சிரிக்கச் சிரிக்க கீதை – பகுதி 4

0

ஹாஹோ

“திருதராஷ்ட்டிரன், ‘போர்க்களத்தில் என்ன நடந்தது?’, என்று கேட்டது போரின் முதல் நாளில் அல்ல! அது போர் நடந்து பத்து நாள் முடிவில் கேட்கப்பட்ட கேள்வி”, என்றார் ஹாஹோ.

“அப்படியென்றால் போர் ஆரம்பித்து பத்தாவது நாள்தான் கீதாவுபதேசம் நடந்ததா?”, என்று கேட்டார் அவசரகுமார்.

“போர் ஆரம்பமாவதற்கு முன்பேயே பகவத்கீதை உபதேசிக்கப்பட்டு விட்டது என்பது எனக்குத் தெரியும், ஆனால் திருதராஷ்டிரன் பத்தாவது நாளில்தான் இந்தக் கேள்வியைக் கேட்டான் என்ற செய்தியை இதுவரை நான் அறிந்திருக்கவில்லை, ஹாஹோ, அது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்”, என்றார் பேரறிவு.

“ஏன் எல்லாருமாக சேர்ந்து இப்படிக் குழப்புகிறீர்கள், படித்த பண்டிதர்களுக்கே கீதை குழப்பம்; படிக்காதவர்களுக்குக் கேட்கவே வேண்டாம்; ஹாஹோ நீங்களும் எங்களை ஏன் இப்படிக் குழப்புகிறீர்கள்?”, என்றாள் சாதாரணீ.

“ஆமாம் ஆமாம்.. மிகவும் குழப்பமாக இருக்கிறது”, என்றார் ஆமாம்பிரபு.

“சாதரணீ இதுலே குழப்பம் எதுவும் இல்லையம்மா, தமிழில்தானே சொல்கிறார், குழப்பும் விஷயங்களை ஒவ்வொன்றாகக் கேளேன், விளக்கிவிட்டுப் போகிறார் ஹாஹோ”, என்றார் நடுவு.

“அப்புடீன்னாக்க இதுக்கு பதில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா சொல்லுங்க, கீதை யுத்தத்தின் முதல்நாள் நடந்ததா, பத்தாவது நாளா?”, இப்படிக் கேட்டார் நாத்திக்சாமி.

“அட! கீதையானது போர் ஆரம்பமான அன்றே அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டு விட்டது. ஆனால் திருதராஷ்ட்டிரர் சஞ்சயனிடத்து கேட்பது பத்து நாள் போர் முடிவிலேதான். அதாவது பத்தாம் நாள் போரிலே பீஷ்மர் அர்ஜுனனால் அம்புப் படுக்கையில் கிடத்தப் படுகிறார். அது தீராத சோகத்தைத் திருதராஷ்ட்டிரருக்கு ஏற்படுத்தி விடுகிறது. ‘போர் ஆரம்பம் முதல் என்ன நடந்தது என்பதை உனது விசேஷ சக்தியைப் பயன்படுத்தி எனக்குச் சொல்’, என சஞ்சயனிடத்தில் கேட்கிறார் . அதனால்தான் திருதராஷ்டிரர், ‘தர்மபூமியாகிய குருசேத்திரத்தில் கூடி நின்ற என்னவர்களும், பாண்டவர்களும் (பத்து நாட்கள் முன்பு) என்ன செய்தார்கள் சஞ்சயா?’, எனக் கேட்கிறார். இப்போது புரிகிறதா சாதாரணீ?”, என்று கேட்டார் ஹாஹோ.

“நல்ல வேளை, அவர் அப்படித் திரும்பக் கேட்காமல் போயிருந்தால் நமக்கு இந்த அற்புதக் கீதையே கிடைக்காமல் போயிருக்கும் அல்லவா?”, என்றார் சமூகன்.

“ஆமாம் .. ஆமாம்..கிடைக்காமலே போயிருக்கும்!”, என்றார் ஆமாம்பிரபு.

“அதான் கெடைச்சுடிச்சில்ல, சட்டுனு அடுத்த ஸ்லோகத்துக்கு போங்களேன்!”, என்று அவசரப் படுத்தினார் அவசரகுமார்.

“பாண்டவர்களுடைய படையைப் பார்த்து விட்டு படைத்தளபதி துரோணாச்சாரியாரிடம் ராஜா துரியோதனன் இப்படிக் கூறலானான், இது இரண்டாவது ஸ்லோகம். துரியோதனனின் குரு துரோணர், ஆனால் இப்போது அவர்கள் குரு சிஷ்யராக இருக்கவில்லை. துரியோதனன் ராஜா, துரோணர் படைத் தளபதி அவ்வளவே! அதாவது இங்கு படையை நடத்திச் செல்ல, போர்த்திட்டங்கள் வகுக்க அதைச் செயல்படுத்த துரோணனருக்கு அதிகாரம் உண்டே தவிர இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் துரியோதனனுக்கே, என்று வலியுறுத்தவே ராஜா துரியோதனன் என்கிறார்”, இப்படிச் சொன்னார் ஹாஹோ.

“அப்புடின்னா சிஷ்யனா இருந்தப்ப எடுத்த ட்ரில்லுக்கெல்லாம், வட்டியும் முதலுமாச் சேர்த்து துரோணரை இப்போ ட்ரில் எடுக்கலாம் துரியோதனன்!”, என்று சொல்லிவிட்டு உரத்த குரலில் சிரித்தது தமாசு.

“துரோணர் தன்னோட பெரிய தாடியோட போர்க்களத்துல தோப்புக் கரணம் போட்டா தமாஷா இருக்குமில்ல?”, என்றான் மக்கான்.

“நம்ம ஹாஹோ கூட பெரிய தாடியோட இருகார், உனக்கு ஆசையா இருந்தா அவரை தோப்புக் கரணம் போடச்சொல்லேன்”, என்றது தமாசு மக்கானைப் பார்த்து.

“எதுக்கு தேவையில்லாமல் என் தலையை உருட்டுகிறீகள்?”, என்று கேட்டார் ஹாஹோ.

“உங்கள் தலையை எங்கே உருட்டினோம், தாடியை அல்லவா உருட்டினோம்!”, என்றது சிரித்துக் கொண்டே தமாசு.

“எனக்கு ஒரு சந்தேகம், உங்கள் கருத்துப் படி, கிருஷ்ணர் பகவத் கீதையை போர்த்தேரிலேர்ந்தே உபதேசித்தாரா, கீழே இறங்கி வந்து உபதேசித்தாரா?”, எனக் கேள்விக் கணையை விடுத்தார் நாத்திக் சாமி.

“இப்படித் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு நம்ம எல்லாரோட நேரத்தையும் வீணடிக்கிறதே, நாத்திக்கின் பொழப்பாப் போச்சி”, என்று சற்று உரத்த குரலில் சொன்னார் பேரறிவு.

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி: http://spiritualguidedmeditation.com/mind-body-spirit/shrimad-bhagavad-gita-retreat-with-gurumaa.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *