மழைவந்தது போல்
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (42)
மழைவந்தது போல்
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2/[/mixcloud]
மழைவந்தது போல் நீ வந்தாயா?
நீ வந்தது போல் மழை வந்ததா?
இழை இழையாய் விழுந்துகொண்டிருக்கும் இந்த
இன்ப விந்தையின்
இடைவெளிகளில் ஏதோ ஒன்று
கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது
என்னால் அதைப்பிடிக்க முடியாது என்றாலும்
நின்ற இடத்தில் புரிந்துவிட்டது இன்று
என்றைக்கு வந்தாயோ அன்றிலிருந்து
இன்றைக்கும்
இன்றைக்குத்தான் நீ வந்ததுபோல்
நான்
பரவசமாகிறேன்…படபடக்கிறேன்..
பதறுகிறேன்…நெகிழ்கிறேன்…
பற்றமுடியாமல் உடைந்து அழுகிறேன்…
பருக முடியாமல் நெஞ்செல்லாம்
பாறையொன்று ஏறிக்கொண்டு அமர்ந்ததுபோல்
பாரம் தாங்க முடியாமல் பரிதவிக்கிறேன்
பாடலே உயிராக வரவேற்கிறேன்
என்
வரவேற்பின் நேர்மையை நீ மதித்தாலும்
சங்கடப் படுகிறாய்..துணுக்குறுகிறாய்..
சந்தேகத்தை, உன் நல்லெண்ணத்தால்
தவிர்க்க முயல்கிறாய்
இன்றுதான் உன் நியாயம் புரிந்தது
இத்தனைநாள் உன்னை எப்படியெல்லாம்
சங்கடப்படுத்திவிட்டேன்!
தன்போக்கில் சென்றுகொண்டிருந்த தெய்வம்,
என்னைத்தான் சந்திக்க வந்தது என்று
பேதைமையால் நம்பிக்கொண்டு
பாதையை மறித்துப் படுத்துக்கொண்டேனே!
எனக்கு
நீதான் உயிர்.
வாழ்க்கை.
எ..ல்..லா..ம்
உனக்கு?
நான்
ஒ..ன்..று..மே இல்லையே!!
அடடா! உன்னை
எதிரே கண்ட பதற்றத்தில், என்
ஏழ்மையை மறந்தே போய்விட்டேனே!!!
சரி
எனக்கும் உனக்கும் வேறு வழியில்லை
எனவே என்னை மன்னித்துவிடு!!
இதற்குப் பிறகு என்ன நடக்குமோ
எனக்குத் தெரியாது
கதையைச் சொல்லும் எழுத்துக்குக்
கதையோ புரியாது………..