இசைஞானி இளையராஜா இன்று பிறந்த நாள்…
— கவிஞர் காவிரிமைந்தன்.
இசைஞானி இளையராஜா இன்று பிறந்த நாள்…
அசையும் பொருள்கள் யாவும் அவனது சொந்தம் என்று ஆண்டவனைச் சொல்வார்கள்…
இசையும் மனங்கள் எல்லாம் இவருக்கே சொந்தம் என்றே சொல்லலாமா?
திசைகள் எட்டும் இசையால் நிறைத்த இவர்தம் கீதங்கள் ..
பசியால் வாடியபோது கிடைத்த அற்புத விருந்தன்றோ?
திரையிசைதன்னில் நுழைந்தது அன்று அன்னக்கிளியாலே…
உயிரிசை என்று ஆனது எல்லாம் உன்னாலே..
இன்னிசை முழங்கும் இனிய வருடல்கள் இவரது கானங்கள்..
இரவோ பகலோ கேட்டு மயங்கலாம் எல்லோரும் வாருங்கள்..
அன்பின் தவத்தால் ஆண்டவன்பதம் தொடும் அருளினைப் பெற்றவர்
ஆயிரம் புகழ் தானது வந்துமே அடக்கத்தைக் காட்டுகின்றார்..
எத்தனை எத்தனை இசையின் சித்திரம் அழகாய் வரைகின்றார்..
நித்திரை தொடும்வரை நம் நெஞ்சில் கோலங்கள் இடுகின்றார்..
கருணையின் கோயிலில் கடவுளைக் காணலாம் இசையின் மூலமே..
இதயத்தின் வாசலில் நித்தமும் போடலாம் நாதங்களின் கோலங்களே..
பண்ணைப்புரத்து பைந்தமிழ்ச் செல்வம் நம்ம சின்ன ராசாதான்….
இன்றும் என்றும் நலமாய் வாழ்ந்து இசைபோல் வாழ்ந்திடவே..
இதயம் நிறைந்து கவிதை வழியே இசையே.. உம்மை வாழ்த்துகிறேன்..