சத்திய மணி

 

எதுவும் அறியாதது போலொரு குழந்தை
எனைப் பார்த்து சிரிக்கின்றது
அதில் ரகசியம் இருக்கின்றது
இதழோரம் இருக்கும் நவநீத வெளுப்பு
சிரிப்பினில் தெரிகின்றது
அதில் விஷ‌ம‌மும் புரிகின்றது()

கருவண்டு கண்களில் கசிந்திடும் கருணைக்கு
தேவர்கள் காத்திருந்தார் – அவன்
கால்பட்ட மண்ணுக்கு காலங்கள் தோறும்
புவிமகள் நோன்பிருந்தாள்
உரலிட்ட பின்னாலும் பலங் கொண்டுதவழும்
கண்காட்சி காண்பதற்கோ – பெரும்
முனிவரும் ஞானியரும் ஒருசேரவந்து
உண்ணாமல் நின்றிருந்தார்
அலைபாயும் கேசம் அசையாது செய்தால்
மழைமேகம் சுரக்காதடி – இவன்
கலைபேசும் குழலூதி களிப்போதைமுன்னாலே
கலிகாலம் செல்லாதடி()
தினந்தோறும் விளையாடி எனைத்தோற்க செய்து
அழவைத்து சுகமேற்றுவான் – என்
மனந்தோறும் உள்ளூடி எனைத்தேற்றி மன்றாடி
மறுபடியும் எனைச்சீண்டுவான்
அவனன்றி நானில்லை நானின்றி அவனில்லை
இதிலெங்கள் உடன்பாடுதான் – எந்தப்
பிறவியிலும் தொடர்கின்ற உறவுக்கு அச்சாரம்
புவியறியும் பிற்பாடுதான்
மனச்சாந்தி பெருவதற்கும் வீண்பிறவி விடுவதற்கும்
மாயனின் காலைப்பிடி – நீள்
தவக்கோலம் நிறைவதற்கும் தரிசனம் பெறுவதற்கும்
மறுக்காது கீதைப்படி()

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “மறுக்காது கீதைப்படி

  1. “கருவண்டு கண்களில் கசிந்திடும் கருணைக்கு
    தேவர்கள் காத்திருந்தார் – அவன்
    கால்பட்ட மண்ணுக்கு காலங்கள் தோறும்
    புவிமகள் நோன்பிருந்தாள்”

    எதுவந்த போதும் எதிரில் எமன் வந்த போதும் 
    அதுவந்து மோதும் உயிரில் அரங்கன் நினைவது மோதும் 
    மதுஊறும் கண்களால் மயங்கிட செய்பவன் -வேணு குழ
    லூதும் கண்ணனின் கருணையினைப் பெருக்கிடுதே!

    அருள் நிறை அழகியக்கவிதை பகிர்விற்கு நன்றிகள்… அருள் கவிஞரே!

  2. படிக்கப் படிக்க மனதில் இரம்மியமான உணர்வுகளை ஏற்படுத்தும் மிக அழகான கவிதை. வாழ்த்துக்கள் ஐயா!

  3. ////தினந்தோறும் விளையாடி எனைத்தோற்க செய்து
    அழவைத்து சுகமேற்றுவான் – என்
    மனந்தோறும் உள்ளூடி எனைத்தேற்றி மன்றாடி
    மறுபடியும் எனைச்சீண்டுவான்////

    வியக்க வைக்கின்றன இந்த வரிகள். எத்தனை அழகாக, ரத்தினச் சுருக்கமாக வாழ்க்கை தத்துவத்தைத்  தந்து விட்டீர்கள்!!!. ஞானத் தேரேறி சத்திய தரிசனம் செய்ய வைக்கும் அற்புதமான பகிர்வு. சிரம் தாழ்ந்த நன்றி!!.

  4. …மாயக் கண்ணனை..ரசித்தவரின் புகழ்ச்சியே கொடுத்தவனின்  மகிழ்ச்சி
    திரு Alasiam G , திரு சச்சிதானந்தம், திருமதி பார்வதி இராமச்சந்திரன் 
    அனைவருக்கும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *