சொல்லுங்கண்ணே சொல்லுங்க – ஒரு பார்வை

0

 

மோகன் குமார்

டிவியில் தற்சமயம் வெளிவரும் நிகழ்ச்சிகளில் ஒரு மிக சிறந்த நிகழ்ச்சி ஆதித்யா டிவியில் வெளிவரும் ” சொல்லுங்கண்ணே சொல்லுங்க”. இந்நிகழ்ச்சி பார்க்காதோருக்கு அதை அறிமுக படுத்தவும், ஏற்கனவே பார்ப்போர் நம்முடன் சேர்ந்து ரசிக்கவுமே இப்பதிவு.
சனி மற்றும் ஞாயிறு மதியம் ஒன்று முதல் இரண்டு வரை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். வார நாட்களில் இரவு ஒன்பது முதல் பத்து வரை ஏற்கனவே வந்த நிகழ்ச்சிகள் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது. நாங்கள் அநேகமாய் இதனை பார்க்க தவறுவதே இல்லை.

ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என அனைவரையும் சிரிக்க வைத்து விடும் இந்நிகழ்ச்சி.
நிகழ்ச்சி நடத்தும் இமானின்  திருநெல்வேலி தமிழ். கேட்கவே மிக இனிமையாக இருக்கும். வெள்ளை வேஷ்டியுடன் இவர் போடும் கலர் கலரான சட்டை ஜூப்பரு ! சில வார்த்தைகளை இவர் உச்சரிப்பது இன்னும் காமெடியாய் இருக்கும். உதாரணமாய் பிரதமரை “Biரதமர் ” என்பார். (நம்ம கேப்டன் மாதிரி!)
பொது அறிவு கேள்விகளை சாலைகளில் உள்ள மக்க்களை பிடித்து கேட்கிறார் இமான். அவர்கள் சொல்லும் பதிலும், அதற்கு இமான் கொடுக்கும் கவுண்டரும் சிரிச்சு மாளாது.

உதாரணத்துக்கு :
” சில தலைவர்களோட அடைமொழி சொல்றேன் அவங்க யாருன்னு கண்டுபிடிங்க” என சொல்லிவிட்டு இமான் கேட்ட கேள்விகளும் பதிலும்.
“புரட்சி கவிஞர்னா யாரும்மா?” – இமான்
” வைரமுத்து “
“எலேய் .. வைரமுத்து புரட்சி கவிஞரா? நல்லா தெரியுமா?”
“ம்ம்”
” சரி. வைக்கம் வீரர்னா யாரு”
“காமராஜர்”
” அவரு வைக்கம் வீரரா? பாப்பா.. நீ நல்லா வருவே”
***
இன்னொருவரிடம் ” புரட்சி கவிஞர் யாருங்க?”
” பாரதியார்”
“பெருந்தலைவர்னா அது யாரு?”
“கலைஞர்”
“அட. கலைஞரை தான் பெருந்தலைவர்னு சொல்லுவோமா? சரி வைக்கம் வீரர் யாரு “
” காந்தி”
“வைக்கம் வீரர் காந்தியா? நீ எம். ஏ படிச்சிருக்க இல்ல? நீ சொன்னா சரியா தான் இருக்கும்.”
****
இன்னொரு நபரிடம் அதே கேள்விகள் ” “புரட்சி கவிஞர் என்று யாரை சொல்லுவோம்?”
” கண்ணதாசன்”
“வைக்கம் வீரர் யாரு?
“வைகோ “
“எல்லாரும் நல்லா கேட்டுகிடுங்க வைக்கம் வீரருன்னா அது வைகோ”
****

ஒவ்வொரு பதிலும் சொன்ன பின் இமான் கொடுக்கிற கமன்ட் மற்றும் முகபாவம் அங்கு சுற்றி நிற்கும் அனைவரையும், டிவியில் பார்க்கும் நம்மையும் சிரிக்க வைத்து விடுகிறது.

பெரும்பாலும் பொது அறிவு கேள்விகள் தான் என்றாலும் சில நேரம் கணவன்- மனைவிகளாய் பார்த்து அவர்களிடம் ” உங்க ரெண்டு பேரில் யார் பயந்தாங்கொள்ளி? யார் தைரியசாலி? ” என்றெல்லாம் கேள்வி கேட்டு கலாட்டா செய்வார்.

நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரே காரணம்- நிகழ்ச்சி நடத்தும் இமான். செம நகைச்சுவை உணர்வு மனுஷனுக்கு ! பின்னி எடுத்துடுறார் !
சில கேள்விகள் மிக எளிதாக, இதற்கு போய் மக்களுக்கு பதில் தெரியலையா என்கிற ரீதியில் இருக்கும். இன்னும் சில கடினமாய் இருக்கும்.
ஒவ்வொரு நாள் நிகழ்ச்சி முடிவில் Bloopers போல நிகழ்ச்சி படம்மாக்கும் போது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள் காட்டுவார்கள்.

நிகழ்ச்சியில் நான் விரும்பும் மாற்றம் ஒன்றே ஒன்று தான். நிகழ்ச்சியில் பலரிடமும் கேள்வியை கேட்ட பிறகு அந்த கேள்விக்கான சரியான பதில் சொல்லும் ஒருவரை கடைசியாகவோ, அல்லது நடத்தும் இமானோ சரியான பதில் சொன்னால், பொது அறிவும் நமக்கு டெவலப் ஆன மாதிரி இருக்கும்.
சொல்லுங்கண்ணே சொல்லுங்க -பாருங்கண்ணே பாருங்க !
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.