கிரேசி மோகன்
“விஸ்வரூபம் காட்டப்படுவதன்று….காணப்படுவது’’ என்று புதுமையான வியாக்கியானம் அளித்தவர்….
“மாணவர்களே ! நீங்கள் எல்லோரும் மாடு மேய்க்கப் போங்கள்….!’’ என்று ஒரு கல்லூரி விழாவில் கூறிவிட்டு, மாணவர்களின் மயான அமைதியை ‘’மாடு மேய்த்தவந்தான் கீதை சொன்னான்’’ என்று கொக்கரித்து கலக்கியவர்….இது இலக்கியவாதி மகோன்னத ஜெயகாந்தன்….
எனது குழு நண்பன் “பார்த்தி’’ மூலமாக இவர் எனக்குப் பரிச்சியம்….விருது வாங்க ஜெயகாந்தன் சார் டெல்லிக்கு செல்லுகையில், “பார்த்தி’’ இவரோடு துணைக்குச் செல்லும் ஆத்மார்த்தமான தோழன்….என் மகன் திருமணத்திற்கு பார்த்தியின் சிபாரிசால் வந்தது இந்த ‘’ஞான ரதம்’’….என்னைக் கூப்பிட்டு(என்ன சொல்லப் போகிறாரோ என்று கவலையோடு நான் செல்ல) இறுதியாக இவர் சொன்னது ‘’மோகன்….பார்த்தியைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’….அடடா அந்த மகோன்னதத்துள் எப்பேர்ப்பட்ட மனிதாபிமானம்….”கல்லுக்குள் கருணைக் கடவுள்’’ போல்….எழுத்து தெய்வ ரூபேண….இயல்பு மனுஷ்ய ரூபேண….ஜெயகாந்தன் எழுத்தறிவித்த இறைவன் ரூபேண….
விரசம் இல்லாமல் சமூக அவலங்களை, வாழ்வின் நிலையாமையை சொல்லவல்ல ‘’சரஸ்வதி மைந்தன்’’….இவர் உள்ளங்கையில் நெல்லிக்கனியாக எப்போதும் “மஹாகவியின்’’ பாடல் புத்தகம் இருக்கும்….சிறுகதையை ஒரு பாஷையாக்கிய பெருமகன்….இவரது “பாரீஸுக்குப் போ’’, “விழுதுகள்’’, “நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’’, “நந்தவனத்தில் ஓர் ஆண்டி’’ இப்படி பல சகாப்தங்கள் படைத்தும், இவர் தோழர்களுக்கு “சக -ஆப்தனாக’’ இருந்தவர் (எனக்குத் தெரிந்த உதாரணம் “பார்த்தி’’)….
”கயைசார்ந்த ஜீவன்கள் காதுவழி மோட்சத்தை
தயைகூர்ந் தளித்திடும் தெய்வத்தை, -ஜெயகாந்தன்
பார்த்ததால் பாரீஸன் பக்கமுறப் போனாரே,(பாரீஸுக்குப் போ)
பார்த்தியைப்பார்த் துக்கொள் பகர்ந்து’’….கிரேசி மோகன்….


Leave a Reply