சக்தி சக்திதாசன்

 

vaali

clip_image002

 

 

 

 

 

 

 

 

அன்பினியவர்களே !

துயரம் தோய்ந்த உள்ளத்துடன் , எழுதும் இந்த விரல்கள் முக்கியமான் ஒரு வலுவை இழந்து போன்ற ஒரு கனத்த இதயத்தின் சுமையைத் தாங்கிய நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகின்றேன்.

“வாலி”பத்தின் முக்குயமான பகுதியத் தன் பெயரில் கொண்டிருந்ததினால் அவர் என்றுமே எங்களுடன் வாலிபக் கவிஞனாக இருந்து விடுவார் என்று நம்பிக் கொண்டிருந்தோம் போலிருக்கிறது. காலப்புத்தகத்தில் கடைசி அத்தியாயத்தை அனைவர்க்கும் எழுதும் ஒரு மாபெரும், மறைக்க முடியா எழுத்தாளன் காலன் எம் அன்புக்குரிய வலிபக் கவிஞர் வாலியின் வாழ்க்கைப் புத்தகத்திலும் கடைசி அத்தியாயத்தை எழுதி விட்டான்.

என்ன செய்வது ? தமிழுலகம் ஒரு உன்னதப் படைப்பாளனை இழந்து விட்டது. தமிழ்த் திரையுலகம் நான்கு தலைமுறைகளுக்கு பாடல்கள் தந்த ஒரு வித்தக பாடலாசிரியனை இழந்து விட்டது.

நானோ ?

எப்போதும் தப்பாமல் என்னைத் தட்டிக் கொடுத்து நேசமிகு நல்ல பல கணங்களை எனக்குக் கொடுத்த ஒரு பாசமிகு குருநாதனை இழந்து விட்டேன்.

ரங்கநாதன் எனும் இந்த ஸ்ரீரங்கம் தந்த ஒப்பர்ர ஒரு கவிஞனை , இலக்கிய வித்தகனை, தமிழை நேசித்தவனை நாம் இழந்து விட்டோம்.

என் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசனை அவர் வாழும் நாளில் நான் சந்திக்க முடியாமல் போய் விட்டதே எனும் ஆதங்கம் எப்போதும் என் மனதினுள் அழப்பதிந்து உறுத்திக் கொண்டே இருக்கிறது.

அப்படியில்லாமல் என்னைக் கவர்ந்த இன் இனிய கவிஞர் வாலியை நான் என் வாழ்நாளில் நான் சந்தித்து விட வேண்டும் எனும் இலக்கிய தாகமே எம் சந்திப்புக்கு வித்திட்டது.

அப்போது நான் தோழி நிர்மலாவின் “நிலாச்சாரல்” இணையத் தளத்தில் ஓய்வற்று எழுதிக் கொண்டிருந்த நேரம் .

“ சக்தி தமிழக இலக்கியப் பிரபலங்களுடனான ஒரு நேர்காணல் தொடரை நீங்கள் எமக்காகத் தந்தால் என்ன ? “ என்று தோழி சிறு பொறியைத் தட்டி விட அது ஒரு அழகிய தொடராக ஒளியேற்றியது.

எனது நீண்டநாள் மனவோசையான “கவிஞர் வாலியுடனான சந்திப்பு” என்பதற்கு இவ்நேர்காணல் ஒரு வழிகோல் சமைத்தது என்பதுவே உண்மை.

ஆனால் அச்சந்திப்பு ஒரு ஊடகத்திற்கான நேர்காணல் சந்திப்பு என்பதை விட என் உளம் நிறைந்த “கவிஞர் வாலியுடன்” ஒரு ஒப்பற்ற நீண்டநாள் உறவுக்கு வழி சமைத்தது என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது.

அவ்வுறவு நட்பு அல்ல அதைத் தாண்டிய ஒரு “குரு சிஷ்ய” பக்தி என்றே சொல்ல வேண்டும். கவினர் வாலி என்பவரைப் பற்றி அதுவரை ஊடகங்களினூடாக அறிந்தவைகள் ஏராளம். ஆனால் அவருடனான நேர்ச் சந்திப்பு என்னுள் அவரிப்பற்ரி இருந்த மதிப்பை மென்மேலும் பன்மடங்கு உயர்த்தியது .

“உண்மை , நேர்மை, உழைப்பு ” என்பனவற்றிற்கு கவிஞர் வாலி ஜயா கொடுத்த முக்கியத்துவம் உண்மையிலேயே என்னைச் சிலிர்க்க வைத்தது.

இத்தகைய ஒரு உன்னத கவிஞன் அனைத்திற்கும் மேலாக ஒரு உத்தம மனிதன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதுவே எனக்குப் பெருமை,/ இ,ம் மாபெரும் கவிஞன் வலம் வந்த மண்ணிலே நானும் என் கால் பத்தித்திருக்கிறேன் என்பதுவே என் வாழ்வில் எனக்குப் பெருமை சேர்க்கும் விடயம்.

ஒரு சாதாரண் ஈழத்தமிழன் புலம் பெயர்ந்து இங்கிலாந்திலே வாழ்பவன் ஏதோ கொஞ்சம் எழுத்திலே மோகம் கொண்டிருப்பவன் என்று எதையுமே கணக்கிலெடுக்காமல் என்னை மிகவும் அன்பாக உபசரித்த அந்த மனிதாபிமானம் மிக்க கவிஞர் வாலி வானளாவும் வகை உயர்ந்தவர் என்பதுவே உண்மை.

அந்நாட்களில் கைகளினால் எழுதும் பிரதி போல கணனி மூலம் நான் தயாரிக்கும் “தமிழ்ப்பூங்கா” எனும் இதழைப் பார்த்து எனக்கு ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளைத் தந்தலிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முன்னர் வரை எப்போது நான் தமிழகம் வரும்போதும் நேரடியாகவும், இங்கிலாந்திலிருந்து தொலைபேசி வழியாகவும் தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்து வந்த ஒரு உயர்ந்த இலக்கியச் சிற்பியின் இழப்பு என்னைத் துயரத்திலாழ்த்துகிறது..

இவரைப் பற்றி பல செய்திகளை நான் உங்களுடன் இம்மடலின் மூலம் இனிவரும் காலங்களில் பகிர்ந்து கொள்வது நான் செய்ய வேண்டிய காலத்தின் கடமை என்றே கொள்கிறேன்.

இம்மடலின் முடிவில் அவருடைய இரண்டு சிறிய ஆரம்பக் கவிதைகளை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

அவர் பள்ளியில் படிக்கும் போது அவரின் “வாலி” எனும் புனைப்பெயரைக் கண்டு “வாலில்லையே உனக்கு பின் எப்படி வாலி என்று . . . . “ பரிகசித்த ஆசிரியருக்கு

காலில்லை என்பதால்

காடிகாரம் ஓடாதா ?

வாலில்லை என்பதால்

வாலியாக முடியாதா ? என்று இன்பத் தமிழாலே பதிலடி கொடுத்தாராம்

இதோ என்ன்னைப் போன்றவர்களுக்கு அவர் தரும் ஊட்டச் சத்து ,

ஊக்கு விக்க ஆளிருந்தால்

ஈக்கு விக்கும் ஆள்கூட

தேக்கு விற்பான்

ஆமாம் எளிமை, இனிமை, புலமை இவையனைத்தின் மறுவடிவம் தாம் என் கவிஞர் வாலி ஜயா. இவரின் கடைசி அத்தியாயத்தை எழுதி விட்டதாக அந்தக் காலன் எண்ணலாம் ஆனால் இவ்வகிலத்தில் தமிழை நேசிக்கும் கடைசித் தமிழன் உள்ள வரை எம் வாலி ஜயா என்றும் முதிரா “வாலி”பனாக வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

அவரின் ஆத்ம சாந்திக்காக ந்ல்லாம்வல்ல என் மனம் வாழும் திருஅண்ணாமலையான் பாதம் பணிகிறேன்.

துயரத்துடன்

மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை

அன்புடன்

சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *