அந்த மாமரம் அன்று
சொந்த மாமரம் எமக்கு
தந்த நிழற் குடையில்
குந்தப் பாய்விரித்த
முந்தை அனுபவம் இது
சந்தமாய் நெஞ்சில் பாயுது!
வாழ்வூக்கிய பால பருவ
வான் நோக்கிய மாமரம்
புல் வெட்டிப் பசுந்தாகக்
கல் பொறுக்கிச் சுத்தமாகச்
சருகுகள் கூட்டி அள்ளி
ஒருமையாய் ஒரு மைதானமாக்கி
அருமையாய் அப்பா சகோதரர்களுடன்
ஒருத்து அனுபவித்த வசந்தம்
பெருமையான மாலைப் பொழுதுகள்
கருமையற்ற மனமினித்த காலங்கள்!
தேன் சுவையான மாம்பழம்
பென்னம் பெரிய மாம்பழம்
இன்று நினைத்தாலும் ஏக்கம்!
மாலைத் தென்றல் பெரும்
சாலையெனப் புகுந்து விளையாடி
வாலையாட்டிச் சாமரம் வீசியது
ஊஞ்சல் கட்டி ஆடி
உறவாடிய பசும் கொற்றக்குடை!
பெரிய கல்லோ ஒரு
பெரிய வேரின் புடைப்பையோ
சிம்மாசனமாக்கிக் கூடி அமர்ந்து
சிரித்து ரசித்த ரசனை
சிந்தை நிறைந்து வழிகிறது
கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
குலவியதை நெஞ்சம் மறக்காதது!
குறை! இன்றைய பிள்ளைகளறியாதது!
(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம்
தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை.
எனது நூல்களாக
2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு
2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ”..குழந்தைகள் இளையோர் சிறக்க..”
2007ல் உணர்வுப் பூக்கள் – தொகுப்பு – இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் ” எனது நூல்கள்” என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம்.
1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம்.
அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ”பெட்டகோ” எனும் தகுதி பெற்றேன்.
14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.