கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம்
சக்தி சக்திதாசன்
அன்பினிய நெஞ்சங்களே!
தமிழன்னையின் தவப்புதல்வன் என் இதயம் வாழ் இனிய நேசன் எந்தன் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு தினம் இன்று.
காலமகள் தந்த கவிதைப் பெட்டகம், கலையுலகம் கண்ட தத்துவப் பாடலாசிரியன், தமிழுலகம் ஈந்த தானைத்தமிழன்; ஆம் அவர்தான் எம் உள்ளங்களையெல்லாம் தன் கானங்களினாலும் கவிதைகளினாலும் அற்புத எழுத்துக்களினாலும் கவர்ந்திழுத்த காவியத் தலைமகன்.
இன்று அவர்தம் திருப்பாதங்களைப் பணிந்து இக்கவிதை மாலையை அவருக்காய்ச் சாத்துகிறேன்.
அண்ணலே!
அன்னைத் தமிழ் தந்த
அருந்தவப் புதல்வனே!
இளமையின் வேகத்தில்
இதயத்தின் ஓட்டத்தோடு
காற்றாக அலைந்த எந்தன்
காளை மனதைத் தமிழால்
கட்டிப் போட்ட கவியரசே!
வாழ்க்தை தூக்கிப் போட்ட
வினைகளுக்கெல்லாம் மருந்தாக
தத்துவப் பாடல்களாய் அள்ளித்
தந்த தங்கத் தமிழ்க் கவியே!
இதயத்தின் வலிகளெல்லாம் ஐயன்
ஈந்த பாடல்களினால் ஒரு நொடியில்
காற்றோடு கரைந்திடும் விந்தை
கண்டு நான் வியந்திடாப் பொழுதுகளில்லை
இலக்கிய மேதைகள் தான் எமக்கு
இயற்றுவர் அருங் கவிதைகள் என்பதை
இற்றுப் போகச் செய்த ஒரு உன்னத
இயற்கைக் கவிஞனாய் இகத்தில் உதித்தவனே!
பூஜ்ஜியத்துக்குள் ஒரு ராஜ்ஜியத்தை
பூட்டி வைத்த பரம் பொருளின்
தத்துவத்தை எளிமையாக்கி எமக்கதை
தீந்தமிழ்ப் பாடலாக்கிய கவிவேந்தனே!
கண்ணனை நீ மனதில் யாசித்து ஓர்
கண்ணனின் தாசனாகி வகையாக
புல்லாங்குழல் கதையில் ஒரு இனிய
புதுச் சூட்சுமத்தைப் புதைத்தவனே!
நான் யார்? நீ யார்? என்று
நயமான கேள்விகளினால் எமக்கு
நாம் யார் எனும் எண்ணத்தைத் தந்து
தன்னைத் தானறியும் வகை சொன்ன
தத்துவக் கவிஞன் ஐயா நீ
இன்றுனது நினைவு தினம் ஆனாலும்
இவன் உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு
எப்போது என் விரல்கள் வளைந்தாலும்
அப்போது நீதானே அங்கு மூலமாவாய்
கவியரசர் கண்ணதாசன் தன் அவையில்
கவிஞனாக வேண்டுமென்றே அவ்விறைவன்
இத்தினத்தில் உன்னைத் தன்னோடு
இணைத்துக் கொண்டான்? சொல்லய்யா
உன் பாதம் தன்னில் இன்று இப்பொழுதில்
என் சிரம் பதித்து வணங்குகிறேன்
நான் வாழும் காலம் மட்டும் எழுத்துக்கு
உந்தன் ஆசி வேண்டி வணங்குகிறேன்
தமிழ்த் தாயின் மணிமகுடத்தில் நிரந்திரமாய் அமர்ந்திருக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்களை நாம் அனைவரும் நன்றியுடன் நினைவு கொள்வோம்.
கவிதைக்கு நன்றி ஐயா!