சரஸ்வதி ராசேந்திரன்   

ஒரு மனிதன் பிறந்தான், வாழ்ந்தான், இருந்தான், செத்தான் என்பதுதான் பெரும்பாலோரின் கதை. ஆனால் எம்.ஜி.ஆர்  அப்படியல்ல. இளமையில் வறுமையில் வாடினாலும் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தவர்,  ஒருவன் தான் எடுத்த முயற்சியில் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. ஆனால்  எம்.ஜி.ஆர் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிபெற்றார். ஒரு தாயின் வளர்ப்பு அவரை மேன்மை அடையச்செய்தது.

MGR

தாயிடம் எல்லையற்ற பாசம் உள்ளவர், தாயின் கட்டளைப்படி நாடக கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பின் மெல்ல சினிமாவில் சான்ஸ் வர ஆரம்பித்தது. அந்த முதல் படம்தான் சதிலீலாவதி. சினிமாவில்  நடிக்க வந்தாலும், அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி குடி, சிகெரெட் இல்லாமல் இருந்தாரோ, அது போன்று  படத்திலும் குடி சிகெரெட்  அவர் தொடுவதில்லை. அவரது ரசிகர்கள் தன் படத்தைப் பார்த்து  கெட்டுப் போகக்கூடாது   என்ற உயரிய நோக்கிலும் மிக ஜாக்கிரதையுடனும் சினிமாவில் நல்ல விஷயங்களை,  நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னதால் மக்களுக்கு அவர் நல்ல குணங்கள்  பிடித்துப்போனது. மக்கள் மனதில் அவர்  நிறைந்தார்.  தன் படங்களில் கூட நல்லக் கருத்துக்களையே பதிவு பண்ணச் சொல்லி பாடகர்களை வேண்டுவதும் உண்டு.

பசி என்று வந்தவருக்கு இல்லை என்று சொன்னதில்லை. உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்தார். அடிப்படையிலேயே நல்ல குணங்களையுடையவர். ஆதலால்   அவரை மக்களுக்குப் பிடித்துப் போனது. அவர் நடித்த சினிமா நூறு நாட்கள் ஒட்டி மக்களின் அமோக வரவேற்பு பெற்றதால் அறிஞர் அண்ணா அவர்கள்  எம்.ஜி.ஆரிடம் நட்பு கொண்டார், அண்ணாவின் கொள்கைகள் எம். ஜி.ஆருக்கும் பிடித்துப்போனது. அதனால் மெல்ல அரசியலுக்கு வந்தார். அரசியல் வாழ்க்கையிலும் அவர் மக்கள் ஆதரவோடு  முதலமைச்சர் ஆனார். முதலமைச்சராக வந்தாலும்  அடக்கத்துடன் மக்கள் மத்தியில்  நல்ல பெயர் எடுத்தார். பகைவனுக்குக்கூட அவர் கருணை காட்டியவர். எம். ஆர். ராதா  சுட்டபோதுகூட அவரை மன்னித்த மாமனிதர்.

60 லிருந்து 70 வரை தமிழக மக்கள் இதயத்தில் அகில உலக தமிழ் மக்கள் இதயத்தில் கொடி கட்டி பறந்தவர் மக்கள்திலகம். தமிழ் நாட்டில் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினை பெற்ற முதல் நடிகர் அவர். ஆனால் நாடகத்தை பின்புலமாக கொண்டவர் என்றாலும் கூட அவரது படங்களில் அவரிடம் அழுத்தமான முகபாவனைகளும் உடல் மொழிகளும் குறைவாகவே இருந்தன எம்பதனை யாரும் மறுக்க முடியாது.  உணர்ச்சிகரமான நடிப்பையும் அவரிடம் எதிர்ப்பார்க்க முடியாது. ஆனாலும் கூட அவர் நல்ல விஷயங்களை பாடல் மூலமாகவும் வசனம் மூலமாகவும்  வெளிப்படுத்தியதால் அவர் மக்கள் மனத்தில் நிலைத்து நின்றுவிட்டார்.  எம். ஜி. ஆர் ஒரு நல்ல மனிதர். நல்ல பண்பாளர். ஏழைகள்பால் இரக்கம் கொண்டவர். அவர் படங்களில் சின்ன குழந்தைகளுக்குகூட அறிவுரைகள் கூறியவர்.

‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’  என்றும் ‘சின்ன பயலே சின்னபயலே சேதி கேளுடா’ என்றும் கூப்பிட்டு பயம் கொள்ளக்கூடாது, என்றும் வீணர்களின் பேச்சுக்கு இடம் தரலாகாது என்றும் கூறச்செய்தார். அவர் பாடல்களிலும் நல்ல கருத்துக்களை சொல்லும்படி கவிஞர்களை வற்புறுத்தினார்.

அவர் போடும் கத்தி சண்டைகள், சிலம்பாட்டம் எல்லாம் கூட குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவர்பால் ஈடுபாடு கொள்ளசெய்தது. தாயின் மேல் பாசம் கொண்டதால்  பாசம் படம். அடுத்து பாசத்தைவிட நீதிதான் பெரிது என்று சொல்ல நீதிக்குப்பின் பாசம்  படம் வந்தது. நல்லவன் வாழ்வான்   என்று சொன்னதோடு வாழ்ந்தும் காட்டினார். தாய்க்குப்பின் தாரம் என்று படம்  தாயை காத்த தனயன்  படம் எல்லாமே தாயை வணக்கத்திற்குரிய இடத்தில் வைத்தவை  பணத்தை விட பாசம் முக்கியம் பணமா   பாசமா, பணத்தோட்டம், பணம் படைத்தவன் படங்கள் முலம் பாசத்தை உயர்வில் வைத்தார். ரகசிய போலீசாக வந்து  எதிர் கட்சியின் அக்கிரமங்களை   அம்பலப்படுத்தினார்.

மீனவ நண்பன், ரிக்‌ஷாகாரன், வேட்டைக்காரன் என வந்து அசத்தியவர்.  இதுகூட கடவுள் இட்ட அரச காட்டளை போலும். அவர் உடல் நிலை கலைக்கிடமாக இருந்தபோது கோடான கோடி மக்கள் அவருக்காக வேண்டி தவம் இருந்த ஒரு உதாரணம் போதும் அவர் மக்கள் மனத்தில்  என்றுமே மன்னனாக  காஞ்சித் தலைவனாக குடிகொண்டிருந்தார் என்பதற்கு சாட்சி. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடியாக இருந்தாலும் மக்கள் மனத்தில் முழுமையாக நிலைத்து நின்றவர்  எம்ஜி.ஆர் ஒருவரே என்றால் அது மிகையல்ல. அந்த மூன்றெழுத்து  முடிந்தபோதிலும் பேச்சிருக்கிறதே அதுதான் அவர்தம் வெற்றி!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *