தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப் பதிவு
தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு. 2011 ஏப்ரல் 13 அன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார். பின்னர் அனைத்து மாவட்ட நிலவரமும் வந்த பிறகு, 77.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 1967இல் 76.57 விழுக்காடு பதிவானது. அதன் பிறகு 2011 தேர்தலில்தான் அதைக் காட்டிலும் அதிகமான வாக்குகள் பதிவாகி, தமிழக வாக்காளர்கள் வரலாறு படைத்துள்ளனர். இவ்வளவு அதிகமான வாக்குப் பதிவினை மவுனப் புரட்சி என அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர். அப்போதைய மக்கள் தொகையோடு ஒப்பிட, இப்போதைய மக்கள் தொகை மிக அதிகம். எனவே இவ்வளவு அதிகமான மக்கள் வாக்களித்துள்ளது, தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
மக்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வரிசையில் நின்று வாக்களித்தனர். பல்வேறு தொகுதிகளில் மக்கள் வாக்களித்த காட்சிகள் இங்கே.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்த காட்சி
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் அலுவலர், வாக்காளர்களுக்கு அடையாள மை வைக்கிறார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மூத்த பெண்மணி ஒருவர் ஆர்வத்துடன் வாக்களிக்க வரிசையில் நிற்கிறார்.
சென்னை அண்ணா நகர் தொகுதியில் பெண் வாக்காளர்கள், நீண்ட வரிசையில் வாக்களிக்கக் காத்திருக்கின்றனர்.
செங்கல்பட்டு தொகுதியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்கக் காத்திருக்கின்றனர்.
வாக்காளர் ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் ஊடகங்களும் மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளது.
நடுநிலையான, நெறிமுறைகளுக்கு உட்பட்ட வாக்குப் பதிவை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய தேர்தல் ஆணையம், பாராட்டுக்கு உரியது.
2011 மே 13 அன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.
============================
படங்களுக்கு நன்றி – பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை
75 விழுக்காடு முக்கால் பங்கு; முக்கால் பங்கை முழுதாக மதிப்பிடுவது மிகையல்ல, தேர்தலில். அந்த வரைக்கும் லாபம்.
– வாக்காளர்கள் 4.6 கோடி; அதில் ஒரு கோடிக்கு மேல் இளைஞர்கள் (18 -29); அதில் அடக்கம், கன்னி வாக்காளர்கள்:6.7 லக்ஷம் (19/19); 40 லக்ஷம் (20 -24); 60 லக்ஷம் (25 -29); 1.2 கோடி (30-39) 1 கோடி (40-49); 70 லக்ஷம் (50-59); 40 லக்ஷம் (60 -69); 20 லக்ஷம் (70-79); 5.5 லக்ஷம் (80+).
வாழ்க பொதுஜனம்.
76 சதவீத வாக்குப் பதிவுக்கு தேர்தல் கமிஷனையும்
அசம்பாவிதங்கள் ஏதும் பெரிதாக நடைபெறாததற்கு
அரசியல் கட்சிகளையும் மனமுவந்து பாராட்டலாம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா சட்டசபைத் தேர்தலில்
அதிக வாக்குப்பதிவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒரு புதிய
எழுச்சியைக் காட்டுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவிலும்
அந்த எழுச்சியைக் காணமுடியுமா?
இரா.தீத்தாரப்பன்,இராஜபாளையம்.