-மலர் சபா

மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி

கதிரவனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு அழுதல்

கதிரவன் இங்ஙனம் மறுமொழி தந்தான்.
அதைக் கேட்டதும்,
சங்குகள் அறுக்கப்பட்டுச் செய்த
வளையல்களைக் கையில் அணிந்த கண்ணகி,
அங்கே கணமும் நில்லாமல்,
தன்னிடமிருந்த ஒற்றைச் சிலம்பைக்   kannagi 1
கையில் ஏந்தி
நகருக்குள் சென்றாள்.

“முறைதவறி நடக்கும் அரசனின்
ஊரில் வசிக்கின்ற
பத்தினிப் பெண்டிரே!
ஒரு செய்தி கேட்பீர்களாக!
என்னிடம் இருக்கும் இச்சிலம்பு
என் கணவன் இங்கு கொண்டுவந்த
சிலம்பினைப் போன்ற வேறு ஒன்று;
அதைக் காண்பீராக!

யாரும் படாத துன்பம் பெற்றேன்;
இந்த மாலை வேளையில் இங்ஙனம்
எவரும் அறிந்திராத
துயரம் நான் அடைய வேண்டியதுதானா?
இதுதான் என் வினைப்பயன் போலும்;

என் கணவன் கள்வன் அல்லன்;
எனது காற்சிலம்பை
விலை கொடுத்து வாங்க இயலாமல்
என் கணவன் கள்வன் எனப்
பழி சுமத்திவிட்டார்கள்.

இது மிகவும் அநியாயமான ஒன்று;
கற்புடைப்பெண்கள் உங்கள்
கண்கள் முன்னே
நான் என் கணவனைக் காண்பேன்;
அங்ஙனம் நான் என் கணவனைக் கண்டால்
அவன் வாயிலிருந்து வரும்
நல்மொழிகள் கேட்பேன்;
இது என் சபதமாகும்;

அவ்வாறு அவன் கூறும்
நல்மொழிகளை நான் கேட்காமல் போனால்,
கொலையாவதற்குச் சமமான
தீவினைகள் செய்தவள் இவள் என்று
என்னை இகழ்ந்து பேசுவீராக!

அப்படிப் பேச
இது உங்களுக்கு
ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.” என்றாள்.

இவ்வாறு பேரிடர் உற்று அழும்
கண்ணகியைக் கண்டு வருந்திய
வளமான மதுரை மக்கள்
உண்மை என்ன என்று அறியாமல் குழம்பினர்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

படத்துக்கு நன்றி: கூகுள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.