மார்கழி மணாளன் 15 தேரழுந்தூர்– ஆமருவியப்பன்
க. பாலசுப்பிரமணியன்
தேர்நிழலில் காலழுத்தித் தீயணைத்தான்
தேர்பெற்ற மன்னவனின் தானழித்தான் !
தேவராஜன் கருடனைப் பக்கம் வைத்தான் !
தேடிவரும் நெஞ்சங்களில் தன்னை வைத்தான் !
காவிரிக்குக் கருணை தந்த கார்மேகன்
கரிகாலன் மனம் கவர்ந்த கண்ணனவன்
செங்கமலத் தாயோடு மனம்கொண்டான்
சிங்கமுகன் சினம் தீர்ந்த சிலை கொண்டான் !
முன்னழகு பார்த்தாலோ முத்துப் பந்தல்
பின்னழகு பார்த்தலோ பூந்தோட்டத் தோரணமே !
பூவிழிகளிலே பொங்குகின்ற கருணை வெள்ளம்
பொற்பதம் பார்த்ததுமே போதையிலே சரணம்
பாரிஜாத மலர் வாசம் திருமேனி வீசும் !
பச்சைக்கற்பூரம் உடல் தோய்ந்து ஒளி வீசும் !
கழுத்திருந்து கன்னித்துளசி காதல் பேசும் !
பாரெல்லாம் கண்ணா! உன் பார்வை அருள் வீசும் !
!கண்களிலே அவனிருக்கக் கற்பனைகள் ஏங்கும்
கற்பனையில் அவனிருக்கக் கருத்துக்கள் ஏங்கும்
கருத்தினிலே அவனிருக்கக் காலங்கள் ஏங்கும்
காலமெல்லாம் அவனிருக்கக் கவலைகள் நீங்கும் !
சடையப்ப வள்ளலின் கொடையினிலே
சரித்திரம் படைத்த கவியானான் கம்பனுமே !
கட்டுத் தறியும் அங்கே கனிந்தே கவிபாடக்
காகுந்தன் கதையின் விதை தேரழுந்துரே !!