அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை!.. 6

0

 

சாகர் 

 

புராதன கைரோ

கோப்டிக் கைரோ (Coptic Cairo) கிருஸ்த்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. மெல்ல நடந்து வரும் போது மஹ்மூத் ஒரு மசூதி, சர்ச் மற்றும் யூதர்கள் கும்பிடும் சைனகோக்(Synagogue) மூன்றும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டி எப்படி மூன்றும் இனத்தினரும் அன்னியோனியமாக வசிக்கின்றனர் இங்கே என்று சுட்டிக்காட்டினார். யூத சமயத்தில் அவதரித்த இயேசு கிறிஸ்து போதித்தது பிற்காலத்தில் கிருஸ்துவ மதம் என்று அவதரித்தது.பின்னர் வந்த முஹம்மத் நபி தோற்றுவித்த இஸ்லாமிய மதம் யூத மற்றும் கிருஸ்துவ சமய போதகர்களையும் துறவிகளையும் கடவுளின் தூதர்கள்(prophets) என்று அங்கீகரித்த போதும் அவர்களுக்கும் எல்லாம் உயர்ந்த தேவதூதர்  நபிகள் என்று நம்புகிறது.  ஒன்றுபட்ட ஆரம்பம் உள்ள இந்த சமயங்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளினால் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் ரத்த ஆறு ஓடியதும் உண்மை.

மஹ்மூத் பெருமையாக இதை சொன்னாலும் எகிப்தும் இஸ்ரேலுடன் பலமுறை போர் செய்ததும் சரித்திரம் தான். இன்றும் எந்த நேரம் போர் மூளும் ஒரு சூழ்நிலை உள்ள பிரதேசம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஸ்துவமதம் எகிப்திற்கு வந்தது அந்த மதம் தோன்றுவதற்கு முன்பே என்பது குறிப்பிடத்தக்கது. ஏரோது(Herod) மன்னரின் கட்டளையின் பேரில் யூதர்களின் அரசன் என்று நம்பப்பட்ட குழந்தை இயேசுவை காப்பாற்ற ஜோசப்பும் மேரியும் தப்பி ஓடி ஓளிந்த இடம் எகிப்து தான். எகிப்து ஏரோதின் ஆதிக்கத்தில் இல்லாத நாடு என்றாலும் அது ரோமானிய சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதி என்பதால் அவர்களால் தடை இன்றி தப்பிக்க முடிந்தது. மேரி ஜோசப் மற்றும் குழந்தை ஏசு அவர்கள் தங்கியதாக ஒரு இடம் இன்றும் கோப்டிக் கைரோவில் உள்ளது. அப்படி தப்பி ஓடிய குழந்தைதான் பின்நாளில் ஏசுவாக வாழ்து போதித்தது தான் கிருஸ்துவ மதம். அவரது சீடர்களில் ஒருவரான புனித மார்க்(St Mark) இந்த மதத்தை எகிப்திற்கு போதித்தார்.

எங்களை முதலில் கைரோவின் மிக பழமையான சர்ச்சிற்கு அழைத்து சென்றார். இந்த கோவிலுக்கு தொங்கும் சர்ச்(HangingChurch) என்று ஒரு பெயர் உண்டு.

இன்றைய கோப்டிக் கைரோ பெர்சிய மன்னர்களால் தங்கள் பெருமை வாய்ந்த நகரான பாபிலோன் (Babylon) நகரத்தை நினைவாக பாபிலோன் என்ற நகைரை நிறுவினர். பின்னர் அங்கே அரசாண்ட ரோமானியர் அங்கே ஒரு கோட்டையும் கட்டி அரசாண்டார்கள். பண்டை ரோமானியர் கட்டிய பாபிலோன் கோட்டை மதில்களில் மேல் கட்டப்பட்டது இந்த சர்ச். அடித்தளம் இல்லாமல் தொங்குவது போல அமைக்கப்பட்டது என்பதால் இந்த பெயர். ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சர்ச் 29 படிகளை கொண்ட இந்த சர்ச்சை படிகோயில் என்றும் அழைத்தனர். இந்த இடத்தில மூன்றாம் நூற்றாண்டில் சிறிய சர்ச் இருந்ததாக நம்பப்படுகிறது. கட்டிய காலத்திற்கும் இன்றைக்கும் பூமியளவு ஆறடி உயர்துள்ளமையால் இன்று பாபிலோன் கோட்டை மண்ணிற்கு கீழே தான் உள்ளது. சில இடங்களில் இருந்து பார்த்தால் அந்த கோட்டை சுவர்கள் இன்றும் சர்ச்சிற்கு கீழே உள்ளது தெரிகிறது.

கிழக்கு ஆர்த்தோடாக்ஸ்(orthodox) கிருத்துவ வகுப்பினரான கோப்டிக் கிருஸ்துவ அமைப்பின் தலைமை தளமாகவும்  ஆர்த்தோடாக்ஸ் கிருத்துவ போபாண்டவரின் ஜாகையகம் இந்த சர்ச் திகழ்ந்தது.

மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த சர்ச்சின் சிறப்பம்சங்கள் கருமையான எபோனி மரம்(Ebony) மற்றும் யானைத்தந்தங்களால் செய்யப்பட்டவேலைப்பாடுகள்.  மேலும் இங்கு உள்ள ஒரு புனித மேரியின் ஓவியம் எகிப்திய மோனலிசா என்ற சிறப்புப்பெற்றது. நாம் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் இந்த மேரி ஓவியம் நம்மை பார்ப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுத்தும். ஓவியத்தை பார்த்தவாறு நாம் நகர்ந்தாலும் இதே உணர்வு தோன்றுவது இதன் சிறப்பு.

அடுத்து சர்ச்சின் பக்கத்தில் உள்ள ஒரு யூதர் வழிபாடுதளமான பெண் எஸ்ரா (Ben Ezra) சைனகாகிற்கு சென்றோம். இந்த சைனகாக் பாலஸ்தீனர்களின் சைனகாக் என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தை மோசஸ் இந்த இடத்தில தான் எகிப்திய ராணியால் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு வரலாறு நிலவுகிறது.

சிறியதாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்தது. யூதர் இஸ்லாமிய பாணியில் உள்ளே சிலைகள் எதுவும் இல்லை. இந்த கோவிலை சுற்றிபார்க்க கால்மணிநேரம் போதுமானதாக இருந்தது.

அடித்து கைரோவின் புகழ் பெற்ற முகம்மது அலி மசூதி நோக்கி சென்றோம். கைரோவிர்க்கு ஆயிரம் மசூதி கோபுரங்கள் கொண்ட நகரம்(City of 1000 minarets) என்ற பட்டபெயர் உண்டு. எந்த திசையில் பார்த்தாலும் மசூதி கோபுரங்களுள் மினாரெட்ட்டுகளும் கண்ணை கவரும்.

கைரோ சிட்டாடல்(Citadel) எனப்படும் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த பெரிய மசூதி முஹம்மத் அலி பாஷா எனப்படும் ஒட்டமன் அரசர்  மகனின் நினைவாக கட்டியது. இவர் துருக்க வம்ச்சதினர் என்பதால் இஸ்தான்புல்லில்(Istambul) உள்ள ஏணி(Yeni) மசூதியை போல வடிவமைத்தார்.1857 வருடம் கட்டிமுடித்தபோது இதுதான் பத்தொம்பதான் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய மசூதி.

சுண்ணாம்பு கற்களால்(Limestone) கட்டப்பட்ட இந்த மசூதி அலபாச்டர் (Alabaster)பளிங்கினால் அலங்கரிக்க பட்டது. உள்ளே நுழையும் முன் பெண்கள் தலையில் மூடும் பழக்கம் துருக்கியை போலவே இங்கும் நிலவியது. நன்று அலங்கரிக்கப்பட்ட குவிந்த கூரை (Dome) மற்றும் நான்கு சிறிய மண்டபக்கூரைகளும் கொண்டதாக அமைக்கபட்டிருந்தது.

வடமேற்கு பகுதியில் ஒரு அழகிய பித்தளை மணிக்கூண்டு (brass clock tower)அமைந்திருந்தது. லக்சோர் ஒபெளிச்க்(Luxor Obelisk) ஒன்றை முஹம்மத் அலி பிரான்சு அரசருக்கு பரிசளித்தாராம். இந்த கடிகாரம் முஹம்மத் அலிக்கு பிரான்சு அரசர் லூயிஸ் பிலிப்(Louis Philip) தந்த மாற்று பரிசாம். லக்சோர் ஒபெளிச்க் இன்றும் பாரிஸ் நகரத்தில் பிளேஸ் டி ல கண்க்கார்டில் உள்ளது(Place de la Concorde).

முஹம்மத் அலி மசூதியை பார்த்து முடித்து மீண்டும் வண்டியில் ஏறி கைரோ அருங்காட்சியகத்திற்கு சென்றோம். கைரோ அருங்காட்சியகம் ஒரு எகிப்திய கலாச்சாரத்தின் கடல். தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தில் கண்டெடுக்கபட்டவை பெரும்பாலானவை இதில் உள்ளது. மற்றவை பாரிஸில் உள்ள லூவ்ரு(Louvre) அருங்காட்சியகம் மற்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

சிறிது நேர பயணமுடிவில் தாஹ்ரிர் சதுக்கத்தை அடைந்தோம்.  இந்த சதுக்கத்தில் தான் எகிப்திய புரட்சியின் பொது மக்கள் கூடி கிராசி செய்தனர். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நடந்த கைகலப்புகள் இங்கே அதிக்கம் அரங்கேறியது. புரட்சியின் பொது அருங்காட்சியகம் தாக்கப்பட்டது என்றும் அப்போது இரண்டு மம்மிகள் மற்றும் பல தொல்பொருள்கள் சிதலமடைந்தன என்று மஹ்மூத் குறிப்பிட்டார்.

மேலும் பக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தை சுட்டிக்காட்டி அது முன்னால் அதிபர் முபாரக்கின் அலுவலங்களில் ஒன்று என்றும் புரட்சியின் பொது கோபமடைந்த மக்கள் அதனை கொளுத்திவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.இன்றும் புகைப் படிந்து சிதலமடைந்த நிலையில் இருந்தது அந்த கட்டிடம்.

மேலும் எகிப்திய அரசாங்கம் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தொல் பொருட்களை கீஸாவில் புதிதாக கட்டப்படும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இன்னும் சில வருடங்களில் கொண்டு செல்வதாக திட்டம் என்றும் கூறினார்.

நான்காயிர வருட வரலாறு மற்றும் தொல்பொருட்களை பார்க்கும் ஆர்வத்தோடு உள்ளே சென்றோம்.

தொடரும்…….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *