இராஜேஸ்வரி ஜெகமணி
வீட்டிற்குள்ளே பெண்ணைப்பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்களை மாய்த்துவிட்டு வீறுகொண்டு எழுந்து பெண்கள் சமுதாயம் தற்போது பல்வேறு துறைகளிலும் கோலோச்சிக்கொண்டு வானளாவி பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே மகளிர் தினமாகும்.
உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல்.
ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த பெருமை மிக்க நாள் இது.
ஆதிகாலத்தில் சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த பெண்களின் நிலை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.
ஆண்களுக்கு இணையாக சரிநிகர் சமானமாக வாழ்ந்து வந்த அவர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டு, அவர்களை வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக்கி, போகப் பொருளாக்கி, அவர்கள் ஆண்களின் உடைமைப் பொருளாக ஆக்கப்பட்டனர்வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்கள் ஆரம்பக் கல்வி ,. மருத்துவம், சுதந்திரமம் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு அடிமைத்தளையில் அகப்பட்டிருந்த 18 ஆம் நூற்றாண்டின் பெண்கள் காலத்தின் கட்டாயத்தால் வெளி உலகை சந்திக்கவேண்டி வந்தது..!
உலகப்போரின் காரணமாக ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும், படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது
இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது.
ஆண்களுக்கு நிகராகப் பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று தன் சக்தியை விஸ்வரூப அனுமனாக புரிந்து கொண்ட பெண் சமுதாயம் அடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத் தனம் என்று டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது.
இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின..
ஓர் ஆணுக்கு இயல்பாகவே கிடைக்கின்ற கல்வி, ஆன்மிகம், வீரம், வேலை, தொழில் இவை எல்லாமே பாகுபாடின்றி பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக பெண்களின் பலம் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதையும் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார்.
உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்ததையடுத்து 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்
பெண்ணின் பெருமையை உலகிற்கு பறைசாற்றி பெண்கள் அறிவை வளர்த்தால் இந்த வையகம் பேதைமை அற்றிடும்’ மேதமை உற்றிடும் என்பது பாரதியாரின் அழுத்தம் திருத்தமான – ஆணித்தரமான கருத்து.
‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்பது நம் இந்தியப் பெண்களைப் பற்றி பொதுவாகக் கூறப்படும் கருத்து.
ஆனால், இன்றைய பெண்கள் அந்த நிலையையும் மீறி தன்னையும் வெற்றிபெறச் செய்து கொண்டு, தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் வெற்றியடையச் செய்கிறாள்
சக்தி இல்லாமல் உலகிற்கு முன்னேற்றம் கிடையாது. நம் நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலமிழந்து கிடப்பது ஏன்? நம் நாட்டில் சக்தி அவமதிக்கப்படுவது தான்
-என்று சுவாமிஜி விவேகானந்தர் ஆணித்தரமாக உரைக்கிறார்.
எத்தனையோ இன்னல்களை எல்லாம் மீறி இன்றைய பெண்களின் நிலை பெரிய அளவில் முன்னேறியிருப்பதற்கு மிக முக்கியக் காரணம் கல்வி.
ஒருபக்கம் பெண்களின் கல்வியறிவு, மறுபக்கம் தொழில் வளர்ச்சியால் பெருக்கெடுத்த வேலைவாய்ப்புகள். அறிவார்ந்த படிப்பும், கைநிறைய சம்பளமும் பெண்களுக்கு ஆழ்ந்த தன்னம்பிக்கையைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
பெண்களுக்கு இந்தக் காலகட்டம் பொற்காலம் ஆகும்.
இந்தக் காலகட்டத்தில் தான் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
‘வீக்கர் செக்ஸ்’ (பலவீனமானவர்கள்) என்று பெண்களை முடக்கிப் போட்டக் காலத்தில் இருந்து பலர் போராடிப் பெற்ற இந்த சுதந்திரக் காற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
ஒரு பெண் தன்னுடைய திறமைகளால் மட்டுமே அடையாளம் காணப்பெற வேண்டும்.
உடலின் எடை, உயரம், நிறம் மற்றும் இன்ன பிற கவர்ச்சிகளினாலோ, ஆடை, அணிகலன்களினாலோ, வெளிப்புற அலங்காரத்தினாலோ, அடையாளம் கண்டு கொள்ளப்படக் கூடாது.
எந்த ஒரு பெண், இந்த மனோநிலையை எப்போது அடைந்து மனதளவில் முதிர்ச்சி அடைகிறாளோ அவளே மிகவும் சுதந்திரமான பெண் ஆவார்.
அத்தகைய பெண்ணே, சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட பெண்ணாக விளங்கி, இந்த உலகைப் புதுப்பிக்க முடியும்.


Leave a Reply