கே.ஜெ வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும் – 1
கோ.ஆலாசியம்
வல்லமையில் இதற்கு முன்னமே வெளிவந்த காட்சியும் கதையுமாக வெளி வந்த “வால் நட்சத்திரமும் சீகல் பறவையும்” என்றப் பதிவை கவிதை கதையாக்க முயன்று இருக்கிறேன்.
‘பான் ஸ்டார்’ எனுமந்த
வால் நட்சத்திரம்
வான் மீது உதிப்பதை படமாக்கிட
எனது சிற்றூந்து
வண்டியொன்றின் மீதொருப் பயணம்…
ஒண்டியாகப்போக
எண்ணியபோது வந்து
ஒண்டிக் கொண்டது
வீட்டுக்காரரின் நாயொன்று!
வெளுத் திருந்த வானம்
காணும்
கடற்கரை யோரம்
வந்து நின்றது என்வா கனம்
சீக்கிரமே வந்ததால்
பொழுது போக்கும்
அக்கரையில்
சின்னதாக ஒரு நடை …
கூட வந்த நாயோ
குதித்து ஆடி
அங்கும் இங்கும்
ஓடி …
சிந்திக் கிடக்கும்
சிப்பிகளை கொண்டு
பல்லாங் குழியாடி
குட்டியாய் ஒருக்
குளியலையும் போட்டு
குஷியில்
பரவசத்தில்
குரைத்தது…
அக்கரையிலே
சிப்பிகளை பொறுக்கி
சிறு மணல் வீடு கட்டி
கரையில் ஆடும் அலைகளென
அலைகளில் ஆடும்
ஆம்பல் மலர்கள் என
அங்கும் இங்கும் ஓடி
விளையாடிக் கொண்டிருந்த …
மின்னும் பொன்குழல்
பூஞ்ச்சிட்டுகள் அன்ன
சின்னஞ்சிறு வெள்ளை
முத்துக்கள்…
குளித்து குதித்து
குஷியில் களிக்கும் போது
குரைக்கும்
பைரவரின் குரலில்
கொலை நடுங்கிய
மான் குட்டிகளாய்
பயந்து தயங்கி
பதுங்கின தனது
தாய்களின் பின்புறமே…
கொஞ்சும் மொழிகள்
குறைந்து ஒலிக்கும் -அக்
குழந்தைகளிடம் எனது
வருத்தம் கூறி…
நடக்கலானோம்
நானும்
அந்த வாலாட்டியும்
வானில் வரும்
வால்நீட்டி மீனைப்
வண்ணப் படமெடுக்க…
வெள்ளை வானம்
சிறிதே மஞ்சள் பூசிட
எங்கிருந்தோ வந்து
இறங்கிய தொரு
வண்ணப் பறவை….
தெளிந்த நீர்…
தென்றலென வந்த
குளிர்ந்தக் காற்று…
சிந்தை கவரும்
வண்ணப் பறவை…
சிறகடித்து பறந்துக் கொண்டே
சிலாக்கியமாக சிப்பிகளைக்
கவர்ந்திட…
(தொடரும்)
மிக அருமையான முயற்சி!!. அழகானதொரு துவக்கம்!. ஆரம்பமே ஆவலைத் தூண்டுகிறது. தொடர்ந்து வரக் காத்திருக்கிறேன்.
மிகவும் புதுமையான முயற்சி. வால் நட்சத்திரமும் சீகல் பறவையும் என்ற அந்தக் கட்டுரையை ஏற்கனவே படித்து இருந்ததால், தங்கள் கவிதையை எளிதாக மனதில் உள்வாங்கிப் படிக்க முடிந்தது. இது போன்ற புதிய முயற்சிகள் வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள் திரு.ஆலாசியம் அவர்களே!
சகோதரி பார்வதி மற்றும் நண்பர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கும், ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றிகள்!
மன்னிக்கவும் இதற்கு முன் வந்த வால் நட்சத்திரமும் சீகல் பறவையும் என்ற அந்தக் கட்டுரையை நான் படிக்கவில்லை. இப்போது கவிதை வடிவில் என்பதால் ஆர்வம் வந்து விட்டது.
தொடருங்கள் கவிதை தொடருக்காக காத்திருக்கிறேன்.
@கவிஞர் தனுசு ///இதற்கு முன் வந்த வால் நட்சத்திரமும் சீகல் பறவையும் என்ற அந்தக் கட்டுரையை நான் படிக்கவில்லை. இப்போது கவிதை வடிவில் என்பதால் ஆர்வம் வந்து விட்டது.///
உண்மையில் படத்தோடு கூடிய அந்த முந்தையக் கட்டுரை,, அருமை… படங்களும் அருமை.. அதில் ஒரு பின்னூட்டத்தில் கவிதையாக இருக்கிறது என்பதை கண்டேன்… உண்மையில் எனது உணர்வும் அதுவாக இருந்தமையால் நானே அந்த கவிதை இதுவாக இருக்குமா என்று எழுத முயன்றேன். நண்பரே!