பவள சங்கரி

உள்ளத்தில் உண்மையும், மனதில் தெளிவும், விடா முயற்சியும் இருந்தால் எந்த தீய சக்தியும் அணுகாமல் தம் இலட்சியம் நிறைவேற மன உறுதியே துணை நிற்கும் என்று நிரூபித்து உள்ளார் சிங்கால்!

மனதில் உறுதி வேண்டும்!

545543_362907083797923_2088759971_n

‘மன உறுதி’ என்பது ஆண், பெண் என இரு சாராருக்கும் பொதுவான விசயம். காரணம் ‘மனம்’ என்பதற்கு மனம் என்பது ஆன்மாவின் தொடர்புடையது என்பதே நம் ஆன்மீகம் நமக்கு உணர்த்தும் நெறி. இந்த மனத்தில் தோன்றும் எண்ணங்கள்தான் ஒருவரின் குணநலன்களையும், அதன் தொடர்பான வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது என்று எடுத்துக்கொண்டால் அந்த எண்ணம் தோன்றுவது எப்படி? ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட எண்ணங்கள் தோன்றுவது எப்படி? ஒருவருக்குள்ளேயே பலவிதமான கோணங்களில் பல்வேறு எண்ணங்கள் தோன்றுவது எங்கனம்? இவையெல்லாம் புரியாத புதிராக இருந்தாலும், இந்த மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்து தாம் எடுக்கும் காரியங்களை தடையேதும் இன்றி நிறைவேறும் பொருட்டு, அதனை அலைபாய விடாமல், உறுதியுடன் நின்று சாதித்துக் காட்டியவர் பலர். அவர்கள் வரலாற்றுப் பட்டியலில் நீங்கா இடம் பெறக்கூடிய வாய்ப்பும் பெறுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சாதனையாளர்தான் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ள டெல்லியைச் சேர்ந்த மாற்று திறனாளி பெண்ணான இரா சிங்கால். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் ஆகிய உயர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நாடெங்கிலும் மொத்தம் 1,236 பேர் பணி ஒதுக்கீட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் அவர்களில் டெல்லியைச் சேர்ந்த இரா சிங்கால் முதலிடம் பெற்றுள்ளார். இந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டைக்காட்டிலும், நம் தமிழகத்தில் அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த, 2012ல், 97 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 2014ல், 118 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

050715_disabled

இரா சிங்கால் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற இந்திய வருவாய்துறை பணி தேர்வில் வெற்றி பெற்று தற்போது ஐதராபாத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 31 வயதான, இரா சிங்கால் ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றபோது அவரது ஊனம் அதிகமாக இருப்பதாகக் கூறி பணி இடம் வழங்க மத்திய பணியாளர் நலத்துறை மறுப்புத் தெரிவித்தது. ஆனால் மனம் தளராத சிங்கால் நான்கு ஆண்டுகள் கடுமையாக சட்டத்துடன் போராடி பின் கடந்த டிசம்பர் மாதம்தான் இவருக்கு பணி இடம் ஒதுக்கப்பட்டது. முதுகுத் தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளைந்து, உயரம் குறைவாகக் காணப்படும் இவர் அதனால் மனம் தளராமல் ஐ.ஏ.எஸ் தேர்வில் நல்ல ரேங்கில் வெற்றி பெற வேண்டும் என்கிற தனது கனவை தற்போது நனவாக்கியுள்ளவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தீவிர மன உறுதியே தனது வெற்றிக்கு முக்கியக் காரணம் எனக் கூறும் சிங்கால் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

தன்னுடைய உடற்குறையை பெரிதுபடுத்தாமல், தான் கொண்ட இலட்சியமே பெரிதென சாதித்துக்காட்டியிருக்கிறார் சிங்கால். தன் புறத்தோற்றமோ அல்லது உடற்குறையோ தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவிடாமல், இதனால் எந்த விதமான தாழ்வு மனப்பான்மையோ அல்லது தம் சக தோழியருடன் ஒப்பீடு செய்து அதனால் தம் மன நிலை பாதிக்கப்பட்டு மன உறுதியை இழந்துவிடாமல், தம் இலட்சியத்திற்கு இந்த ஊனமோ அல்லது மற்ற எதுவும் தன்னை அண்டாது என்ற நம்பிக்கையே அவரை சாதனைப் பெண்மணியாக்கியிருக்கிறது.

இந்தத் தாழ்வு மனப்பான்மையானது, ஆண்,பெண் என்ற இரு சாராரையும் விட்டு வைப்பதில்லை. என்றாலும் பெண்கள் சீக்கிரம் மனச்சிக்கல்களுக்குச் சிறைப்பட்டு விடுகிறார்கள் என்ற பெண்ணிய உடல் கோட்பாட்டை முறியடித்திருக்கிறார் இவர். அன்றாட வாழ்வில் பல விதமான துன்பங்களுக்கு ஆட்படும் ஒரு குறைபாடுடன், இத்தனை பெரிய சாதனை புரிந்தாலும், தற்போதும் ஐஏஎஸ் பணி ஒதுக்கீடு செய்வதிலும் அரசு தயக்கம் காட்டுமோ எனஅவரும் அவருடைய பெற்றோரும் கலக்கம் அடைந்துள்ளனர். ஐ.ஏ.எஸ். பணி என்பது மிகவும் சவாலான ஒரு பணிதான் என்றாலும், அவருடைய மனவலிமையை கருத்தில்கொண்டு, அதற்குரிய வகையில், அவருக்குரிய பணியை வழங்குவதே நியாயமான செயல். நான்கு முறை முயன்று தம் தரத்தை உயர்த்திக்கொண்டு பெரும் பாடுபட்டு இந்நிலையை அடைந்திருக்கும் இவருடைய வல்லமையை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வதே முறையாகும்.

பொதுவாக ஒரு பெண் புறத்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலேயே, சின்னச் சின்ன பாதிப்புகளுக்கும் விரைவிலேயே மனம் தளர்ந்து விடுவதோடு, தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு தன்னம்பிக்கைக் குறைவுக்கும் ஆரோக்கியக்கேடு என மிகப் பெரிய ஆபத்தாகவும் அமைந்து விடுகிறது. சமுதாயத்துடன் ஒன்றி செயல்படுவதற்கும் இது பெரும் சவாலாகிவிடுகிறது.

நம்பிக்கைதான் வாழ்க்கை. அதற்கு மன உறுதியே வித்து. மனச்சிதைவிற்கு வழிவிடாமல், தம்மால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சாதித்துக் காட்டியிருக்கும் இரா சிங்கால், நம் நாட்டிற்கு தம் தன்னலமற்ற சேவையை வழங்குவார் என்ற நம்பிக்கையும் நம்முள் துளிர்விடுகிறது.

சிங்கால் தாமே கூறியுள்ளபடி, “இதற்குப் பிறகு மக்கள் பெண்களை அதிகமாக மதிப்பார்கள். குறிப்பாக உடல் ஊனமுற்ற பெண்களை மிகவும் மதிப்பார்கள்” என்பது சத்தியமான வாக்கு. தற்போது இந்திய வருவாய் துறையில், அதிகாரியாக பணியாற்றி வரும் தாம் விரும்பியபடி எந்த தடையும் இல்லாமல் ஐ.ஏ.எஸ். பதவி கிடைத்து, நாட்டிற்கு நலம் பல செய்ய வேண்டும் என்று மனமார வாழ்த்துவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.