திருமால் திருப்புகழ் (117)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–

காரணம் நேற்றுண்டோம், சூரண மாற்றின்று,
ஜீரணம் நாளைதான்: ஜீவிதம் -பூரணம்,
கொள்ள சரண்புகு, கோகுல பாலகன்,
கள்ள பிராந்தன் கழல்….(216)
காமம், பொறாமை, குரோதம் இவைகளின்,
சாமக் கிரியையால் சோர்வுற்றேன், -நாமம்,
உரைத்தேன் முகுந்தா, உனதாழ் கடலில்
கரைத்த பெருங்காயம் ஆக்கு….(217)
அடிவானம் ராதை, அலைகடல் கண்ணன்,
பிடிவாதம் இல்லா பிணைப்பு, -முடிவாக,
ஜீவன் அலைந்து, ஜகன்நாத னோடிணையும்,
பாவம் பரிகாரம் போகும்….(218)
ஒன்பது ஓட்டை, உடலே உடனேநீ,
தின்பது தூக்கம் தவிர்த்தாயர், -நண்பனின்,
ஊது குழலாய், உருமாறி என்நாளும்,
கீதகோ விந்தமதைக் கூவு….(219)
குருவாயூர் பிள்ளை, திருநாமம் சொல்லி,
வெறும்வாயை மெல்லு விடாது, -வரும்நாளில்,
பக்திஅவல் உண்டு, பதிலுக்(கு) அளித்திடுவான்,
முக்தியாம் செல்வம் மகிழ்ந்து….(220)
மார்கழி மாதத்தில், மாடுகள் மேய்த்தபடி,
ஓர்கழி ஊது குழலோடு, -ஊர்புகும்,
கோதூளி வண்ணனே, கண்ணனே கண்ணுறங்க,
வாதூளி ஆட விரைந்து….(221)
————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி :
http://bhagavatham.blogspot.in/