பசுந்திரா சசி

வெளியில் மழை சிலு சிலு வென சிணுங்கிக் கொண்டு  இருந்தது.  “ ஐரோப்பாவில் இது பனிக்காலம் என்றாலும்,  இந்த மழைக்கு காலமே இல்லை வருடம்  பூராகவும் இப்படித்தான் வடிக்கிறது  ”  என அலுத்துக் கொண்டு  இரா போசனத்தை  முடித்து மாடியில் உள்ள  தன் படுக்கை அறைக்கு சென்றார் இந்திரனின் மாமா.  மறு அறையில் தாய்க்கும் தம்பிக்கும் இடையில் கிடந்தபடி

“ அப்பா விட்ட குறையில இருந்து கதையை சொல்லுங்கோ….. ” என்று அடம் பிடித்துக்கொண்டு அழுதாள் பார்கவி .

“சரி சரி… எங்க விட்டனான்.”
“ அந்த பிச்சக்காற ஐயா முதல் முதலா இளம் பிச்சக்காறியை எப்ப பாத்தார்….  என்ற இடத்தில ”

 அந்த பிச்சிக்கார முதியவர் ஜோனிடம்  சொன்னார் ..

  ” அது ஒரு வெள்ளிக்கிழமை  மாலைப் பொழுது . 2009 சித்திரை முதல் பகுதி , கிளிநொச்சியின் கரையோர புதுமாத்தலன் கிராமம் – நாலா புறமும் புகையும் , வெடிச்சத்தமும் , ஓலக் குரலும் , பிஞ்சு போன அங்கங்களும் , பெரு வாரியான பிரேதக் குவியல்களுமாய் இருந்தது . விளக்கில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகள் போல மக்கள் பாதுகாப்பு என ஓடிய இடமெல்லாம் படு குளிகள் ஒளித்திருந்தன . தணலில் விழுந்த நண்டு தாவி அணைச்சதெல்லாம் நெருப்புக் கட்டிகள் என்பது போல் ஒதுங்கிய இடமெல்லாம் குண்டுகள் இருந்தது . நான் – செல் விழுந்து இறந்த என் மனைவி கற்பகமேரியின் கால்களை பிடித்தபடி கதறிக் கொண்டு இருந்தேன். அவ் வளியால் ஓடிய சனம் எல்லாம்  ‘ இந்த கிழவன்  இதில இருந்து அழுது சாகப்போகுது ‘என என்னை திட்டியது . நான் காதில் போட்டுக்கொள்ள வில்லை . எனக்கு பின்னால் – இறந்த தாயின் மார்பை முட்டியபடி ஒரு குழந்தை – அழுது கொண்டு கிடந்தது . எங்கள் பக்கமாக ஓடி வந்த ஒரு பெண் அந்த குழந்தையை கையில் எடுத்தபடி  என்னிடம் ” இதில இருந்தால் நீங்களும் சாக வேண்டியது  தான்  எழும்பி வாங்கோ ” என்றாள்.  ” நான் மாட்டேன் என் மனைவியோடு நானும் போறன்  இனி எனக்கு யார் இருக்கு ” என அழுதேன் . ” அப்பா… .! பிச்சை எடுத்தெண்டாலும் நான் உங்களுக்கு கஞ்சி ஊத்துறன் எழும்பி என்னோட வாங்கோ…” என்ற அவள்  வேறு  யாருமல்ல – அதோ  பிச்சையே எடுத்துக்கொண்டு இருக்ககும் அந்த பெருமாள் கோயில் இளம் பிச்சக்காறி தான் ‘ என கண்ணீர் வடித்தார் . காய்ந்து வெடித்த தரையில் பாச்சிய நீர் போல அழுக்கேறிய அவரின் கன்னதோலில் கண்ணீர் உருண்டோடி நரைத்த தாடியை நனைத்து வடிந்தது . ‘ என்ர ஒரே ஒரு பிள்ளையும் சுனாமியில போயிற்றான்  .  அவள் எப்ப  என்னை  அப்பா…! என்றாளோ… அப்பவே அவள் என் மகள் ஆகி விட்டாள் . இங்கால வந்து என்னை தன் அப்பா என்றும் , குழந்தையை தன் மகள் என்றும் , கணவன் செல்லடியில் செத்தப் போயிற்றார் என்றும் பதிவு செய்தாள். இரண்டு வருசமா செட்டிகுளம் கதிர்காமர் முகாமில இருந்தோம் . பிறகு மீள் குடியேற்றம் எண்டு மாங்குளத்தில கொண்டு வந்து ஒரு காட்டுக்குள்ள இறக்கிப்  போட்டுப் போயிற்றாங்கள் .  நான் கடல் தெழில் செய்யிறனான். வீடு வளவு , காணி ஒண்டும் இல்லை . அவளோ செஞ்சோலையில இருந்து வளர்ந்த பிள்ளை  உறவினர் யாருமே இல்லை. குழந்தைக்கு எங்கள்   இருவரையும் தவிர யாரும் இல்லை . வீடு வீடா ,கடை கடையா , வேலை கேட்டு திரிஞ்சம் . எனக்கு வேலை இல்லை என்று விட்டு அவளின் மேலைப் பார்த்து ‘ வேலை தரலாம் பின்னேரம் வீட்ட வா..’ என்றார்கள் . போனால் வேலையை மறந்து விட்டு சேலையை பிடித்தார்கள். உதறி விட்டு வந்துவிட்டாள் .   அரை வயிறு கால் வயிரோட கிடந்தோம். வாழ வளி இல்லை . யாரோ ஒருவர்  யாழ்ப்பாணம் கோயில்ல கஞ்சி  ஊத்துறார்கள் என்றார் . இங்கு வந்தால் வெள்ளிக்கிழமையில மட்டும் தான் ஏதாவது எங்காவது கொடுக்கிறார்கள். பசியால் பிள்ளை வதங்கியது அதன் முகத்தை பார்க்கவே முடியவில்லை . பிள்ளையின் பசிக்காக  நான் கை நீட்டினேன் , எனக்காக அவள் கை நீட்டினாள் , எங்கள் இருவருக்குமாக பிள்ளை கை நீட்டியது –  இதோ இன்று பிரபல்யமான பெருமாள் கோயில் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டோம்.

‘பிள்ளை வரம் வேண்டும் என்று தவம் கிடக்கும் பல தாய்களுக்கு மத்தியில் எத்தனை பிள்ளைகள் ஒரு தாய் வேண்டும் என ஏங்கி நிற்கிறார்கள் ‘ என்று தன்னையே தாயாக்கிக் கொண்டு வாழும் அந்த தெய்வ விக்கிரகத்திற்கு எத்தனை இழிசொல் ! , எத்தனை வசைகள் ! . தம்பி… உங்களை கை எடுத்து கும்பிடுறன் ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்க எங்களுக்கு ஒரு வளி காட்டுங்கோ…. ” என கண் கலங்கினார்  முதியவர்.

அதற்குள் ஜோனின் கை  தொலைபேசி சிணுங்கியது , எடுத்தான் அவன் காதலி மோகனா.

 ” கலோ… , கலோ… , நான் ஜோன்  கதைக்கிறன்.”

“ ஜோன் நான் உங்களை பார்க்க வாறது அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு . கலியாணத்திற்கு முதல் தனிய உங்களோட வெளிய போக வேண்டாம் எண்டு சோல்லிப் போட்டா ! நாளைக்கு இதே நேரம் எப்படியும் கோயிலுக்கு வருவன் ,  நாம்  ஒருவரை ஒருவர் முதல் முதல் கோயில்ல  தான் பார்க்க வேண்டும் . நீங்கள் திரும்பி விடுதிக்கு போங்கோ இரவு போன் பண்ணுறன். ”  என்று விட்டு வைத்தாள் மோகனா .

இன்னும் அந்த முதியவர் அவன் முன்னாலே நின்றார். ” ஐயா ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ , எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் கனடா  கோயில் ஒன்றில  தலைவரா இருக்கிறார் . அவை இங்க உள்ள பல கைவிடப்பட்ட ஆட்களை பராமரிக்கினம் , உங்கிட பெயர் விபரத்தை தாங்கோ , நான் அவரோட கதைச்சுப் போட்டு உங்களுக்கு சொல்லுறன்.”  என்று விட்டு தானே விபரத்தை எழுதி வேண்டினான். மெதுவாக மழை தூற ஆரம்பித்தது.  ” சரி ஐயா நான் கொஞ்ச நாளைக்கு இங்க தான் நிப்பன் பிறகு உங்களை பார்க்கிறேன் ” என்று விட்டு கிழம்பினான்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *