சு. ரவி
வணக்கம், வாழியநலம்,
வடமுல்லைவாயில் தலத்து வைஷ்ணவி என்னைப் பலவேறு தருணங்களில் தன்பால் ஈர்த்துக்கவிதை கேட்பவள்.
அவளோடு கவிதையாடிய சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்:
இணைப்பாக வைஷ்ணவியின் கோட்டோவியம் ஒன்று
பார்க்க, ( பாட) ரசிக்க,,,
ராகம்: பூபாளம்
ஈரைந்து மாதங்கள் தாய்கொண்ட சூலெனும்
இருட்சிறை வாசத்திலும்
இளமைப் பிராயத்தை எடுப்பார்கைப் பிள்ளையாய்
இகவுலக நேசத்திலும்
ஓரைந்து புலன்வழியி லேநைந்துருக்குலைந்
தேதளர்ந்தேன் அம்மணீ!
ஓசைகளாய்க் கவியும் ஆசை அலைக் கடலில்
உள்மறையின் ஒலிகேட்கிலேன்!
சீரைந்தெழுத் தோதி ஜீவன் கடைத்தேற
சிறிதும் முயன்றதில்லை
சிவனிலொரு பாதியே அவனியிதன் ஆதியே
சிங்கார அகராதியே!
வார்குழலில் மலர் சூடி மலரில்வண் டினம்பாடி
வாழ்த்திசைக்கும் வண்ணமே,
வடமுல்லைவாயிலில் படர்முல்லையே எனை
வாழ்விக்க வரும் அன்னையே
சு.ரவி

Leave a Reply