— க. சிவா.

Panchayat_India_1இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 73-வது திருத்தத்தின்படி, கிராமசபை மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புக்களின் அடித்தளமாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி அடித்தட்டிலுள்ள கிராம மக்கள், தங்களைத் தாங்களே நேரடியாக நிர்வகித்துக் கொள்ளவும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மறைமுக மக்களாட்சி நிர்வாக செயல்பாட்டுக்கும் ஒரு வழிகாட்டி. அதனைக் கண்காணிக்கும் ஒரு மேன்மையான அமைப்பாகவும் கிராமசபை உள்ளது. கிராம சபையே மக்களாட்சியின் ஆணிவேராகவும், மக்களின் ஒன்றுபட்ட குரலாகவும் செயல்பட வேண்டும். இது வெறும் கிராம சபை அல்ல முழுக்க முழுக்க மக்களுக்கான மக்கள் சபை. கிராம சபைதான் பஞ்சாயத்து நிர்வாகம் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மை கொண்ட பொறுப்பான நிர்வாகம் அமைப்பதற்கும் வழிவகுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை, இதை மறுப்பதற்கில்லை. ஆனால் மக்களின் பங்களிப்பும், பங்கேற்பும் கிராம பஞ்சாயத்தின் அங்கமான கிராம சபை என்ற மக்கள் சபையில் குறைந்து வருகிறது என்பது தான் இன்றைய எதார்த்த நிலை.

கடந்த அக்டோபர் 2-ஆம் நாள் நடப்பதாக இருந்த கிராம சபை கூட்டத்தை, சில காரணங்களினால் மாவட்ட நிர்வாகம் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பிறகு 12-ஆம் தேதி நடக்கவிருந்த கிராம சபை கூட்டத்தில் பங்கு கொள்ளவும், ஒரு பார்வையாளனாகவும் இருப்பதற்காகத் தேனியில் உள்ள ஒரு பஞ்சாயத்திற்குச் சென்றேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முன்கூட்டியே அந்த பஞ்சாயத்திற்குச் செல்ல பேருந்தில் பயணமானேன். பேருந்திலோ கூட்டம் அலைமோத, பெரும் மோதல்களுக்கிடையே சிக்கிக் கொண்டு வியர்வை சொட்ட சொட்டப் பயணத்தை தொடங்கினேன். பேருந்து நடத்துனருடன் வாக்குவாதம் காரணம் சரியான பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாதது, மற்றும் சரியான சில்லறை கொடுக்க மறந்ததுமே. மக்களின் விழிப்புணர்வு மற்றும் உரிமைக்குக் குரல் கொடுப்பது போன்றவற்றையும் அந்தப்பயணத்தில் காணமுடிந்தது. நான் செல்வதென்னவோ கிராம சபை(எ)மக்கள் சபை கூட்டத்திற்கு, பேருந்தில் நடப்பதென்னவோ மக்கள் கூட்டத்தின் நடுவே ஜனநாயக மக்கள் சபை. மக்கள் தங்களின் உரிமை மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது பஞ்சாயத்தில் மட்டுமல்ல அனைத்துப் பொது இடங்களிலும் என்பது அப்போதுதான் புரிந்தது எனக்கு.

இந்தச் சம்பவம் ஒரு ஒத்திகையாக இருக்கிறதே என்ற எண்ணம் மனதில் ஓட, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்தப் பயணம் நான் செல்லவிருந்த ஊரை அடைந்தது. பேருந்தை விட்டு இறங்கியதும் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டு ஊரை நோக்கி நடந்தேன். எதிரே ஓர் முதியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் பஞ்சாயத்து அலுவலகம் எங்கு உள்ளது என்று கேட்க அவரோ நேராக இந்த ரோட்டுல போய் மேற்கால திரும்புப்பா என்றார். முதியவர் கூறிய திசையை நோக்கி நடந்தேன். பஞ்சாயத்து அலுவலகம் தெரிந்தது, மனதுக்குள் ஒரு சிரு சந்தோசம், அந்தச் சந்தோசம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் பூட்டிய கதவை பார்த்தவுடன். கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடக்கவில்லை என்பது ஒரு பக்கம் மனதில் ஓட, மறுபக்கம் படித்தது நினைவிற்கு வந்தது. கிராம சபை கூட்டத்தைப் பஞ்சாயத்து எல்லைக்குள் ஏதேனும் ஒரு பொது இடத்தில்தான் நடத்த முடியும் என்று எண்ணியவாறே அருகிலிருந்த மளிகைக்கடையில் உங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் எங்கே நடக்கிறது என்றேன். அதற்கு அவர் கிராம சபையா அப்படி என்றால் என்ன என்பது போல பார்த்தார். அவருக்குப் புரியவில்லை என்றெண்ணி பஞ்சாயத்து கூட்டம் என்றேன். அதற்கு அவர் சட்டென்று தெரியவில்லை என்று கூறிக்கொண்டே கடையில் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரி,பரவாயில்லை பஞ்சாயத்து அலுவலகம் பூட்டியுள்ளது எனவே பஞ்சாயத்து தலைவரின் தொலைபேசி எண் உங்களிடம் உள்ளதா என்று கேட்க, அவரோ அதோ அந்தப் பலகையில் உள்ளது பாருங்கள் அதுதான் என்று கூறினார். பலகையிலோ தலைவர் என்று எழுதி அதனருகில் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது.

அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் ஒரு ஆண் குரல். சார், நீங்கள் பஞ்சாயத்து தலைவரா என்று நான் கேட்க, அவரோ ஆம் என்றார். நான் வெளியூல் இருந்து இன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தை பார்வை இட வந்ததாகவும், கூறி கிராமசபை கூட்டம் எப்போது, எங்கு நடக்கும் என்று கூறுங்கள் நான் தற்போது பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்கிறேன் என்றேன். அவரோ சிறிது நேரம் அலுவலகத்தில் காத்திருங்கள் என்றும் உடனே வந்துவிடுவதாகவும் கூறினார். இதற்கிடையில் அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் பஞ்சாயத்து பற்றியும் அவ்வூரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். பின்பு நேரடியாகக் கிராம சபை கூட்டத்தை பற்றியும் கேட்டேன். அந்தக் கிராம மக்களோ தாங்கள் கூறும் பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படுவது இல்லை, அதனால் அதற்குத் தாங்கள் செல்வதும் கிடையாது என்றும்; அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பஞ்சாயத்து தலைவரிடமும், வார்டு உறுப்பினர்களிடமும் தான் கேட்க வேண்டும் என்றனர். மக்கள் இப்படி தங்களின் ஜனநாயக உரிமைகளையும், தங்களுக்கான அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் இருப்பதை அந்த ஊரின் மக்கள் சிலரிடம் பேசியதில் இருந்து எனக்குப் புரிந்தது.

இதற்கிடையில் பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தார். அவருடன்பேசிய போது கிராமசபை கூட்டத்தை நான் பார்வையிடவந்துள்ளதாகக் கூற, அவரோ சற்று தயங்கிய குரலில் சார் … என்று இழுத்தார். ஒரு வேளைக் கிராம சபைக்கூட்டம் முடிந்துவிட்டதோ என்று எண்ணியவாறே கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 10.30 தான் ஆனது. இதைக் கவனித்த பஞ்சாயத்துத் தலைவர் எங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் என்று எதுவும் நடக்காது. அப்படி கூட்டம் கூட்டினாலும் மக்களும் வருவது இல்லை என்றார். அப்படி என்றால் கிராம மக்கள் தங்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கிராம சபையில் எடுத்துக் கூற மாட்டார்களா, அவர்களின் பங்கேற்பு இல்லாத பட்சத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியலை எப்படித் தயாரிப்பீர்கள், பஞ்சாயத்து அமைப்பின் ஆண்டறிக்கை மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களை பற்றியெல்லாம் எப்படி மக்களுக்குத் தெரியப்படுத்துவீர்கள் என்று கேள்விகளை அடுக்கினேன்.

பஞ்சாயத்துத் தலைவரோ கூட்டம் கூட்டினாலும் மக்களும் வருவது இல்லை அதனால் நாங்களாகவே வார்டு உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, கிராம சபை நடந்ததற்கான வருக்கைப்பதிவேட்டில் பொதுமக்கள் பங்கேற்பு இருப்பதைப் போன்றும், புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியல் மற்றும் தீர்மான போன்றவற்றைத் தயாரிக்க வார்டு உறுப்பினர்களே உதவுவதாகவும் கூறினார். பஞ்சாயத்துத் தலைவர் சொன்னதில் உண்மை கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அவர் கூறிய எதார்த்தத்தில் உள்ள உண்மை இரண்டு காரணங்களால் நிகழலாம். ஒன்று மக்களிடையே எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்பது, மற்றொன்று மக்கள் பஞ்சாயத்து தலைவரின் மீதும் வார்டு உறுப்பினர்களின் மீதும் நம்பிக்கையில்லா நிலை மற்றும் மக்கள் கிராம சபை (எ) மக்கள் சபையின் மீது விழிப்புணர்வு இல்லாததுமே தான் காரணங்களாக இருக்கக்கூடும்.

வருடத்தில் நான்கு முறை நடக்கும் கிராம சபை கூட்டத்திற்கு கிராமசபை கூட்டத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் யாரும் வருவதில்லையா என்றக்கேள்விக்கு; அதிகாரிகள் வருவார்கள் என்றும் அவர்கள் வருவதற்கு முன்பு போன் செய்துவிட்டுத்தான் வருவார்கள் என்றார். அதிகாரிகள் வரும்போது அவர்கள் கையொப்பமிட வேண்டிய ஆவணங்களைத் தயார்படுத்தி வைத்துக் கொள்வோம். வந்தவுடன் கையொப்பமிட்டுவிட்டு உடனடியாகச் சென்றுவிடுவார்கள் என்று கூறிய பஞ்சாயத்துத் தலைவரின் பதிலின் மூலம், அதிகாரிகளின் அலட்சியப்போக்கும் மற்றும் அக்கறையின்மையையும் தெரிகிறது. கிராமசபை கூட்டத்தை கண்காணிக்கும் அதிகாரிகளே கடமையை சரியாகச் செய்யாததினாலும், தவறுக்குத் துணைபோவதினாலும் மக்கள் இல்லா கிராம சபை (எ) மக்கள் சபை நடத்தப்பட்டு உருவாக்கப்படும் போலியான ஆவணங்கள் கூட உண்மையான கிராம சபை நடத்தப்பட்டு மக்கள் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் போல ஆகிவிடுகின்றது.

அதுமட்டுமின்றி வார்டு உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியல் போலியானதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகமக்களுக்கு மட்டும் சாதகமாகவும் உள்ளது. உண்மையிலேயே பாதிக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்களை எதிர் நோக்கிக் காத்திருக்கும் பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. சில சமயங்களில் உண்மையான பயனாளிகளுமே லஞ்சம் கொடுத்துத்தான் வளர்ச்சி திட்டத்தின் பயனை அடையவேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலைதான் அந்தப் பஞ்சாயத்தின் நிலையாக இருக்கக் கூடும் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகப் பஞ்சாயத்து தலைவர் கூறுவதில் இருந்து அறிய முடிந்தது.

73- வது இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கூறும் பஞ்சாயத்து அமைப்புகளின் அடித்தளமே கிராம சபை (எ) மக்கள் சபைதான். இதன் மூலமே மக்களின் நேரடி ஜனநாயகத்தை உருவாக்க முடியும், அந்த அமைப்பு தான் மக்களை அதிகாரப்படுத்தும் என்று கூறும் பஞ்சாயத்துச் சட்டங்கள் எழுதப்பட்டிருந்தாலும் கூட அது அதன் செயல் பாட்டில் பல குறைபாடுகளுடன் தான் உள்ளது. இதைச் சரிய செய்ய வேண்டிய அதிகாரிகளின் அலட்சியப் போக்குமே மக்கள், மக்கள் ஜனநாயகத்தையும், அவர்களின் அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாமல் போவதற்கு காரணமாக அமைகிறது. ஒருவேளை மக்களின் பங்கேற்பு மக்கள் சபையில் இல்லை என்றாலும் அதை விழிப்புணர்வு என்ற கோணத்திலாவது அதிகாரிகள் கிராம சபை (எ) மக்கள் சபையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூற முற்பட்டிருக்க வேண்டுமே தவிர கிராம சபை என்ற பார்வையில் நடத்தப்படும் அதிகார சபைக்கு துணை நிற்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

கிராம சபை (எ) மக்கள் சபையின் மூலம் பாமரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், நலிந்தோர், எளியோர் மற்றும் பெண்கள் என அணைத்து தரப்பினரையும் வேறுபாடின்றி நேரடியாக அடித்தள நிர்வாகத்தில் பங்குபெற முடியும். அவர்களே அவர்களின் முன்னேற்றத்திற்கு நேரடியாகவே திட்டமிடுதலும் திட்டச் செயலாக்கத்திலும் பங்கு கொள்ள வழிவகுக்கிறது. கிராம சபை (எ) மக்கள் சபை. எனவே, மக்கள் இல்லாத மக்கள் சபையை ஆதரிப்பதை விடுத்து உண்மையான மக்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மக்களை அதிகாரப்படுத்தும் கிராம சபை (எ) மக்கள் சபையை முறையாகக் கட்டமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதிகாரங்களும் மக்களும் தங்களின் முழுமையான பங்கேற்பையும் கொடுக்க முற்பட்டாலொழிய மக்கள் இல்லா மக்கள் சபை பல பஞ்சாயத்துகளிலும் தொடரும் என்பது தான் எதார்த்தமான உண்மை.

க. சிவா,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அரசியல் மற்றும் முன்னேற்ற நிர்வாகவியல் துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராம்–624302.

படம் உதவி: விக்கிபீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *