பெயரையே மாற்றிக்கொண்ட கம்பன் அன்பர் சா கணேசன் காரணமானார். காரைக்குடியில் அவர் கம்பன் கழகம் தொடங்கப் புதுச்சேரியிலும் அதே பெயரில் கழகம் தொடங்கப் பெற்றது. இவ்விரு கழகங்களும் கம்பன் விழாவை ஆண்டு தோறும் நடத்திக் கம்பன் புகழை பரவச் செய்தனர் ; கம்பன் கொடி வானளாவப் பறக்கத் தொடங்கியது. பிற நகரங்களிலும் கம்பன் கழகங்கள் தலை எடுக்கத் தொடங்கின. இந்தப் பேராதரவுகளால் கம்ப இராமாயண எரிப்புப் போராட்டம் என்னும் பகைமூட்டம் இருந்த இடம் தெரியாமல் புகையாகிப் போனது! கம்பன் எதிர்ப்பும் மங்கி மறைந்து வருகிறது. எதிர்த்தவர்களும் எரித்தவர்களும் மறைந்துவிட்டார்கள்! ஆனால் கம்பனும் அவன் காவியமும் கடல் கடந்து ஈழம், மலேசியா, பிரான்சு, சுவிசு… என உலகை வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஈழத்திலே கம்பனுக்குக் கொடி நாட்டியவர் கம்ப வாரிதி இலங்கை செயராசு! பிரான்சில் கம்பனைக் குடியமர்த்தியவர் கவிஞர் கி பாரதிதாசன் . சுவிசில் திரு வாகீசன் தொடங்கி வைத்தார். இது இன்னும் தொடர்கிறது இனியும் தொடரும்.

கம்பன் காவியப் பெருமைகள் :

இவ்வண்ணம், கம்பன் காவியம் காலம் எல்லாம் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வந்தாலும் அதையும் மீறி அனைவர் ஆதரவையும் பெற்று உயிர் வாழ்ந்து வருகிறது. கம்பன் இட்ட பெயர் ‘இராமவதாரம்’ ; ஆனால் அந்தப் பெயரே இன்று இல்லை! கம்பனையும் இராமாயணத்தையும் இணைத்த ‘கம்ப இராமாயணம் ‘ என்பதே இன்று நிலைத்து விட்டது. இது ஒன்றே போதும் கம்பன் புகழையும் அவன் காவியத்தின் பெருமையையும் கூற. அவன் காலத்துக் கவிஞர்கள் புலவர்கள் முதல் இக்காலத் தமிழ் அறிஞர்கள் வரை சூட்டியுள்ள புகழாரங்களைத் தொகுத்தால் அதுவே பெரிய நூலாகும். ‘கம்ப நாட்டாழ்வான் ‘, தெய்வப் புலமைக் கம்ப நாட்டாழ்வார்’, கம்ப நாடுடைய வள்ளல்’, ‘கவிச்சக்கரவர்த்தி’… இவை கம்பன் காலத்துப் புலவர்கள் சூட்டிய அடை மொழிகள். ‘கம்ப நாடன் கவிதை போல் கற்றோர்க் கிதயங் களியாதே’ என அக்காலக் கவிஞன் அக்களிக்கிறான். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களும் அவனை வாயாரப் புகழ்கிறார்கள் : திருமணம் செல்வக் கேசவராயர் கம்பரை முதன்மையாக வைத்துத் திருவள்ளுவரை அடுத்து வைத்து இவர்கள் இருவருமே தமிழுக்குக் ‘கதி’ ஆனவர்கள் எனப் புகழுகிறார்.

‘கல்வி சிறந்த தமிழ் நாடு புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு ‘ யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் … யாங்கணுமே கண்டதில்லை ‘ இவை மகா கவி பாரதியின் வாக்குகள்.

‘கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மது உண்டு
வையம் தருமிவ் வனமின்றி வாழும் சுவர்க்கம் வேறுண்டோ!’ என்று கேட்பவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் ‘ புவி அறிந்த பழமொழி. கம்பனைச் சுவைத்துப் படித்து அவற்றின் சாற்றை எல்லாம் வடித்துத் தன் திரைப்படப் பாடல்களில் நிறைத்துத் தந்தவர் கவியரசர் கண்ணதாசன். கம்பனைப் பற்றிய அவர் வரிகள் :
‘பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு
இன்னும் வித்தாகவில்லை என்று பாடு’ கம்பன் புகழுக்கு மணி மகுடம்!
‘சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கிவச்ச கவிப்புலவன்’ – இது வைரமுத்துவின் வருணனை.

கம்பன் காவியம் அன்றும் இன்றும் என்றும் காலத்தை வென்று நிற்பதன் காரணங்கள் :

ஆயிரம் எதிர்ப்புகள் ஆயிரம் காழ்ப்புகள் …பல்லாயிரம் தடைகள் எனப் படை எடுத்த போதும் அவற்றை வென்று நின்ற காவியம் கம்ப இராமாயணம். முதல் காரணம் அதன் கதை.இராமனின் கதை பாரத நாடறிந்த கதை. இக்கதை பற்றிய குறிப்புகள் புறநானூறு, அகநானூறு முதலிய சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு சிலப்பதிகாரம் ஊடாகப் பலவற்றில் உள்ளன. பழங்காலம் தொட்டே இராமாயணக் கதை பல வேறு செய்யுள் வடிவங்களில் வழங்கி வந்த வகையினைத் தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி ‘Á¨ÈóÐ §À¡É ¾Á¢ú áø¸û’ என்ற தம் நூலில் குறிப்பிடுகிறார். அகவற்பாவால் இயற்றப்பட்ட இராமாயணம் இருந்தது என்பதை ‘ஆசிரிய மாலை’ என்னும் நூல் தெரிவிக்கிறது. யாப்பருங்கல விருத்தி உரை ஆசிரியர், பஃறொடை வெண்பா பற்றிச் சொல்லும் போது, (‘பாதம் பலவரின் பஃறொடை வெண்பா” யாப்பருஙகலம் 62) இராமயண வெண்பா என்றொரு நூலைக் குறிப்பிடுகிறார். (காண்க : “þýÛõ ÀÄÅÊ¡ý Åó¾ À·¦È¡¨¼ ¦ÅñÀ¡ þáÁ¡Â½Óõ, Òá½ º¡¸ÃÓ Ó¾Ä¡¸×¨¼Â ¦ºöÔð¸Ç¢ü ¸ñΦ¸¡û¸”).. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாச்சலக் கவிராயர் எழுதிய ‘இராம நாடகக் கீர்த்தனைகள்’ புகழ் பெற்றவை. இப்படிப் பல இராமாயணங்கள் தமிழில் இருந்திருந்தாலும் நிலைத்து நின்றது எது? கம்பனின் காவியமே!

இதற்குப் பல காரணங்கள். கம்பனின் சொந்தக் கை வண்ணம், படிக்கும் போதே நாவையும் மனத்தையும் பந்தாடச் செய்யும் சந்த வண்ணம், மொழி வண்ணம், மொழி இயல் வண்ணம், இயல் இசை நாடகம் இயைந்த முத்தமிழ் வண்ணம் , கற்பனை வண்ணம், உண்மைகளை, வாழ்வின் தத்துவங்கள், மாளாத விழுமியங்கள உரைத்த வண்ணம், உளவியல் நிலவியல் முதற்கொண்டு பலப்பல அறிவியல் கலைகளைப் பொதிந்து வைத்துள்ள வண்ணம் … என இவ்வண்ணம் பலவித வண்ணங்களை குழைத்துக் கம்பன் தன் காவிய ஓவியத்தைத் தீட்டி இருக்கிறான். எனவேதான் காலத்தின் கறை படாத ஓவியமாய் நின்று ஒளிரிகிறது அவன் காவியம். இன்னும் பல காரணங்களை அடுக்கிகொண்டே போகலாம் : பழஞ்சொல் புதுக்கல் புதுச் சொல் ஆக்கல், பல துறைக் களஞ்சியமாக விளங்கல், தமிழ் மரபைப் பேணல், சமயங்களில் ஒற்றுமை காணல்…என்று. காலம் இன்மை கருதியும் விரிவஞ்சியும் அவற்றை விடுக்கிறேன். இறுதியாகக் கருத்தொன்றைச் சொல்லி முடிக்கின்றேன்

படிப்பவன் மனத்தில் எந்தப் படைப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தப் படைப்பே உயர்வான படைப்பு. மகத்தான படைப்பு, உயிர் வாழ்வது வெறும் ஏடுகளிலோ ஓலைகளிலோ தாள்களிலோ இல்லை! மக்கள் மனத்திலேதான்! மக்கள் மனத்திலே பதியும் படைப்பு மறைவதில்லை.அதுவே காலத்தை வென்று காலமெல்லாம் நின்று வாழும். குறை ஒன்றும் இல்லாத தமிழிலே இப்படிப்பட்ட படைப்புகள் நிறையவே உண்டு. கம்பனின் காவியமும் அப்படிப்பட்ட படைப்புதான். மக்களின் மனத்திலே மலையாக நின்று நிலைத்து விட்ட படைப்பு. எதிர்ப்பு என்ற சுனாமிகளோ காழ்ப்பு என்னும் ஆழிப் பேரலைகளோ அழிக்க முடியாத படைப்பு ‘கம்பனின் இராமகாதை’. ஓலைகளில் வடிக்கவில்லை கம்பன் தன் காவியத்தை! மக்கள் மனத்திலே அழியா அழகாய்த் தீட்டிவிட்டான் அந்த ஓவியத்தை !

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்கல்லாத கலையும் வேதக்
கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றே!’ என அனுமனைப் பற்றி இராமன் கூறுவான். அச்சொற்கள் கம்பனுக்கும் பொருந்தும்.’Shakespeare was not of an age, but for all time ‘ என்று அவன் நெருங்கிய நண்பன் பென் ஜான்சன் (Preface to the Firdt Folio) கூறுவது நூற்றுக்கு நூறு கம்பனுக்குப் பொருந்தும்.

தன் காவியம் காலத்தை வென்று நிற்கும் அழியாத தமிழ் போலத் தன் தமிழும் அழியாமல் நிற்கும் என்பதைக் கம்பன் ‘என்றுமுள தென் தமிழ்’ என்று குறிப்பாலே உணர்த்திவிட்டான். பெருங் கவிஞர்களின் வாக்கு பொய்ப்பது இல்லை. எனவே, மக்கள் மனத்திலே அரியணை இட்டு அமரந்து விட்ட காரணத்தால் அன்றும் இன்றும் அன்றும் காலத்தை வென்று நிற்கும் கம்பனின் காவியம் என்று சொல்லி உரையை நிறைவு செய்கிறேன்.

                                                                                                                  கம்பன் வாழ்க ! கன்னித் தமிழ் வாழ்க!

 படத்திற்கு நன்றி:

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/index.html

 

பதிவாசிரியரைப் பற்றி

19 thoughts on “‘கம்பனின் காவியம்” ;இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”

  1. பெஞ்சமின் லெபோ கம்பன் பற்றிய வைணவர்களிடையே இருந்த ஒரு வகை மனப்பான்மையையும், அண்ணாதுரை/திக காட்டும் வெறுப்பையும் சமதளத்தில் வைத்துப்பார்ப்பது உசிதமல்ல. வைணவர்களிடையே கம்பன் எப்போதும் நல்ல பெருமையுடந்தார் இருந்தார் , இருக்கிறார். வைணவ உள்பிரச்சினைகள் கம்பனை ஆழ்வார்கள் / திவ்யபிரபந்தம் அளவு ஆன்மீக தளத்தில் வைப்பதா என்றுதான். கம்பன் சில நூற்றாண்டுகள் முன் பிறந்திருந்தால் இன்னொரு அழ்வார்காக வைணவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பான். ஆனால் கம்பன் காலத்தில் வைனவ Canonical Texts ஏற்கெனவே உறுதியாகி விட்டதால், கம்பனின் இராமாவதாரத்தை அங்கு புகுத்த முடியவில்லை, அதைத்தவிர கம்பனும் கம்பராமாயணமும் எல்லா வைணவர்களுக்கும் மிக உவந்ததுதான்.

    கம்பன் மேல் 20ம் நுற்றாண்டு அண்ணாதுரை / திக காட்டும் காழ்ப்பு உண்மையான காழ்ப்பு. அண்ணாதுரையின் காழ்ப்புக்கு 19ம் நூற்றாண்டு Victorian Puritanical Morality ஒரு காரனம். விக்டொரியா காலத்து “தூயவாதம்” படி பெண்கள் / பெண் உறுப்பு / பெண் உணர்வுகள், மனித உறுப்புகள் பற்றி யாரும் பேசக் கூடாது, அப்படி பேசினால் அது ‘ஆபாசம்’ . அந்த மனப்பான்மையை உள்வாங்கிக் கொண்டுதான் அண்ணாதுரை “கம்பரசத்தை” சாடினார், எரிக்கபட வேண்டிய நூல் என்றால். 19ம் நூற்றாண்டின் காலனீய இந்திய வெறுப்பை அண்ணாதுரை முழு அளவிலேயே உள்வாங்கினார், அதன் படி ஆரிய/ திராவிட இனவதங்கள், ஹிந்துமத வெறுப்பு முதலியவை அண்ணாதுரை / திக நோக்கில் உந்துசக்தி.
    இந்த இரண்டு இரு துருவ மனப்பான்மைகளை ஒரே மூச்சில் லெபோ பேசுவது , உகந்ததல்ல. விஜயராகவன்

  2. >>>> சுருங்கச் சொல்லின் வால்மீகத்துக்குத் தரும் ஏற்றத்தைக் கம்பரின் காப்பியத்துக்குத தர மறுக்கும் வீர வைணவர்கள் வையகத்தில் உண்டு. (காண்க : முனைவர் ம. ரா. போ. குருசாமி : ‘கம்பர் முப்பால்’ பக்கம் – 182-183).<<<<

    வான்மீகத்துக்குத் தரும் ஏற்றத்தை வைணவம் வடமொழி நூலான பாகவதத்துக்குக்கூட தரவில்லை; அதற்கு என்ன காரணம் கூறுவார் முனைவர் குருசாமி அவர்கள் ? துறை சார்ந்த வழக்கங்களில் சகட்டு மேனிக்குக் கருத்துச் சொல்வது தவறு

    தேவ்

  3. வன்பாக்கம் திரு விசயராகவன் அவர்களுக்கு
    அன்பு வணக்கம்.
    பின்னூட்டம் என்றால் என்னவென்று கேட்கின்ற
    அன்பர்களுக்கு இடையே என் கட்டுரை பற்றிப்
    பின்னூட்டம் இட்ட தங்கள்
    அன்பினுக்கு அடியேனின் நன்றிகள்.

    தங்கள் கருத்துகளுக்கு எளியேனின் விளக்கங்கள் :
    1 “கம்பன் பற்றிய வைணவர்களிடையே இருந்த ஒரு வகை மனப்பான்மையையும், அண்ணாதுரை/திக காட்டும் வெறுப்பையும் சமதளத்தில் வைத்துப்பார்ப்பது உசிதமல்ல.”
    விளக்கம் :
    – வைணவர்கள் எனப் பொதுவாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
    அடியேன் குறிப்பிட்டது ‘வைதீக வைணவர்களை மட்டுமே!
    ஏனைய வைணவப் பெரியார்கள் கம்பரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்
    என்ற பெரும் பேராசான் மு இராகவ ஐயங்கார் கருத்தைக் குறிப்பிட்டு இருக்கிறேன். அவர் கருத்தில் எனக்கு உடன்பாடே!

    – (வைதீக) வைணவர்கள் மனப்பான்மையையும் அண்ணாதுரை காட்டும் வெறுப்பையும் சமதளத்தில் யான் வைக்கவில்லை. ஒன்றினுக்கு ஒன்றையும் தொடர்பு படுத்தவில்லை. இவ்விரண்டுக்கும் தொடர்பு இல்லை என்பதைக் காட்டுவதற்காகவே, வைதீக வைணவர்கள் கருத்தை ஒரு பத்தியிலும் பெரியார், அண்ணாதுரை போன்றோர் எதிர்ப்பை அடுத்த பத்தியிலும் கொடுத்திருக்கிறேன்.

    – என் கட்டுரையின் மையக் கருத்து : கம்பனுக்குக் காலம் எல்லாம் கடும் எதிர்ப்பு இருந்தது ; அந்த எதிர்ப்பையும் மீறித்தான் கம்பனின் காவியம் நிற்கிறது ; இனியும் காலம் எல்லாம் நிற்கும் என்பதை நிலை நாட்டுவதுதான்.
    மாநாட்டுக்கு மட்டும் அல்ல காவியங்கள் அமர்வுக்கும் தலைமைப் பொறுப்பு ஏற்று இருந்தாலும் மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே அளவு நேரத்தைத்தான் எனக்கும் ஒதுக்கி இருந்தேன் (இருபது நிமிடங்கள்).
    இந்த நேரத்துக்குள் பல கருத்துகளை முன் வைக்க வேண்டி இருந்ததால் கம்பன் காலத்து எதிர்ப்பை முதல் எல்லையாகவும் அண்மைக்காலத்து எதிர்ப்பை இறுதி எல்லையாகவும் வைத்தேன். இருவேறு கால கட்டத்தில் இருவேறு வகை எதிர்ப்புகள் ; எனவே இரு (வகை) எதிர்ப்புகளைச் சமமாகவோ சம தளத்திலோ வைக்கவில்லை என்பது தெளிவு.

    2 “இந்த இரண்டு இரு துருவ மனப்பான்மைகளை ஒரே மூச்சில் லெபோ பேசுவது , உகந்ததல்ல.”

    இவ்விரு கருத்துகளை (மனப்பான்மை என்ற சொல்லை யான் பயன்படுத்தவில்லை) ஒரே தளத்தில் வைக்கவில்லை என்பதற்கான விளக்கத்திலேயே, ஒரே மூச்சில் இவற்றைப் பேசவில்லை எனற பொருளும் பெறப்படும்.

    தங்கள் கருத்துரைக்கு மீண்டும் என் நன்றிகள்
    அன்புடன்
    பெஞ்சமின்

  4. பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி : ‘கம்பர் முப்பாலை’ என்றோ படித்தது. கைவசம் இல்லை. இருவரின் நண்பரான திரு.பெசு.மணி அவர்களால், எனக்கு பேராசிரியருடன் அவரது அறப்பளீஸ்வர விளக்கம் ஒன்றை பற்றி அளவளாவிய வகையில், திரு. தேவ். சுட்டியிருப்பது, ஒரு பரவலான கருத்தை உரைத்தது மட்டும் தான். ஆய்வு அறிக்கை அல்ல. திரு.தேவ். சொல்லாம் ஶ்ரீ பாகவதம் உதாரணம் கூட அந்த வகை தான். எனவே. பேராசிரியர் சகட்டுமேனிக்கு அடித்து விடும் தன்மை அற்றவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  5. அன்பு நண்பர் தேவ அவர்களுக்கு
    வணக்கம்
    தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
    தங்கள் வினாவுக்கு விடை இறுக்க வேண்டியவர்
    தமிழறிஞர் முனைவர் மா ரா போ குருசாமி அவர்கள்.
    அவர் உயிருடன் இல்லை என்று கருதுகிறேன்.
    அவர் கருத்தை மட்டுமே கையாண்டு இருக்கிறேன்.
    அன்புடன்
    பெஞ்சமின்

  6. இந்த பின்னூட்டங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. 
    1. இனிமேல், பொழுது புலர்ந்தவுடன் பிரசுரிக்க, ஆசிரியரின் கையில் ஏற்கனவே சேர்ந்து விட்ட பதிவு ஒன்றில், பேராசிரியர் லெபோ விஜயராகவனுக்கு விளக்கமான பதில் அளிக்கவேண்டும் என கேட்டிருக்கிறேன். அதை ஏற்கனவே படித்த மாதிரி, அவர் பதில் அளித்திருப்பது, வியப்பே.
    2. பேராசிரியர் ம.ரா.பொ.குருசாமி அவர்கள் நம் மரியாதைக்கு உரியவர். மு.வ. அவர்களின் முதற்சீடர்களில் ஒருவர். திரு.வி.க. அவர்களின் வாழ்க்கைச்சரிதையை, சாஹித்ய அகாதமி சார்பில் எழுதியவர். நான் அவருடன் பேசியபோதே, முதியவர். அவர் மறைந்ததாக, நான் செய்தி பார்க்கவில்லை. அவருக்கு பிரதிநிதியாக, தேவ் அவர்களுக்கு நான் பதில் அளிக்க நேர்ந்தது வியப்பை தருகிறது.
    இன்னம்பூரான்

  7. பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய
    பெரியவர் இன்னம்பூரான் அவர்களுக்குப் பணிவு வணக்கம்.
    (எளியேன் சார்பாகத்)
    தாங்கள் விடுத்த விளக்கங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பேராசிரியர், தமிழறிஞர் முனைவர் உயர்திரு மா.ரா.போ குருசாமி அவர்களை
    நேரில் யான் கண்டதில்லை ; அவர் நூல்கள் வழி மட்டுமே அவரை அறிந்தவன்.
    அவர் புலமையில் எளியேனுக்குப் பற்று உண்டு.
    அவர்தம் பேராசிரியர் முனைவர் மு.வ அவர்களிடம்
    ஈராண்டுகள் பாடம் கேட்கும் பேறு பெற்றவன் யான்.
    இது பற்றி ஏற்கனவே ‘வல்லமையில் ‘ எழுதி இருக்கிறேன்.

    படிப்பவர் ஐயங்களுக்கு விடையளிப்பது படைப்பாளிகளின் கடமை.
    அதனைத்தான் யான் நிறைவேற்றினேன்.

    நாடும் நட்புடன்
    பெஞ்சமின்

  8. லெபோ அவர்களே

    தங்கள் விடைகளுக்கு நன்றி.

    ”ஏற்றுக் கொள்வது” சரியான வார்த்தை பிரயோகம் அல்ல என நினைக்கிறேன். அது ஓரளவு பொருள் இல்லாதது. கம்பனின் இராமவதாரம் மீதான விமர்சனம் , விருப்பு /வெறுப்புகள் , மனப்பான்மை போன்றவற்றைதான் அலசுகிறோம்.

    வைதீக வைணவர்களும், மற்ற வைணவர்களும், மற்ற தமிழர்களூம் – 20ம் நூற்றாண்டு திராவிட இயக்கத்தினரை தவிர – கம்பராமாயணத்தை மதிப்போடும், விருப்பத்தோடும் தான் பார்க்கின்றனர். தத்தம் தனது மரபுகளில் எந்த ஸ்தானத்தை கொடுத்தனர் என்பதுதான் கேள்வி. மத புத்தகமாக இல்லாவிட்டாலும், உன்னத இலக்க்கியமாகவும் போற்றத்தக்கதாகவும் பார்க்கின்றனர். அதை நீங்கள் சொல்வதுபோல் ”காலம் எல்லாம் கடும் எதிர்ப்பு ” என சொல்லமுடியாது. இன்னும் சொன்னால் 20ம் நூற்றாண்டுக்கு முன் ”காலம் எல்லாம் கடும் மதிப்பு” என சொல்லலாம்.

    அண்ணாதுரை / திகவும் கம்பனை “ஏற்றுக் கொண்டனர்” – ஆபாச இலக்கியமாக, தமிழர்களை குழப்பவந்த ஆரிய காவியமாக. எதிர்கால திராவிட “சிந்தனையாள்ர்கள்” -அப்படி ஒருவர் இருந்தால்- 19 நூற்றாண்டு விக்டோரிய காலத்து காலனீய தாக்கத்திலிருந்து வெளிபட்டு கம்பனை மாற்று அவதானம் செய்வர் என நம்புவோம்.

    மதிப்புடன்

    வன்பாக்கம் விஜயராகவன்

    (பிகு: என் பேரை திரு வன்பாக்கம் விஜயராகவன் எனலாம் )

  9. பேராசிரியர் லெபோ அவர்களுக்கு, உங்கள் கருத்தில் எனக்கு ஒற்றுமை உண்டு. இருந்தும் கம்பர் கால அளவை இக்கருத்துகள் உறுதியாக சுட்ட இயலுமா.. வீரசோழியம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். உரை எழுதிய பெருந்தேவனார் காலம் பற்றிய அறிய ஆவல்.ஒட்ட கூத்தரின் தனிப்பாடல் ஒன்று கம்பருக்கு இரங்கற்பா பாடுகிறது. அவர் காலத்தில் இருந்தாரா என்பதற்கு இந்தப் பாடல் ஒன்றே ஆதாரமாகக் கொள்ளப்பட்டாலும், அந்தத் தனிப்பாடல் ஒட்டகூத்தர்தான் இயற்றினாரா என்பது தெரியவில்லை..

    மொத்தத்தில் மிக அருமையான கட்டுரை இது

    அன்புடன்
    திவாகர்.

  10. அன்புடை நண்பர்
    வன்பாக்கம் விஜயராகவன் அவர்களுக்கு
    வணக்கம்
    தங்கள் கருத்துகளுக்கு நன்றி.
    கம்பனுக்கு எதிர்ப்பு இருந்தது போலவே காலம் தோறும் ஆதரவும் இருந்தது என்பதையும் என் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்.
    கம்பனின் காவியத்தை இனி எந்தக்
    கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதே என் கட்டுரையின் முடிபு!
    பி கு
    ‘வடவெழுத்தொரீஇ ‘ என்னும் தொல்காப்பியர் அறிவுரைக்கு ஏற்பவும்
    ஜனகனை சனகன் என்றும் ஜடாயுவைச் சடாயு என்றும் எழுதி வழி காட்டிய கம்பனைப் பின்பற்றியும் தங்கள் பெயரில் உள்ள ‘ஜ’ -ஐச் ‘ச’கரமாக்கி எழுதினேன்.
    மேலும்,கிரந்த எழுத்துகளைத் தமிழ் என்றுமே ஏற்றது இல்லை! வேண்டுவோர் பயன்படுத்திக்கொள்க என்றுதான் அவற்றைத் தனியாக ‘ஒதுக்கி’ வைத்தார்கள் தமிழர்கள். தமிழ் நெடுங்கணக்கினுள் நுழைய இன்றுவரை அவற்றுக்கு இசைவளிக்கவில்லையே!
    அடியேனும் தமிழன் ; கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது இல்லை.

    அன்புடன்
    பெஞ்சமின்

  11. திருமிகு திவாகர் ஐயா அவர்களுக்கு
    வணக்கம்.
    என் கட்டுரை கண்டு அதில் ஒற்றுமை கொண்டு
    ‘அருமையான கட்டுரை’ எனப் பாராட்டிய தங்களுக்கு
    என் நன்றிகள் என்றும் உண்டு!

    தங்கள் வினாக்களுக்கு உரிய விடைகள் :
    1
    கட்டுரையின் வட்டத்தில் (scope) கம்பனின் காலம் வரவில்லை ;
    கம்பன் காலத்தைக் கணக்கிடத் தனி இழையும் தனிக் கட்டுரையும் தேவை.
    கம்பன் காலம் பொதுவாகக் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு என்பர் ;
    பன்னிரண்டாம் நூற்றாண்டு என்போரும் உளர்.
    சேக்சுபியர் பற்றி அவர் நண்பர் பென் சான்சன் சொன்னது
    “he was not of an age but for all time”
    (Prefatory Material To The First Folio, 1623)
    கம்பனுக்கு அப்படியே பொருந்தும்.

    2
    ‘உரை எழுதிய பெருந்தேவனார் காலம் பற்றிய அறிய ஆவல்’.
    ‘வீரசோழியம்’ நூலை இயற்றியவர் பொன்பற்றி புத்தமிதிரரர் ; புத்த மதத்தவர்.
    உரையாசிரியர் பெருந்தேவனாரும் அதே மதத்தவர் ; அதே காலத்தவர்.
    இருவரும் பதினொன்றாம் நூற்றாண்டென்று அறிஞர் கருதுவர்.
    இக்கருத்தைத் தம் வாதங்களுள் ஒன்றாக வைப்பர்,
    கம்பர் காலம் 9 -ஆம் நூற்றாண்டே என்போர்.

    3
    ‘ஒட்ட கூத்தரின் தனிப்பாடல் ஒன்று கம்பருக்கு இரங்கற்பா பாடுகிறது’.
    ஒட்டக்கூத்தர் (‘க்’ என ஒற்று மிகுத்து எழுதுவதே மரபு ) மட்டுமல்லர்
    புகழேந்தி, செயங்கொண்டார் ஆகிய புலவர்களும் கம்பனுக்குச் சம காலத்தவர்களே.
    கம்பன் எழுதாமல் விட்ட உத்தர காண்டத்தை எழுதியவர் ஒட்டக்கூத்தரே.

    விரிவஞ்சி மிகச் சுருக்கமாகக் கொடுத்துள்ளேன்.
    அன்புடன்
    பெஞ்சமின்

  12. >>‘ஒட்ட கூத்தரின் தனிப்பாடல் ஒன்று கம்பருக்கு இரங்கற்பா பாடுகிறது’.
    ஒட்டக்கூத்தர் (‘க்’ என ஒற்று மிகுத்து எழுதுவதே மரபு ) மட்டுமல்லர்
    புகழேந்தி, செயங்கொண்டார் ஆகிய புலவர்களும் கம்பனுக்குச் சம காலத்தவர்களே.கம்பன் எழுதாமல் விட்ட உத்தர காண்டத்தை எழுதியவர் ஒட்டக்கூத்தரே.<<

    நன்றி! விவரமாகப் பேசிடல் தேவையென நினைக்கிறேன்.. 

  13. நண்பர் லெபோ
    நன்றி. மற்றவர்கள் பெயர்களை உங்கள் ஐடியலாஜிகல் அடிப்படையில் மாற்றாமல் இருந்தால் சரி. மற்றபடி , இந்த கட்டுரை கருத்துகளை விட்டு க்ரந்தம் பற்றிய விவாதங்களில் ஈடுபடப் போவதில்லை. அதற்கு இன்னொரு இடம்,காலம். விஜயராகவன்

  14. நண்பர் திவாகர் அவர்களுக்கு
    வணக்கம்!
    உங்கள் கருத்தே அடியேன் கருத்தும்.
    விவரமாகவும் விரிவாகவும் பேசிட வேண்டும் ;
    பேசிட விழைகிறேன்.
    வாய்ப்பு வரும் ;
    சந்திப்போம்
    சிந்திப்போம்!
    உளமார்ந்த நன்றிகளுடன்
    பெஞ்சமின்

  15. அன்புடை நண்பர்
    வன்பாக்கம் விஜயராகவன் அவர்களுக்கு
    வணக்கம்
    தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
    இது, கிரந்தம் பற்றி விவாதிக்கத்
    தோன்றிய களமும் அல்ல – அக்கருத்துகளை
    ஊன்றும் நிலமும் அல்ல.
    வேறொரு காலத்தில்
    பிறிதொரு தளத்தில்
    சந்திப்போம்
    வாதிப்போம்
    விவாதிப்போம்
    அன்புடன்
    பெஞ்சமின்

  16. பெரும்நுாலாக எழுத வேண்டிய தலைப்பு
    மேடையில் இருபது நிமிடங்களுக்குள் அளிக்கப்பட்ட கட்டுரை என்பதால் சுருக்கமாக உள்ளது,

    சொல்வேந்தர் சுகி சிவம் அவா்கள் எழுதிய ²கம்பன் அன்றும் இன்றும் என்றும்” என்ற நுாலில் இக்கருத்து விரிவாக எழுதப்பட்டுள்ளது

    தமிழ் மொழியில் வருகின்ற வடமொழி எழுத்துகளை எப்படித் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பதைத் தமிழ் இலக்கண நுால்கள் உரைக்கின்றன

    வடமொழியில் எட்டாம் எழுத்தாகிய ஜ
    “ச” என்ற எழுத்தாகவும்
    “ய” என்ற எழுத்தாகவும் வரும்
    ஜனார்த்தனன் என்பது சனார்த்தனன் என்றும்
    பங்கஜம் என்பது பங்கயம் என்றும் வரும்
    146 முதல் – 149 வரையுள்ள நன்னுால் நுாற்பாக்கள் பார்க்கவும்

    ராமன். ராவணனன் என்பதை
    இராமன்’ இராவணன் என்றே கம்பன் எழுதியுள்ளார்
    தன் காப்பியம் முழுவதிலும் வடஎழுத்துகளை, வடமொழிப் பெயா்களை தமிழாக்கம் செய்தே படைத்துள்ளார்

    கம்பன் கொண்ட தமிழுணா்வைக்
    கண்டு தெளிந்து போற்றிடுவோம்!
    வம்பன் என்று நிற்காமல்
    வண்ணத் தமிழைக் காத்திடுவோம்!
    நம்மின் நெஞ்சுள் தமிழ்ப்பற்றை
    நன்றே பதித்து நலம்பெறுவோம்!
    கொம்பன் என்றே எண்ணாமல்
    கூறு கருத்தை ஆய்ந்திடுக!

    பாவலா் கி.பாரதிதாசன்
    தலைவா்ஃ கம்பன் கழகம் பிரான்சு

  17. மிக்க நன்றி, கவிஞர் அவர்களே!
    அன்புடன்
    பெஞ்சமின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *