கர்ணன் எங்கு சென்றான்
நந்திதா
அலுவலக வாசல்
தோளில் எனது தோழனின் கை
உதிர்ந்தன சொற்கள்
அவன் வாயிலிருந்து
இன்று “ல்ஞ்ச்” எனது “ட்ரீட்”
இனித்தது என் இதயம்
கையிலோ கனத்தது தயிர் சாத பொட்டலம்
புளித்துப் போகும்முன்
அதற்கோர் புகலிடம் தேவை
தெருவைப் பார்த்தேன்
தென்பட்டது ஏந்திய கரம் ஒன்று
தானமாய் தயிர் சாதம்
கை மாறும் வேளையில்…….
இது சாப்பாடா சாமி
நீட்டிய கரம் திசைக் காட்ட
அங்கு காலில்லாத ஒருவர்
இதை அவருக்குக் கொடுத்தா புண்ணியம்
எனக்கு காலிருக்கு எப்படியும்
பொளச்சுக்குவேன்
எனக்குள் நின்ற கர்ணனை
சொல் அம்புகளால் கொல்லாமல்
கொன்று புதைத்தாள் அந்த பிச்சை அம்மா….
