மீ.விசுவநாதன்

vallamai111-300x150111111

தொந்தி சரியத் துவண்டு நடக்கின்றாய் !
பந்தியில் நன்றாய்ப் பசிக்குமேல் வந்ததை
தொப்பையில் கொட்டுகிறாய் ! தூங்காதே ஏங்குகிறாய் !
உப்பை விலக்கியே உண். (131) 10.05.2015

முகநூலில் வாழ்த்தியே மோகத்தை உன்னுள்
தகதகக்க ஏற்றுவர் ! தாகந் தவிக்க
மணிக்கணக்காய் வாய்பிளந்து மௌனத்தில் நிற்பாய் !
பணிமறக்கச் செய்யும் பவிசு. (132) 11.05.2015

தொத்து வியாதி தொடவே நடுங்குவர் ;
சொத்து வியாதி சுகமென நித்தமும்
சுற்றிக் கிடந்தே சுரண்டத் துடிப்பரே !
பற்றறு , பாடம் படி. (133) 12.05.2015

நீலகண்டா என்மன நீலவண்ணா என்றுநீ
ஆலயம் சென்றே அமைதியைத் தேடுறாய் !
பிஞ்சுக் குழந்தையின் பிள்ளை மொழியிலே
தஞ்சமே ஆண்டவன் தான். (134) 13.05.2015

ஒருஊரில் ஒர்ராஜா ! உற்சாக வெள்ளம்
தெருவெல்லாம் ஓட , தெரிந்தே திருடினான்
மக்கள் பொருட்களை ; மன்னன் திறமையைத்
திக்கெலாம் பாராட்டு தே (135) 14.05.2015 வியாழன்

வாரி வழங்கும் மனதில் நிறைவென்றால்
சேரியில் வாழ்ந்தாலும் சிந்தனையில் பாரிதான் !
நாட்டிலே தர்மமும் ஞானமும் ஓங்குவது
தொட்டில் பழக்கத் துளி. (136 ) 15.05.2015 வெள்ளி

ஊரில் சிலபேர்கள் ஒன்றாய்த் திருடினர் ;
பாரில் ஒருவனைப் பக்குவமாய் ஆடாக்கி
மூன்றுபேர் சேர்ந்து முதல்பலி செய்தனர் !
தின்றவன் தேடுறான் நீர். (137) 16.05.2015

சாமியார் பேச்சிலே சத்தியம் உண்டென்று
தூவிய பூவால் தொழுதானே பாதத்தை !
சாமியார் கண்களின் சாயம் வெளுத்திட,
தூவிய பூவில் துயர். (138) 17.05.2015

எனக்கென்றே எண்ணினால் எல்லாம் சுமைதான் !
மனக்கூத்தன் ஆசையை மற்றோர் நலத்தில்
திருப்ப வருமத் திருப்தி சுகமாம் !
இருப்பதி(ல்) ஈதல் இனிப்பு. (139) 18.05.2015

பேத்தியும் பேரனும் பேசுகின்ற பேச்செலாம்
ஆத்திரம் போக்கும் அருமருந்து – ஊத்திய
பூங்காற்றாய் உட்சென்று பொங்கிவரும் அற்புத
மூங்கில் துளைவழி மூச்சு. (140) 19.05.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *