வேலா என அழைத்தால்
வினை அகற்றி நின்றிடுவாய்
கந்தா என அழைத்தால்
காலனை நீ ஓட்டிடுவாய்
அரக்க குணம் அழித்துவிட்ட
அரனுடைய அருட் குமரா
அடியவரின் வேண்டு தலை
அய்யா நீ கேட்டிடுவாய்!
குன்றுதோறும் நின்று கொண்டு
குறை கேட்கும் குமரையா
நன்று செய்வார் வாழ்வெல்லாம்
நஷ்டம் வரல் ஏனையா?
கொன்று நின்று குவிக்கின்றார்
குதூகலத்தில் குலவு கின்றார்
குணக் குன்றே குருபரனே
கொதிக்கிறதே உள்ளம் எலாம்!
பிரண வத்தை அறியாத
பிரமனை நீ சிறையிலிட்டாய்
பேர் ஆசை அசுரது
பெருங்கனவை உடைத் தெறிந்தாய்
கலி யுகத்தின் கடவுளென
வந்துதித்த கந்தா நீ
காணாமல் இருப் பதற்குக்
காரணத்தைச் சொல்லி விடு !
ஆணவத்தில் இருப் பவரோ
ஆட்சிதனைச் செய் கின்றார்
அறம் பற்றி எண்ணுதற்கு
அவர் மனமோ மறுக்கிறது
மதம் கொண்டு எல்லோரும்
மற்றவரை வதைக் கின்றார்
மகாதேவன் மைந்தனே நீ
மெளனமதைக் கலைத்து விடு!
ஈராறு முகம் உடையாய்
எங்கள் தமிழ் கடவுளையா
ஊர்தோறும் உன் கோவில்
உச்சமாய் இருக்கு தையா
பேராறாய் உன் கிருபை
பெருக்கெடுத்து வந்து விடின்
வேரோடி நிற்கும் இந்த
விஷமெல்லாம் அகன்று விடும்!
குவலயத்தில் உள்ள மக்கள்
குறையின்றி வாழ வேண்டும்
குணங்கெட்ட மனம் உடையார்
குமரனடி தொழ வேண்டும்
நலம் சிறந்த வாழ்க்கையினை
நாடெல்லாம் பெற வேண்டும்
நாதனது தவப் புதல்வா
நல்கி விடு அடியவர்க்கு!
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.