மார்கழி மணாளன் 20 திருப்புட்குழி – ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்
க. பாலசுப்பிரமணியன்
அயோத்தியில் பிறந்தாலும் அகிலமெல்லாம் அவன் வீடு
அன்னையர் தந்தையுடன் அண்டமெல்லாம் அவன் உறவு
அன்பாலே கட்டுண்டோர் அவனுடனே ஆயிரம் ஆயிரம்
அதிசயமே அவன் வாழ்க்கை அகிலத்தில் நிகரில்லை !
வில்லெடுத்து விதிவழி வந்தான் விதேகன் மண்ணுலகில்
வில்லொடித்தே வீரன் மங்கை கொண்டான் மிதிலையில்
சொல்கொடுத்த தந்தைக்காக தவக்கோலம் கானகத்தில்
தோள் கொடுத்த தம்பியுடன் துவளாத மனத்துடையான் !
மனத்திலே கயிலைநாதனைக் கலையாலே நிறுத்தியவன்
மனத்தாலே மயங்காத மங்கையை மாயத்தில் வீழ்த்தி
மதிகெட்டு வானத்தே வைதேகியைக் கவர்ந்து செல்ல
மனமொடிந்து புள்ளரசன் சடாயு போரிட்டு புவிவீழ்ந்தான் !
தயரதனைப் போல் சடாயுவும் தன் தந்தையென
தர்பணங்கள் செய்து விடுவித்தான் வாழ்வினையே !
தன்னுயிர்போல் மன்னுயிர் போற்றும் தாமோதரன்
மன்னுயிர் அனைத்திற்கும் முன்னின்ற மூத்தவன் !
சங்கோடு சக்கரமும் சடாயுவும் கைகொண்டு
சமதர்மம் காக்கும் சன்னிதியே திருப்புட்குழி!
கல்லான குதிரை கூட காலாட்டி களிப்புறும்
வில்லோனின் திருத்தலமே விஜயராகவபுரி !
பெற்றாலும் வளர்த்தாலும் தாயினைப் போற்றும்
கோகுலமும் கோசலமும் ஒன்றேதான் !
பாசத்தில் பரதனும் அனுமனும் ஒன்றே தான்
பரந்தாமன் அருளாட்சியில் பார்வை ஒன்றேதான் !

