முழுமையான சுதந்திரம்!
-சரஸ்வதி ராசேந்திரன்
கண்ணாய்த் தலைவர்கள்
காத்து நமக்களித்த
சுதந்திரத்தைக் காத்தோமா?
ஊரெங்கும் கொலை கொள்ளை களவு
லஞ்சம் வஞ்சம் பகை
இவைதானே செழித்துக்கிடக்கிறது ?
நட்ட நிசியில் என்று ஒரு பெண்
பயமின்றி நடக்கிறாளோ
அன்றுதான் உண்மைச்
சுதந்திரம் என்றார்; இங்கோ
பட்டப் பகலிலேயே
மனிதனின் காமம்
மரணக் குழிவெட்டும் சோகம்
மலராத மொட்டுகளைக் கூடக்
கசக்கியெறியும்
கயவர்கள் கூட்டம்
இதுவா சுதந்திரம் ?!
குடிக்கும் குளிர்பானம்
குளிக்கும் சோப்புகள்
துலக்கும் பற்பசைகள்
உண்ணும் உணவுவகைகள் என
வெளிநாட்டுப் பொருட்களை
உபயோகிப்பதா சுதந்திரம்?
அந்நியனை விரட்டியது மட்டுமல்ல
அவர்களின் பொருளாதார
ஆதிக்கத்தையும் என்று விரட்டுகிறோமோ
அன்றுதான் முழுமையான சுதந்திரம்!
போனது போகட்டும்; இனியாவது
கலாம் போல், காமராஜர் போல்
நாட்டு நலனில் அக்கறை எடுப்போம்
சுதந்திர தினத்தில் மட்டும்
கொடியைத் தூசிதட்டி ஏற்றி
இனிப்பு வழங்கி அன்றோடு
சுதந்திர தினத்தை மறக்காமல்
கெட்டவைகளைக் களைந்து
சத்தியம் தர்மம் நேர்மை
சட்டம் ஒழுங்கு உண்மை
இவைகளைக் கடைப்பிடித்து
இந்தியாவை வல்லரசாக்க
முழுமூச்சோடு பாடுபடுவோம்!
