சிறுகை அளாவிய கூழ் (18)
இவள் பாரதி
இரையள்ளித் தூவியதும்
கூட்டமாக நீந்திவரும்
தொட்டிமீன்களைப் போல
வீட்டுக்குள் நுழைந்ததும்
கைகளையும், தலையையும் அசைத்து
தத்திவந்து
தாவியேறுகிறாய்
ஆடைகளைப் பற்றி
என்னுடல்மீது
—————
வெற்றிடம் நோக்கி விரையும்
திரவத்தைப் போல
அம்மாகுட்டி ஓடுகிறாள்..
ஓடிப்பிடிக்க முடியாமல்
தடுமாறும் பாட்டி
குரலில் கடுமை காட்டுகிறாய்..
திரும்பிப் பார்த்துச் சிரித்து
மேலும் வேகமெடுத்து ஓடுகிறாள்
பின்னால் விரையும் பாட்டி
எட்டிப் பிடிக்குமுன் மாடிப்படியேறி
மேலே போய் நின்றபடி
இருகையையும் நீட்டுகிறாள்
பதறும் பாட்டி
முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு
மெதுவாக படியேறி குட்டியைப்
பிடித்தபின் மூச்சுவாங்கி
கீழிறங்குகிறார்கள் இருவரும்
வழிகாட்டிச் செல்கிறது
இருவரது நிழலுக்கும் நடுவில்
எறும்பொன்று
சின்னக்குட்டியின் ஓட்டம் அருமை
அம்மாக் குட்டிக்கு இதுவும் தெரியுமா.செல்லம்.
அட, நல்லா இருக்கே!