சிகரம் நோக்கி (11)
வெற்றி
சுரேஜமீ
தொட்டுவிடும் தூரம் தான் வானம்;
தொட முனைபவர்க்கு!
தோகையை விரித்தால் தான்
மயிலுக்கு அழகு!
எண்ணங்கள் எனும் தோகை விரிந்தால்தான்
ஏற்றங்கள் பெற முடியும்! – சுரேஜமீ
நாம் எதை நினைக்கிறோமோ, அதுவாகவே ஆகக் கூடிய வல்லமை, மனிதனுக்கு மட்டுமே உண்டு! ஆனால், நம் நினைவுகள் எல்லாம் ஒரு எல்லையிலேயே இருப்பதுதான், நம் பிரச்சினையே.
ஒரு விடயத்தை எடுத்தால், அதில் வெற்றியடையும் வரை, வேறு எச்சிந்தனையும் இல்லாமல், ஒரு முகமாக, செயலில் ஏகினால், வெற்றி தள்ளிப் போகலாமெயொழிய, நிச்சயம், தட்டிப் போகாது!
நம்புங்கள் உங்களை! நாளை வரலாறு உங்களால் எழுதப் படும் என்று! வரம் கேட்டு உங்கள் வாசலுக்கே வரும் வாய்ப்புகள்!
எந்த ஒரு சாதனையாளருக்கும், வெற்றி தன் வாயிற்கதவை உடனே திறந்து விடவில்லை; ஒவ்வொரு முறையும் ஒரு படிப்பினையைக் கொடுத்துத் தங்கத்தை மெருகேற்றுவது போல, தன்னைச் செதுக்கிய பின்னரே வரும் வெற்றி, காலத்தால் போற்றப் படுகிறது என்பது நாம் அறிந்ததே!
அப்படி இருந்தும் ஏன், நாம் மட்டும் தோல்வி என்றவுடன், எதிர் மறையாகச் சிந்திக்கிறோமே?
தோல்வி என்பது விதை போன்றது; விதை வீறிட்டு எழும்வரை போராட்டம்தான்!
எழுந்த மறு நொடியே பாராட்டும் வாழ்வு பிறக்கும்!
தோல்வி கற்றுத் தரும் பாடத்தை, உளிதாங்கும் சிற்பத்தைப் போல, எடுத்தவுடன் கிடைக்கும் வெற்றி ஒருநாளும் கற்றுத்தராது!
வெற்றியின் ரகசியமே, நீங்கள் எந்த நிலையில் ஒரு செயலின் முடிவை அணுகுகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முடிவும், படி தாண்டி வரும்பொழுது, ஒவ்வொன்றும் வெற்றிதானே?
வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.
பாரதி என்ன சொல்கிறான்?
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
உரக்க, உணர்வுகளோடு இந்த வரிகளைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் உதிரத்தில் வெற்றியின் வேர்கள் நிச்சயம் விதைக்கப்பட்டுவிடும்! திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்! உங்கள் வாழ்வின் இலட்சியம் புலப்படும்!
மனித வாழ்வு என்பது அதிக பட்சம் நூறு ஆண்டுகள் தான்! இருக்கின்ற ஒவ்வொரு நாளும், இறைவன் கொடுத்த பரிசு! விதி என்று உங்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள். உங்கள் வாழ்வு, உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ‘ரைட்’ சகோதரர்களை, இந்த உலகம் ஏளனமாகத்தான் பார்த்தது; ஆனால், இன்று அதன் வசதியில், இந்த உலகத்தின் ஒரு மூலையும், மற்றொரு மூலையும் தொட்டுவிடும் தூரமாகிப் போனதென்றால்,
நீங்கள் அறிய வேண்டுவது, உங்கள் முயற்சிகளைப் பற்றிய, உங்களின் தெளிவான சிந்தனையே அன்றி, அடுத்தவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனங்கள் அல்ல என்பதே!
உங்களுக்கு எது விருப்பமானதோ, எதை உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ, அதைத் தாமதிக்காமல் செய்ய முற்படுங்கள்! வெற்றி உங்கள் கைகளில் தவழும் நாள் வெகு தொலைவில் இல்லை!
ஒருபோதும் உங்களுடன் மற்றொருவரை ஒப்பீடு செய்யாதீர்கள்! அது உங்களை, நீங்களே அவமதிக்கும் செயல் என்று உலகப் பணக்காரர்களுள் ஒருவரும், வெற்றியின் உச்சத்தை அடைந்தவருமான பில் கேட்ஸ் கூறுகிறார்.
சத்தியமான வார்த்தைகள் அவை!
மாபெரும் சபைதனின் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும்!
ஒரு மாத்து குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!
எப்பொழுது அது நடக்கும்?
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை
வணங்காமல் நீ வாழலாம்!
என்ற கவியரசரின் எளிமையான வரிகளை உங்கள் இதயத்தில் இருத்தி, இலட்சியங்களை நோக்கி, இடைவிடாது பயணிக்க,
சிகரங்கள் சிரம் வணங்கக் காத்திருக்கிறது உங்களுக்காக!
…….. தொடர்ந்து பயணிப்போம்!
அன்புடன்
சுரேஜமீ