நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
அன்பே வா திரைப்படத்தில் அனைத்துப்பாடல்களும் அற்புத வகையைச் சார்ந்தவை. மெல்லிசை மன்னரும் கவிஞர் வாலியும் இணைந்து தந்த இன்ப நாதங்கள்! ஏவிஎம் தயாரிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ஒரு காதல் கதை சுகமாக பின்னப்பட்டிருக்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும் இணைந்து நடித்த இன்னொரு காவியம். அலுப்பில்லாமல் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமெனில் அன்பே வா என்று அடித்துச் சொல்லலாம்! கண்ணைக் கவரும் காஷ்மீரின் அழகு எண்ணம் முழுவதையும் கொள்ளையடித்துவிடும்! நகைச்சுவைப் பகுதியை நாகேஷும் மனோரமா ஆச்சியும் கொட்டிக் குவித்திருக்கிறார்கள்.
அன்பில் உயிர்க்கும் காதல் இன்பம் தருவது சரிதான்… ஆனால், ஒருவரையொருவர் புரிதல் அடிப்படையாக வேண்டுமன்றோ? இங்கே இவர்தம் புரிதல் இணைந்து நடக்கத் தவற … ஒருவர் புரிந்துகொள்ளும்போது மற்றொருவர் புரிந்துகொள்ளத் தவறுகிறார். இதுதான் கதையின் போக்காக… அதிலே வரும் பாடல்கள் பொழியும் தேனாக… டி. எம். சௌந்தரராஜன் அவர்களுடன் பி.சுசீலா குரல்கள் இணைய இனிய பாடல் ஒலிக்கிறது.
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத்தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
பாடலின் காட்சி அமைப்பும்… ஈர்க்கும் இருவர் நடிப்பும்… இன்னும் இன்னும் இந்தப் பாடலை நமக்கு சொந்தம் செய்யச் செய்கிறது. திரைப்படத்திற்காக எழுதப்பட்டு இருந்தாலும்… அட… கவிஞன் எழுதிய ஒரு கவிதை இசையைப் பெற்றது போலிருக்க… இயல்பான வார்த்தைகள் அரங்கேறுகின்ற அழகுதான் வாலி அவர்களின் கைவண்ணம் காட்டுகிறது.
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
காதல் கொண்ட உள்ளங்கள் அனைத்திற்கும் பொருந்தும் கவிதைதான்… இன்பத்தேர் இதயம் நோக்கி நகர்வதைப்போல் ஒரு பாடல் பதிவாகி நம் மனதில் பதிந்திருக்கிறது. புரட்சித் தலைவரின் பாடல்கள் வெற்றியின் விளிம்பைத் தொடுபவை என்பதற்கு இந்தப் பாடலும் சத்திய சாட்சியாய்…
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்லஅழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ?
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
கனவோ நனவோ எதுவோ?
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
பாடல்: நான் பார்த்ததிலே (1966)
திரைப்படம்: அன்பே வா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
காணொளி: https://youtu.be/ndvucTxXwhA