கேட்டாளே ஒரு கேள்வி!
-பா வானதி வேதா. இலங்காதிலகம்
சும்மா இருப்பதல்ல ஓய்வுக் காலம்
சுகமான கனவுகள் நிறைவேற்றும் காலம்
சுதந்திர மனம், ஆரோக்கிய உடல்
சுறுசுறுப்பு அனுபவம் சுயமாய் இயங்குதல்.
உடற் பயிற்சி, உகந்த வெளியுலா,
உணர்வின் மனச்சுளுக்கு எடுக்கப் பல
உற்சாகம் தரும் நூல்கள் வாசிப்பு
உள்ளம் மகிழ உறவுகளின் கூட்டுறவு.
அச்சச்சோ நேரம் போதவில்லையேயெனும்போது
உச்சக் கேள்வியொன்று பக்கம் விழுந்தது
”என்ன வீட்டிலிருந்து சமையல் செய்கிறீர்களா?என்ன உடல் பருத்து விட்டதா?”
விரியும் தமிழும் நானுமொரு பக்கம்
தெரியாதா என் தமிழ் பற்றி இவளுக்கு?!புரியாது சமைக்கப் பிறந்தவள் என்கிறாளே!சிரிப்புத்தான் வந்ததிவள் கேள்வியால் எனக்கு!
ஓய்வூதியம் எடுத்த பின்னும் மனிதன்
ஓய்வதில்லை; ஓடியாடிய உடல் ஓயாது
ஓய்ந்திருத்தல் என்பதும் மனதுக்கும் இல்லை
ஓடை போன்று ஓடுவதே வாழ்வு!
பல வகையாக வாழும் விதம் உண்டு
கலகலப்பான வாழ்க்கை விதம் ஒன்று
நலமற்ற கறாரான வாழ்வு வேறு
விலகுங்கள் என் வழி வேறு!
(வேறு)
குமையும் பெண் மனங்களே!
அமைந்த வாழ்வை அற்புதமாக்குங்கள்!
சமையலே வாழ்வு அல்ல!
சமையல் சிறு பாகமே!