அழகென்னும் தெய்வம்

1

-ச.சவகர்லால்

 

mountain

 

 

 

 

 

 

 

 

 

பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்
   -புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்
காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்
   -கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்
சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்
   -திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி   
ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;
   -அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.

காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்  
   -கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.
சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்
   -சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.
காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்
   -கட்டுறுதித் தோளசைவில், அழகைக் கண்டேன்.
மாலைவரும் புள்ளினத்தின் வரிசை தன்னில்
   -மயக்குகிற அழகென்னும் தெய்வம் கண்டேன்.

மலைமீது கொஞ்சுமிளம் பசுமை; அங்கே
   -மலர்மாலை எனவீழும் அருவி, ஓடி
மலையளக்கும் மான்கூட்ட அருமை, ஆளை
   -மயக்குகிற காட்டுமர இசைகள், என்றே
மலையெல்லாம் அழகுகொஞ்சி நிற்ப தால்தான்
   -மனமகிழத் தமிழ்முருகன் மலையைக் கொண்டான்.
மலைகண்டு குடிகொண்டு வாழு மந்த
   -மலைக்கொழுந்தில் அழகென்னும் முழுமை கண்டேன்.

தெய்வத்தைக் காணவெனில் தூய்மை கொஞ்சித்
   -திகழ்கின்ற மனம்வேண்டும்; அதுபோ லத்தான்
தெய்வமெனும் அழகினையே காண வேண்டின்
   -செப்பமுற்ற கவிதைமனம் வேண்டும்; அந்தத்
தெய்வத்தைக் கண்டுணரப் பழகி விட்டால்
   -தெருவெல்லாம் அழகுநடம் மிளிரும்; அந்தத்
தெய்வமனம் கவிதையுளங் கொண்ட வன்நான்
   -தெய்வமெனும் அழகிற்கே அடிமை யானேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அழகென்னும் தெய்வம்

  1. ஆற்றோட்டம் போன்றதோர் அழகிய கவிதையைத் தந்த பொற்கிழிக் கவிஞர் சவர்கர்லால் அவர்களுக்கு நன்றி. 
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *