வெறியென்றால் இப்படியா?

2

விசாலம்

cats“மியாவ் மியாவ்” என் வீட்டுக் கதவின் பின்னாலிருந்து அழகான சத்தம்.

அந்த “மியாவ் மியாவ்” பூனைக் குட்டிகளின் இனிய குரல் என்னைக் கதவைத் திறந்து பார்க்கச் செய்தது. மெல்ல கதவைத் திறந்தவுடன் கண்ணிற்பட்டது ஒரு அழகான காட்சி. தாய்ப்பூனை தன் குட்டிகளை நக்கிக் கொடுக்க, மற்ற குட்டிகள் பால் குடித்துக்கொண்டிருந்தன.  “சாம்பல் நிறம் ஒரு குட்டி, வெள்ளைச் சாந்து நிறம் ஒரு குட்டி” என்று அழகோ அழகு.

நான் ஒரு அகண்ட பாத்திரத்தில் பால் எடுத்து வந்தேன். அம்மா. தாய்ப் பூனைக்கு பயம். அது சும்மா விடுமா? புலிப்போல் என்னைப் பார்த்து சீறியது, என்ன பாதுகாப்பு! என்ன பாசம்! அம்மா என்ற சொல்லே பாசம் தானோ?

எல்லாக் குட்டிகளும் பயந்து தன் அம்மாவிடம் அடைக்கலம் புக, ஒன்று வாலின் பக்கம் போய் ஒளிய, மற்றொன்று முதுகின் பின் ஒளிந்து என்னை ஓரக்கண்ணால் பார்த்த பார்வை, என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது.
அதில் ஒரு குறும்புக்காரக் குட்டி. கறுப்பும் வெள்ளையும் கலந்த அழகு, என் முன்னால் வந்து என் புடவையின் கீழ்ப் பாகத்தை நகத்தால் இழுத்தது, பின் கீறியது. எனக்கு அதை மிகவும் பிடித்துப்போனது. அது என் குழந்தை ஆகிவிட்டது. பிரிக்க முடியாத ஒரு பந்தம்…….

நாட்கள் ஓடின. இப்போது நானும் அந்தக் குட்டியும் ரொம்ப நெருக்கம் ஆகிவிட்டோம். அதன் பெயர் “தக்காளி” என்று வைத்தேன். அது என்ன வேடிக்கையான பெயர்? ஆம், அது ஒரு நாள், தக்காளிப் பழத்தைப் பந்தாடி நசுக்கிவிட்டது. அன்றைய தினமே பெயர் சூட்டு விழாவும் நடந்தது. நான் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன். அதன் அம்மாவுக்கும் என் மேல் நம்பிக்கை ஏற்பட்டது. இப்போது என்னுடன் பழக ஆரம்பித்தது. எல்லாக் குட்டிகளுக்கும் படுக்கை அறை என் வீட்டு மொட்டை மாடிதான்.

ஒரு நாள் இரவு, நான் சற்று கண் அயர்ந்தேன். அப்போது கேட்டது ஒரு பயங்கரமான சத்தம்.

ஒரு பெரிய கடுவன் பூனை கத்த, அதற்கு பதில் அந்தப் பெண் பூனைக் கொடுக்க… என்னவாயிருக்கும்! எனக்கு மொழி புரியவில்லையே!    ஆனால் என்ன என்று ஊகித்துக் கொண்டேன்.

மேலே மாடியில் செடி வைத்த மண் சட்டி உருள, கீழே ஒரே மண்…. ஒரே அமர்க்களம்தான். காலையில் போய்ப் பார்த்தேன். மண் சட்டி  உடைந்து கிடந்தது, என் அருமை தக்காளியும் தென்படவில்லை.

மற்ற குட்டிகளும் இல்லை. எங்கே போய்விட்டன? ஒன்றும் புரியவில்லை. ஒரே ஏக்கத்துடன் கீழே வந்தேன். என் கணவரிடம் சொன்னேன். “சனி விட்டது” என்று அவர் சொல்ல, எனக்கு அழுகையே வந்துவிட்டது. நேரே கடவுள் படத்திற்கு முன் வந்து, மனம் உருகப் பிரர்த்தித்தேன் .”என் தக்காளி நல்ல படியாக வந்து சேர அருள வேண்டும் அம்மா.”

காலை மணி 6. “மியாவ்” என்ற சத்தம் தேன் போல் பாய, நான் ஓட்டப் பந்தயப் போட்டியில் ஓடும் பெண்போல் ஓடிக் கதவைத் திறக்க, அங்கு பட்டன் போன்ற கண்களைச் சுழற்றியவாறு “மியாவ்” என்றது என் குட்டி.

“வாடா கண்ணா” என்று அதைத் அள்ள….. ஒரு பாச உணர்வு மின்சாரம் போல் பாய்ந்தது.

என் கணவர் முகம் கோணியது. “சிவசிவா” என அவர் வாய் முணுமுணுத்தது. அவருக்குத் தெரியுமா என் குட்டியைப் பற்றி! “எல்லாம் வியாதி! பூனையின் ஒரு முடி விழுந்தாலே மகாபாபம். ஆஸ்மாவெல்லாம் இதனால் தான் பரவுகிறது”  என்றபடியே வெளியில் போனார். எல்லாவற்றிலும் அன்பைப் பார்க்கும் என் சுபாவம் எப்படி மாறும்?

வந்தது அந்தச் சனிப் பிடித்த நாள். அந்த இரவை மறக்க முடியுமா?

இரவு…. பௌர்ணமி நிலா தன் ஒளியை வீசிக்கொண்டிருந்தது. அந்தக் கடுவன், திரும்பவும் வந்தது. மதில் சுவர் மேல் உட்கார்ந்து, பெண் பூனையை முறைத்துப் பார்த்தது. கூப்பிட்டது

அதன் குரலே தனி தான். அதில் அழகான ‘மியாவ்’ என்ற சத்தமில்லை. மயில் குரல் கொடுக்கும் ஒலிப்போல் வித்தியாசமாக இருந்தது. பெண் பூனைக்கு இஷ்டமில்லை. திரும்பவும்  எதாவது பிரச்சனை வரக் கூடாதே என்று கதவைத் திறந்து “சூ சூ ச்சூ” என்று விரட்டினேன். அந்தக் கடுவனாவது போவதாவது! பதிலுக்கு என்னை முறைத்தது.

பின் அந்தக் கடுவன் ஒரே பாய்ச்சலாக அந்தப் பெண் பூனை மேல் பாய்ந்தது. நான் என் சன்னலைத் திறந்து  திரும்பவும் அதை விரட்டினேன். அது என்னைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றது. “அப்பாடா” என்றபடி நிம்மதியுடன் படுக்கச் சென்றேன்.

காலை ஒரு மூன்று மணி இருக்கும். “மியாவ் ” என்ற அலறல். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆனால் எழுந்திருக்க மனமில்லாமல் காலையில்  பார்த்துக்கொள்ளலாம் என்று தூங்கிவிட்டேன்.

காலை முதல் வேலையாகக் கதவைத் திறந்தேன். ‘வீல்’ என்று அலறியும் விட்டேன்.

நான் பார்த்த அந்தக் கோரக் காட்சி,  அப்பப்பா… சொல்ல முடியவில்லையே.

என் அருமை தக்காளியின்  வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளிவர, இரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் அம்மா, அதைச் சுற்றிச் சுற்றி வந்து நக்கியது….. புரிந்துகொண்டேன். அந்தக் கடுவன் தன் இச்சைப் பூர்த்திக்கு அந்தப் பெண் பூனை இசையாததால் ஏமாற்றம் அடைந்து, வஞ்சனையுடன் குட்டியின் காரணத்தினால் அம்மா பூனை வர மறுக்கிறாள் என்று கோபம் கொண்டு, அதற்குக் காரணமாய் இருந்த குட்டியைக் கிழித்துச் சாக அடித்து விட்டது போல் தோன்றியது.

அழுதபடி நான் அதை ஒரு பழைய துணியில் சுற்றினேன். வெளியில் போட்டால் நாய் கவ்விக்கொண்டுப் போகுமே என்று எம் வீட்டுப் பின்பக்கம் மண்ணில் புதைத்தேன்.

இன்று அதன் மேல் ஒரு தக்காளிச் செடி வளர்ந்துவிட்டது……

==================================

படத்திற்கு நன்றி: http://2.bp.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வெறியென்றால் இப்படியா?

  1. இந்த சோகம் கொடிது. எங்கள் வீட்டில் ஷீலா, ஷீட்டி என்ற பூனைக்குட்டிகள் ராஜ்யம் செய்து வந்தன. ஷீட்டி கொஞ்சம் நோஞ்சான். ஷீலா அழகு பிம்பம். ஒரு வினாடி நேரத்தில், பக்கத்துவீட்டு போலீஸ் அதிகாரியின் அல்ஸேஷியன் நாய், சீட்டியை குதறிவிட்டது. ஐம்பது ஆண்டுகள் கடந்தன. சோகம் நீங்கவில்லை. அது மாதிரி எம்மையெல்லாம் தத்து எடுத்துக்கொண்ட குட்டி என்ற பூனை 14 வருடங்கள் இருந்து, டிக்னிடியுடன் ஒரு நாள் மறைந்தான். இப்போக்கூட, என் பெண்ணின் வீட்டில், குக்கி, பாப்பி, எக்லைர் வலம் வருகிறார்கள்.
    பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *