கானல் கனவு

நாகினி

 

உனக்கென ஒரு குடும்பம்
எனக்கென இல்லற தர்மம்
சுமக்கின்ற காலம்
கதையொன்று காதலென கைநீட்டுவதேனோ!

கடந்த இளமை பருவம்
கசக்கிய காதல் உயிரை
காலம் கடந்த பருவம்
கண்களில் காட்டுதல் சரியென்றாகிடுமோ!

மறக்கவில்லை உனையே
துறக்காத இச்சைகளுடன்
இறக்க விட்டதேன் வெட்கமதை
வெறுத்துவிட்டேன் எனையே!

கண்ணில் நின்ற கனவு
உன்னில் உயிரென நான் கலந்த நினைவு
என்னில் கானலென நீ ஒன்றிய பிணைப்பு
மண்ணில் நிலவலாமோ இதுபோன்ற நனவு!

அக்கம்பக்கம் பார்வைக் குத்தல் பொருட்டல்ல
உள்ளின் மனசாட்சியைக் கொல்லுதல் முறையாமோ
மனமே குத்தும் ஒழுக்கத் தவறு வாழ்வென்றாகா
கொடுஞ்செயல் புதைத்திடத் தக்க வெறுங்கதையே!

பொருந்தாக் காதல் கதையே
இல்லறத்தர்மம் விழுங்கும் நகைப்புக்காதலே
கண்ணுள் கலந்திட வரலாமோ இச்சைக்கவிவடிவே
விட்டுவிலகிச் செல் கானல் கனவே!

… நாகினி

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *