எம்.ஜெயராமசர்மா … மெல்பேண்

t-images

சித்திரைப் புத்தாண்டை
சிறப்பாக வரவேற்போம்
எத்திக்கும் இன்பம்பொங்க
இறைவனிடம் வரம்கேட்போம்
முத்திக்கு வித்தாக
முன்னிற்கும் கணபதியை
சொத்தான தமிழ்கொண்டு
துதிபாடி நிற்போமே
கோவில்சென்று கும்பிட்டு
குறையெல்லாம் போக்கிடுவோம்
குலதெய்வ வழிபாட்டை
குடும்பத்துடன் செய்திடுவோம்
நாலுபேர் மனம்மகிழ
நயமாக நடந்திடுவோம்
நாடுசெழிக்க வேணுமென்று
நாம்வேண்டி நிற்போமே
பட்சணங்கள் பலசெய்து
பாசமொடு பகிர்ந்துண்போம்
இஷ்டமுடன் கூடிநின்று
எல்லோர்க்கும் விருந்துவைப்போம்
கஷ்டமெலாம் போகவென்று
கடவுளைநாம் வேண்டிடுவோம்
துஷ்டகுணம் ஓடிவிட
தூய்மையுடன் நின்றிடுவோம்
அன்னைதந்தை போற்றிடுவோம்
அனைவரையும் அரவணைப்போம்
சின்னத்தனம் அத்தனையும்
சிதறியோடச் செய்துநிற்போம்
சொன்னயமாய்ப் பேசிநிற்போம்
சுற்றமெலாம் சூழநிற்போம்
என்னாளும் எம்மனத்தில்
இரக்ககுணம் ஓங்கட்டும்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *