தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016, மக்கள் திட்டம்
ரவி கல்யாணராமன்
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ பார்க்கும் முன் தயவு செய்து இதை முழுதும் படித்து விடுங்கள்.
வீடியோவில் உள்ள செய்தி ஒரு குறைந்த பட்சத்திட்டம்.யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லும் திட்டம் இது இல்லை. அந்த முடிவை ஒவ்வொருவரும் அவரவரே எடுக்க வேண்டும். அது அவரவர் தனியுரிமை. ஆனால், எப்படி முடிவெடுப்பது என்பதற்கான ஓர் எளிய வழிமுறையை மட்டுமே இந்தச் செய்தியில் நாம் மக்களுக்குச் சொல்கிறோம்.
எல்லாரும் இந்நாட்டு மன்னர். மக்களாட்சி என்ற ஜனநாயகத்தில், குடிமக்களே தலைவர்கள், அவர்கள் தேர்வு செய்து நியமிக்கும் பிரதிநிதிகள் மக்கள் ஊழியர்களே தவிரத் தலைவர்கள் இல்லை. இந்த விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் நமக்கு ஏற்பட வேண்டும். வாக்குகளை வியாபாரம் ஆக்கும் முறையற்ற போக்கைத் தவிர்க்க வேண்டும்.
இந்த எண்ணங்கள் ஈடேற இந்தத் திட்டம் ஓரளவு உதவும் என்ற நம்பிக்கையுடன் இந்த வீடியோ இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இது, பட்டி தொட்டி எல்லாம் பரவி ஒலிக்க வேண்டும். நம்புங்கள். கட்டாயம் மாற்றம் ஏற்படும்.
நாம் எந்தக் கட்சியையும் குறிப்பிடவில்லை, எந்த நபரையும் விமர்சிக்கவில்லை. இது ஒரு பொதுப்படையான செய்தி. இதை நடைமுறைப் படுத்துவது சுலபம். அதற்குத் தேவை, சிறிது நேரத்தை இதற்காகச் செலவு செய்யத் தயாரான இளைஞர்களே: வயதில் அல்லது மனத்தில் இளைஞர்கள்.
இந்த வீடியோ பார்த்த பிறகு இந்தச் செய்தியில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் உடனே இதை எப்படி எப்படியெல்லாம் சமூக வலைத் தளங்களில் பரவச் செய்ய முடியுமோ அப்படி முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்னும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அதை இத்துடன் சேர்க்க வேண்டாம். செய்தி திரிந்து விடக் கூடிய அபாயத்தைத் தவிர்க்கவே இந்த வேண்டுகோள்.
ஐந்து தொகுதிக்கு ஓர் இளைஞர் என்ற விகிதத்தில் 50 இளைஞர்கள் உழைக்க முன்வந்தால் அந்த இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதிக்கும் பத்து டி.வி.டி அனுப்ப முயற்சி மேற்கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் பத்து ஒத்த கருத்துள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அந்த பத்து டி.வி.டி.களை வழங்கித் தொகுதி முழுவதும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். இம்மாதம் 20-ஆம் தேதிக்குள் 3000 டி.வி.டிக்கள் நாம் தயார் செய்து விடுவோம். இம்மாதம் 30ஆம் தேதிக்குள் ஒவ்வொரு தொகுதிக்கும் இந்த டி.வி.டி பிரதிகள் சென்றடைய வேண்டும்.
நீங்கள் தயாரா? 50 இளைஞர்கள் இந்த முகநூல் மூலம் கிடைப்பார்களா? தயார் என்பவர்கள் இந்தத் தளத்தில் அதைத் தெரிவித்தால் போதும். நாங்கள் தொடர்பு கொள்வோம்.
மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள பொதுமனிதர்கள், அதாவது, ஒரு கட்சியை அல்லது தனிநபரை ஆதரிப்பவராக இருந்தாலும், எந்தக் கட்சியிலும் எந்தப் பொறுப்பும் வகிக்காத பொதுமனிதர்கள், இதே செய்தியைப் பொதுமக்களிடையே பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
காலம் மிகக் குறைவு. கவனம் தேவை. விரைந்து செயல்படுவோம். நன்றி.
இந்தியக் குடிமக்களாகிய நாம்
WE THE PEOPLE of India