சிந்துபாத்தும், கிழவனும்!

1

 

பவள சங்கரி

தலையங்கம்

 புதிய நிதி அமைச்சரின் வழிகாட்டுதலில் நமது பொருளாதாரம் சிறந்த இடத்தைப் பிடிக்குமா? சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு இன்றைய சூழலில் தேவையா? முடங்கிப்போயுள்ள  மின்துறை, பொருளாதாரத்தை பின்னிழுத்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில் டீசலுக்கு, லிட்டருக்கு ரூ5  விலையேற்றம் நியாயமா? 12 முதல் 14 மணி நேரம் மின்சாரம் இல்லாத  இந்தச் சூழலில் தொழிலகங்கள், தங்களின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கு டீசலை நம்பியிருக்கும் காலகட்டத்தில் இந்த விலையேற்றம் சரியானதா  ஏற்றுமதியாளர்களுக்கு இந்தச் சுமை பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தாதா? உதாரணத்திற்கு, ஏற்றுமதிக்கான ஒரு ஆடை தயாரிப்பதற்கான செலவாக ரூ 100 என்ற கணக்கில் ஒப்பந்தம் போட்டதாகக் கொண்டால்,. மின்சாரப் பற்றாக்குறையால் குறைந்த உற்பத்திக்கு தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். அதோடு சேர்த்து  மின் உற்பத்திக்கான டீசல் செலவும் அதிகமாகும்போது தயாரிப்புச் செலவே ரூ110 ஆகிவிடுகிறது. இதனால் ஏற்றுமதியாளருக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். இதை நம்முடைய நிதியமைச்சர் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இதேபோல் அனைத்துத் தொழில்களும் முடங்கிப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கக்கூடும்

பொருளாதார வல்லுநரான நம் பாரதப் பிரதமர் மரத்திலா டாலர் காய்க்கும் என்கிறார்.. அன்னிய செலாவணி அவசியம் தேவை என்கிறார்..  சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு செய்வதனால்  பொது மக்களுக்கு பெரிய இலாபம் எதிர்பார்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மக்கள் தொகை குறைவாக உள்ள ஒரு சில நாடுகளுக்கு வேண்டுமானால் சங்கிலித்தொடர் கடைகள் சரிப்பட்டு வரலாம். ஆனால் பரந்து, விரிந்து மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டிற்கு இது சரிப்பட்டு வருமா என்பது ஐயப்பாடுதான்.  1000 முதலாளிகளை அழித்து ஒரு முதலாளியை உருவாக்குவதற்கு அரசு ஏன் பாடுபட வேண்டும். இலண்டன் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவழியைச் சார்ந்த பாரளுமன்ற உறுப்பினர் இந்தத் திட்டம் தம் தொகுதியில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியதாக கூறியுள்ளதையும் நாம் கருத்தில் கொளள வேண்டும். இளம் வயதில் படித்த சிந்துபாத்தும் கிழவனும் கதைதான் நினைவிற்கு வருகிறது.. நாளை இந்த அன்னிய முதலீட்டாளர்கள் நம் தோளின் மீது உட்கார்ந்து கொண்டு நம் கழுத்தை நெறிக்கும் போது அதற்கு என்ன தீர்வை ஆட்சியாளர்கள் வைத்துள்ளார்கள் என்பது தெரிந்தாலாவது நிம்மதியாக இருக்க முடியும்.

.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிந்துபாத்தும், கிழவனும்!

  1. இப்படியே போனால் ”தஞ்சைக் கழனிக்கு டான்சானியாவிலிருந்து உரம் வரும்….நம்மூர் விவசாயிகளுக்கு நார்வே நாட்டிலிருந்து நாமக்கட்டி வரும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.