Author: கே. ரவி

  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016, மக்கள் திட்டம்

    ரவி கல்யாணராமன்

    10931054_1387560831546545_7035523876870675089_n

    இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ பார்க்கும் முன் தயவு செய்து இதை முழுதும் படித்து விடுங்கள்.

    12969234_10207355295418465_738128002_n

    வீடியோவில் உள்ள செய்தி ஒரு குறைந்த பட்சத்திட்டம்.யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லும் திட்டம் இது இல்லை. அந்த முடிவை ஒவ்வொருவரும் அவரவரே எடுக்க வேண்டும். அது அவரவர் தனியுரிமை. ஆனால், எப்படி முடிவெடுப்பது என்பதற்கான ஓர் எளிய வழிமுறையை மட்டுமே இந்தச் செய்தியில் நாம் மக்களுக்குச் சொல்கிறோம்.

    எல்லாரும் இந்நாட்டு மன்னர். மக்களாட்சி என்ற ஜனநாயகத்தில், குடிமக்களே தலைவர்கள், அவர்கள் தேர்வு செய்து நியமிக்கும் பிரதிநிதிகள் மக்கள் ஊழியர்களே தவிரத் தலைவர்கள் இல்லை. இந்த விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் நமக்கு ஏற்பட வேண்டும். வாக்குகளை வியாபாரம் ஆக்கும் முறையற்ற போக்கைத் தவிர்க்க வேண்டும்.

    இந்த எண்ணங்கள் ஈடேற இந்தத் திட்டம் ஓரளவு உதவும் என்ற நம்பிக்கையுடன் இந்த வீடியோ இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இது, பட்டி தொட்டி எல்லாம் பரவி ஒலிக்க வேண்டும். நம்புங்கள். கட்டாயம் மாற்றம் ஏற்படும்.

    நாம் எந்தக் கட்சியையும் குறிப்பிடவில்லை, எந்த நபரையும் விமர்சிக்கவில்லை. இது ஒரு பொதுப்படையான செய்தி. இதை நடைமுறைப் படுத்துவது சுலபம். அதற்குத் தேவை, சிறிது நேரத்தை இதற்காகச் செலவு செய்யத் தயாரான இளைஞர்களே: வயதில் அல்லது மனத்தில் இளைஞர்கள்.

    https://youtu.be/6jT4JCfmfYM

    இந்த வீடியோ பார்த்த பிறகு இந்தச் செய்தியில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் உடனே இதை எப்படி எப்படியெல்லாம் சமூக வலைத் தளங்களில் பரவச் செய்ய முடியுமோ அப்படி முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்னும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அதை இத்துடன் சேர்க்க வேண்டாம். செய்தி திரிந்து விடக் கூடிய அபாயத்தைத் தவிர்க்கவே இந்த வேண்டுகோள்.

    ஐந்து தொகுதிக்கு ஓர் இளைஞர் என்ற விகிதத்தில் 50 இளைஞர்கள் உழைக்க முன்வந்தால் அந்த இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதிக்கும் பத்து டி.வி.டி அனுப்ப முயற்சி மேற்கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் பத்து ஒத்த கருத்துள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அந்த பத்து டி.வி.டி.களை வழங்கித் தொகுதி முழுவதும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். இம்மாதம் 20-ஆம் தேதிக்குள் 3000 டி.வி.டிக்கள் நாம் தயார் செய்து விடுவோம். இம்மாதம் 30ஆம் தேதிக்குள் ஒவ்வொரு தொகுதிக்கும் இந்த டி.வி.டி பிரதிகள் சென்றடைய வேண்டும்.

    நீங்கள் தயாரா? 50 இளைஞர்கள் இந்த முகநூல் மூலம் கிடைப்பார்களா? தயார் என்பவர்கள் இந்தத் தளத்தில் அதைத் தெரிவித்தால் போதும். நாங்கள் தொடர்பு கொள்வோம்.

    மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள பொதுமனிதர்கள், அதாவது, ஒரு கட்சியை அல்லது தனிநபரை ஆதரிப்பவராக இருந்தாலும், எந்தக் கட்சியிலும் எந்தப் பொறுப்பும் வகிக்காத பொதுமனிதர்கள், இதே செய்தியைப் பொதுமக்களிடையே பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    காலம் மிகக் குறைவு. கவனம் தேவை. விரைந்து செயல்படுவோம். நன்றி.

    இந்தியக் குடிமக்களாகிய நாம்
    WE THE PEOPLE of India

    Share
  • 22ஆம் ஆண்டு பாரதி திருவிழா! வருக! வருக!

    4565cca1-d254-4eac-81df-fabbff604962

    63d872ca-b327-4758-8118-0b4c6c69a391

    22ஆம் ஆண்டு பாரதி திருவிழா இம்மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் வழக்கம்போல் திருவல்லிக்கேணி, பாரதி நினைவு இல்லத்தில் நடைபெறுகிறது. அவசியம் நீங்கள் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

    ab3a1159-53f0-4b09-b966-8aa62a34344b

    5b77dac4-4068-45a3-bbaf-702a1b83fda2

    15d6790e-5bcb-4d75-a7c5-e88a924a8438

    b45e7453-f6a0-4995-b047-6f9cd720b94c

    bf3322fd-a7fc-4e2e-ba55-b86bb721c86b

    அன்புடன்
    *வானவில் பண்பாட்டு மையம்
    *சைமா, திருவல்லிக்கேணி

    Share
  • கருத்தரங்கிற்கு வாரீர்!

    கே. ரவி

    அனைவருக்கும் வணக்கம். என் இனிய நண்பர்கள் சிலர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியோடு இணைந்து, என் படைப்புகள் பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளார்கள். டாக்டர் வி.சி.குழந்தைசாமி, திரு.பி.எஸ். ராகவன், முனைவர் ஒளவை நடராஜன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், திரு.இல.கணேசன் போன்ற பெருமக்கள் முன்னின்று நடத்துமாறு இந்தக் கருத்தரங்கை வடிவமைத்துச் செயலூக்கம் தந்துவருவோர் பாலக்காடு டாக்டர் ராஜாராம் அவர்களும், புதுவை டாக்டர் அ.அறிவுநம்பி அவர்களும்.

    பிப்ரவரி மாதம் 21 சனிக்கிழமை அன்று கருத்தரங்கம் சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. 20ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை கருத்தரங்கத்தின் தொடக்கவிழாவைச் சிறப்பாக அமைக்க இருக்கிறார்கள். அழைப்பிதழ் தயாரானதும் முகநூலிலும் இந்த வாட்ஸாப் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.

    கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
    தங்கள் வருகையை 044 24350506 என்ற எண்ணில் பதிவு செய்து கொண்டால் அழைப்பிதழ் அனுப்ப வசதியாக இருக்கும். நன்றி.

    கே.ரவி

    என் படைப்புகள்:

    1. நமக்குத் தொழில் கவிதை
    2. உன்னோடு நான் (கவிதைகள்)
    3. மின்னற்சுவை
    4. சொற்களுக்குள் ஏறிக்கொள்
    5. இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு
    6. Tha verses of wisdom
    7. Justice vs Natural Justice
    8. Law, logic and liberty.
    9. வள்ளுவரின் வாயிலில்
    10. காற்று வாங்கப் போனேன் (சுயசரிதைக் குறிப்புகள்: வல்லமை மின்னிதழில் வெளிவந்த தொடர்)
    11. கவிதைக்குப் பொய்யழகு (இலக்கிய வேல் பத்திரிகையில் வெளிவந்த தொடர்)

    Share
  • A SONG FOR YOU!

    – K. Ravi

    I weave a song for you
    From my dreams joy and anguish
    You take a form and wear it on – or
    Light the lamp and read the song
    As you wish
    From my dreams joy and anguish
    I weave a song for you

    Like a river it flows from me
    Take a step and drench in it
    Or hold a cup and quench y’r thirst
    As you please
    Like a mountain it rises high
    Climb up and reach the summit
    Or descend like a mist
    As you deem fit

    Like a bird it spreads its wings
    Like the wind it gently swings
    Like the moon it shines bright
    Even at midnight
    From my dreams joy and anguish
    I weave a song for you

    I felt a sudden shivering chill
    I melt and flow with the song
    You smile at me
    Writing the song all along
    You are the singer you write myself
    Just holding my finger
    You weave myself in you
    With rain lightening and thunder
    You weave myself in you
    With rain lightening and thunder
    I just wonder
    I weave a song for you

    https://soundcloud.com/advocatekravi/i-weave-a-song-for-you

     

    Share
  • ஜதிபல்லக்கு – அழைப்பு

    aba

    மான்தாங்கிக் கையில் மழுதாங்கி நிற்கும் மஹேஸ்வரனும்
    தேன்தாங்கு செந்தா மரைதாங்கு நாபனும் மாகாளியும்
    வான்தாங்கு தேவரும் வாழ்த்தவே யாவரும் பாரதிசீ
    மான்தாங்கி யாய்ஜதி பல்லக்கை ஏந்த வருவீர்களே
    — கே.ரவி

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 53

    கே. ரவி

    aravi
    கேரளாவில், ஆதி சங்கரர் பிறந்த ஊரான காலடியில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    1985 அல்லது 86 என்று நினக்கிறேன். காலடிக்குச் சென்று அங்கிருந்த பூர்ணா நதியில் நீராடி விட்டுச் சிருங்கேரி சங்கர மடத்தாரால் பராமரிக்கப்படும் மண்டபத்தில், சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சன்னிதிக்கு எதிரில், வாராஹி, வைஷ்ணவி, கெளமாரி, ப்ராஹ்மி, இந்திராணி, சாமுண்டி, மாஹேஸ்வரி என்ற ஏழு சக்தி வடிவங்களும் செதுக்கப்பட்ட ஒரு தூணுக்கு முன்பாக அமர்ந்து கொண்டு த்யானத்தில் ஆழ்ந்திருந்தேன். சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து நான் கண்மலர்ந்தேன். தியான நிலையில் நான் இரண்டு கைகளிலும் சின்முத்திரையோடு உள்ளங்கைகளை மேற்காட்டி அமர்ந்திருந்த போது என் வலது உள்ளங்கையில் ஒரு வண்ணத்துப் பூச்சி, அதாவது, பட்டாம் பூச்சி வந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்த காட்சியை என்னிடம் ஷோபனா விவரித்த போது என்னையறியாமல் எனக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

    மீண்டும் ஒருமுறை சபரிமலை யாத்திரை முடித்து வரும் வழியில் நண்பர்களோடு காலடி சென்றேன். நான் பூர்ணா நதியில் குளிக்க இறங்கிக் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நதியிலேயே பத்மாசனம் இட்டுத் தியான நிலையில் அமர்ந்து விட்டதாகப் பிறகு நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு ஒன்று மட்டும் நினைவுக்கு வந்தது. அப்போது நான் தியானத்தில் இருந்த சிறிது நேரத்துக்குள், துத்த நாகம் போன்ற நீல நிறத்தில் இருந்த ஒரு பெரிய தடாகத்தில் மூழ்கி உள்ளே சென்றதும், அங்கே நீருக்கடியில் ஒரு குகை தெரிந்ததும், குகைக்குள் வரச் சொல்லி ஒரு குரல் என்னை அழைத்ததும், நான் குகைக்குள் நுழைந்ததும், அங்கே ஒரு பீடத்தில் ஒளிமயமாக ஆதி சங்கரர் போல ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்ததும், என்னை வா என்று அழைத்தவரோ, பார்த்ததும் அச்சம் உண்டாக்கும் ரத்தச் சிவப்பான கண்களுடன் தலையிலிருந்து தரையில் புரளும் ஜடாமுடியுடன் வீற்றிருந்ததையும், அவர் சொல்லாமலே எப்படியோ அவர்தாம் மார்க்கண்டேய மஹரிஷி என்று நான் தெரிந்து கொண்டதையும் என் நண்பர்களுக்குச் சொன்னேன்; சென்னை வந்த பிறகு டாக்டர் நித்யானந்தம் அவர்களிடமும் சொன்னேன். அவர் கண்களை மூடிக் கொண்டு “கைலாசத்தில் உள்ள மானசரோவர் ஏரி” என்று மெதுவாகச் சொன்னர்.

    பிறகு, இப்போது நாலைந்து ஆண்டுகளுக்கு முன் நானும் ஷோபனாவும் பத்ரிநாத் சென்றிருந்தோம். பத்ரிநாத் செல்லும் வழியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் உள்ள சங்கரர் ஆசிரமத்திற்குச் சென்றோம். அங்கே ஒரு மரத்தடியில் ஒரு குகை இருந்தது. ஆனால் அது பூட்டியிருந்தது. அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் சொல்லித் திறக்கச் செய்து, உள்ளே சென்று சிறிது நேரம் தியானம் செய்தோம். தியானம் முடிந்ததும், “இந்த இடத்துக்கும் மானசரோவருக்கும் ஏதோ தொடர்புள்ளது போலத் தெரிகிறது” என்று ஷோபனாவிடம் குறிப்பிட்டேன். அதன் காரணம் எனக்கு அப்போது விளங்கவில்லை.

    அங்கிருந்து பத்ரிநாத் சென்று கண்ணபிரானைக் கண்குளிரக் கண்டுவிட்டு, அருகில் இந்தியா, திபெட் எல்லையில் இருந்த கடைசி இந்திய கிராமமான மன்னாவுக்குச் சென்றோம். அது, அலகாநந்தா நதியுடன் சரஸ்வதி நதி கலக்கும் இடம். அதன் மேல் பீமன் கட்டியதாக நம்பப்படும் ஒரு பெரிய கல்பாலம் இருந்தது. அதைக் கடந்து சென்றால் ஸ்வர்க்க ஆரோகணி வருமாம். அதாவது, பாரதப் போர் முடிந்த பிறகு, பாண்டவர்கள் அங்கேதான் ஸ்வர்கத்துக்கு ஏறிச் சென்றார்களாம்! எங்குமே பிரஸ்ஸன்னம் ஆகாமல் நிலத்துக்கு அடியில் ஒளிந்து கொண்டே இருக்கும் சரஸ்வதி நதி அங்கே மட்டும் வெளியில் வந்து காட்சி தருகிறது. கிட்டத்தட்ட பச்சை கலந்த நீல நிறத்தில் அந்த நதி இருந்தது. அங்கேயும் ஒரு குகையிருந்தது. அதன் சுவரில் இருந்து துளித்துளியாக ஈரம் கசிந்து கொண்டிருந்தது, நீல நிறத்தில்! அதுதான் அந்த நதியின் ஊற்றுக்கண் என்பது புரிந்தது. அந்தச் சுவரில் எழுதப்பட்டிருந்த செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது. ‘இங்கே வருகின்ற நீர்த்துளிகள் மானசரோவரில் இருந்து வருகின்றன!’

    என் பழைய கவிதையொன்றை என் மனம் எதிரொலிக்கிறது:

    யார் கொடுத்த ஞாபகத்தை யார் சுமக்க வேண்டுமோ

    எப்படியோ, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு வரலாற்றைக் காலத்தில் முன்னும், பின்னுமாகப் போய், அலைபாய்ந்து, எழுத்தில் படம்பிடித்துத் தந்துவிட்டேன். அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளின் சம்பவங்களை இப்போது சொல்வதைக் காட்டிலும், இன்னும் எனக்கு ஆயுள் மீதம் இருந்தால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அசை போட்டுப் பார்த்துச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதை இரண்டாவது பாகமாக நான் எழுதக் கூடிய வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்.

    இதுவரை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டவை மிகவும் விறுவிறுப்பான சம்பவங்களாக இல்லாவிட்டாலும், மற்ற சுயசரிதைகளைப் போல வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இல்லாவிட்டாலும், இந்தப் பிரபஞ்சத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாகக் கொஞ்சமேனும் அமைந்திருக்கக் கூடுமானால் அதுவே இதை ஓரளவு பயனுடைய முயற்சியாக உயர்த்த வல்லது என்ற மனநிறைவோடு இந்தத் தொடரை, அல்லது இதன் முதல் பாகத்தை, இப்போது நிறைவு செய்கிறேன்.

    தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன், குப்புசாமி வாத்தியார், கிருஷ்ணராமானுஜம் பிள்ளை போன்ற ஆசிரியப் பெருமக்களும், ஜகன்னாதாச்சாரியார், டாக்டர் டி.என்.கணபதி போன்ற பேராசிரியப் பெருந்தகைகளும், சுகி சிவம், சு.ரவி, சசி, சீனி சுந்தரராஜன், வ.வே.சு., ரமணன், சுப்பு போன்ற நண்பர்களும், அமரர் நா.பா., ஒளவை நடராஜன், பாரதி சுராஜ் போன்ற வழிகாட்டிகளும், டாக்டர் நித்யானந்தம் என்ற குருநாதரும், என் சிந்தனையின் போக்குக்குத் தடம் அமைத்துக் கொடுத்த தத்துவ மேதைகளும், இறுதியாக, ஆனால் உறுதியாக, என் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரே தீபமாகச் சுடர்விடும் ஒளிவிளக்காகவும், என் கவிதை யாவும் தனக்கெனக் கேட்கும் பராசக்தியாகவும், என் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஷோபனாவும், இப்படிப்பட்ட சுடர்ப்பொறிகளும், தாரகைகளும் கதாபாத்திரங்களாக வந்து கெளரவப் படுத்திய இந்தக் கவிதை வரலாற்றில் நானும் இடம்பெற்றேன் என்பதே என் பிறவிப் பயன் என்று நான் கருதுகிறேன்.

    எஞ்சியுள்ள நாட்களில், பாதி முடிந்த நிலையில் இருக்கும் பிரும்ம சூத்திரத்துக்கான ஆங்கில விரிவுரையை எப்படியாவது நிறைவு செய்து வெளியிடப் பராசக்தி அருள்செய்வாள் என்று நம்புகிறேன்.

    பொறுமையுடன் என் ஞாபகப் பயணத்தில் என்னோடு வந்த வாசகர்களுக்கும், இந்தப் பயணத்துக்கு வாகனம் அமைத்துத் தந்த வல்லமை இதழின் பொறுப்பாளர்களுக்கும் நன்றி.

    2001-ஆம் ஆண்டு எழுதிய ஒரு கவிதையுடன், “காற்று வாங்கப் போனேன்” முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்:

    அணையாத சுடரேற்றுவேன் – நெஞ்சில்

    அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக்

    கணையாக உருமாற்றுவேன் – இமைக்கும்

    கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில்

    அணையாத சுடரேற்றுவேன்!

    விண்மீன்கள் சிறுதுளிகளாய் – வான

    விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற

    எண்ணற்ற உயிர்க்குலங்கள் – வாழும்

    விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் களிகொள்ள

    அணையாத சுடரேற்றுவேன்!

    பொய்சூழும் நெஞ்சங்களைத் – துளைத்துப்

    போகின்ற ஒளியுலகில் இல்லையே என்றமொழி

    பொய்யாகிப் போய்மறைய – எந்தப்

    பொல்லாங்கும் இல்லாமல் எல்லாரு மேமகிழ

    அணையாத சுடரேற்றுவேன்!

    மாயை விரித்த வலையோ – ஜனன

    மரணத்தி லேசுழலும் புரியாத மர்மமோ

    தீயை உமிழும் சொற்கள் – பட்டுத்

    தீப்பற்றி எரியட்டும் சூழ்ச்சிகள் முறியட்டும்

    அணையாத சுடரேற்றுவேன்!

    சொற்களைத் தோய்தெடுக்கக் – கோடி

    சூரியப் பிழம்பொன்று தேடிச் சென்றேன் – அன்று

    கற்பிலே கனல்விளைத்த – தெய்வக்

    கண்ணகித் தாயிடம் வேண்டி நின்றேன் – இருட்

    பட்டினிப் பாழ்க்குகையில் – கிடந்து

    பதறுமோர் ஏழையின் கண்ணீர்த் துளியில் – ஒரு

    சிட்டிகை எடுத்து வைத்தாள் – அதில்

    சீறிப் புறப்படும் தீயில்சொல் தோய்த்தெடுத்(து)

    அணையாத சுடரேற்றுவேன் – இந்த

    அகிலமெல்லாம் உண்மை ஒளிகூட்டுவேன்!

    அனைவர்க்கும் ஒருநீதியே – என்ற

    அருளாட்சி மலரநான் அறைகூவியே

    அணையாத சுடரேற்றுவேன்!

    நன்றி.

    Share
  • உன் கன்னங்களில்!

     

    கே.ரவி

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%99%E0%AE%95/[/mixcloud]

     

    நங்கையுன் கன்னங்களில்South Indian Beautiful Girls Wallpaper7

    பொன்னந்தி வண்ணங்களில்

    நாணவில்லை வரைந்த பின்னே

    வானவில்லைக் காணவில்லையடி ஹோ!

    தங்கத் தடாகத்தில் தாமரைபோல் என்

    நெஞ்சத் தடாகத்தில் அழகு முகம்

    பேரொளியாக மலர்ந்த பின்னே

    வேறொளி இங்கே தேவையில்லையடி ஹோ!

    (நங்கை உன் கன்னங்களில்)

     

     

    கங்கையைப் போலுன் அங்கமெலாம் ஒரு

    காதல் நதிபுரள – என்

    கண்ணசைவில் ஒரு மின்விசையாய் உன்

    சின்ன இடைதுவள – உன்

    தோள்களிலே ஒரு தூளியமைத்துத்

    தூங்கட்டுமா அழகே – உன்

    வேல்விழிகள் என் மேல்படும் போதின்ப

    வேதனைதான் உயிரே

    (நங்கை உன் கன்னங்களில்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் (52)

    கே. ரவி

    என்னப்பா ‘ஸிந்தடிக் விஷன்’ என்றெல்லாம் சொல்லி மிரட்டுகிறாய்?

    பொறு தம்பி, இன்னும் பெரிய, பெரிய வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் சுலபமாகப் புரிந்து கொள்ளும்படிச் சொல்கிறேன். ஒருங்கிணைந்த பார்வை என்பதைப் புரிந்து கொள்ள நாம் வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. நம் புலப்பாட்டு இயக்கமே போதும்.

    உளவியல் துறையில் பயிலும் மாணவர்கள் புலன் நுகர்ச்சி எப்படி உண்டாகிறது என்பது பற்றிப் பல்வேறு கொள்கைகளைப் படிப்பார்கள். புலனுகர்ச்சிக் கொள்கைத் திரட்டு, ஆங்கிலத்தில், “தியரீஸ் ஆஃப் பெர்ஸெப்ஷன்” (Theories of Perception) என்று அழைக்கப் படுகிறது.

    நமக்கு வெளியுலகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் எல்லாமே ஐந்து புலன்கள் மூலமாகத்தான் கிடைக்கின்றன என்று பொதுவாக நம்பப் படுகிறது. திருவள்ளுவர் மிக அழகாக, அதுவும் காமத்துப் பாலில் உள்ள ஒரு குறட்பாவில், ஐந்து புலன்களையும் ஒரே வரியில் குறிப்பிட்டு விடுகிறார்:

    கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்

    ஒண்டொடி கண்ணே உள

    ஐந்து விதமான புலப்பாடுகள் ஏற்பட உதவும் சாதனங்களே கண், காது, நாக்கு, மூக்கு, சருமம் எனப்படும் தோல் ஆகிய ஐந்து பொறிகள். பொதுவாகப் புலநுகர்ச்சிக் கொள்கை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல், காட்சிப் புலன் என்பது பற்றி மட்டும் குறிப்பாக இங்கே நோக்குவோம்.

    ‘காண்பது’ என்பதே காட்சிப் புலன். இந்தப் புலப்பாட்டை உண்டாக்கும் சாதனமே ‘கண்’ என்ற பொறி.

    காட்சிப் புலப்பாடு எப்படி உண்டாகிறது? வெளியில் உள்ள ஒரு பொருள் மீது (அது நம் உடலாகவோ அதன் ஒரு பகுதியாகவோ கூட இருக்கலாம்), ஒளிக்கற்றைகள் விழுந்ததும், அந்தப் பொருளால் தடுக்கப்பட்டு மீளும் ஒளிக்கற்றைகள் நம் விழி வழியாக நுழைந்து, விழிக்குள் உள்ள ‘ரெட்டினா’ என்ற விழித்திரையில் விழுந்து, தம்மைத் தடுத்தனுப்பிய பொருளின் பிரதிபிம்பத்தை அந்தத் திரையில் ஏற்படுத்துகின்றனவாம்; அந்தப் பிரதிபிம்பத்தை இன்ன பொருளின் பிம்பம் என்று அறிவு நமக்கு அறிவுறுத்துமாம். இப்படித்தான் காட்சிப் புலப்பாட்டில் நாம் பொருள்களைப் பார்க்கிறோம் எந்று அறிவியல் விளக்குகிறது!

    எல்லாம் சரி, ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறி விட்டோமே! நாம் ஒற்றைக் கண்ணால் பார்ப்பதில்லையே! இரண்டு கண்களால் காண்கிறோம். ஆங்கிலத்தில் இதை பைனாகுலர் விஷன் (Binocular Vision) என்கிறார்கள். நாம் காணும் ஒவ்வொரு காட்சியும் இரண்டு விழித்திரைகளில் பதிவாகின்றன. ஆனால் ஒரு காட்சியைத்தானே பார்க்கிறோம்! நாம் ஒரு மாம்பழத்தைப் பார்க்கிறோம் என்றால், நம் இரண்டு விழிகளுக்கும் உள்ளே உள்ள ரெட்டினா என்ற இரண்டு திரைகளில் அந்த மாம்பழத்தின் இரண்டு பிரதிபிம்பங்கள் பதிவாகி, அந்த இரண்டு பிம்பங்களை நம் அறிவாகிய சாதனம் ஒரே மாம்பழமாக மீண்டும் ஒருமைப் படுத்தி நமக்குக் காட்சிப் படுத்துகிறது. வள்ளலார் கண்ணாடியில் முருகப் பெருமானைப் பல அம்சங்களும் ஒருங்கிணைந்த தணிகாசலமாகக் கண்ட ‘சிந்தடிக் விஷன்’, அதாவது, ஒருங்கிணைக்கப்பட்ட பார்வை பற்றி முன் பகுதியில் சொன்னதை நினைவு கூர வேண்டும். இரண்டு விழித்திரைகளில் தோன்றும் பிம்பங்களை ஒருங்கிணைத்து, ஒரே காட்சியாக்கி அதற்கு இடம், காலம் ஆகிய முத்திரைகள் குத்தி அறிவு நமக்கு அதை விளங்கத் தருகிறது. அப்படியென்றால், இடமும், காலமும் புறவுலகில் உள்ள பொருட்களைப் போல வேறு பொருட்களா, இல்லை அவை இரண்டுமே அகச்சாதனங்களா? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் ஒத்தி வைப்போம். இப்பொழுது விவாதம் இடம், காலம் பற்றியில்லை. அது, இரண்டு கண்களில் உள்ள திரைகளில் விழும் பிம்பங்களை ஒருமைப்படுத்தும் அகச்சாதனம் பற்றியது.

    எவ்வளவு அழகாக, எளிமையாக நம் அருமைக் கவிஞர் கண்ணதாசன் பாடிவிட்டார்:

    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

    இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா

    சாதாரணத் திரைப்படப் பாடல்தானே என்று எதையும் நினைத்துவிடக் கூடாது தம்பி. பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே கவிஞனுடையது. அவனை ஆட்கொண்டு பாடுவதோ ஆகாச சக்தி! அது வேறு கதை.

    சாதாரண விஷயங்களுக்குள் இருக்கும் அசாதாரணங்களைக் காண்பதே தரிசனம் எனப்படுகிறது.

    மீண்டும் இம்மானுவெல் கன்ட் என்ற தத்துவ ஞானியைக் கூப்பிட வேண்டும். அவன் கேட்கிறான், ஐந்து புலன்கள் வழியாகத்தான் நீ எல்லா வெளி விவகாரங்களையும் நுகர்கிறாயா? நீ பார்க்கும் மாம்பழத்தின் மஞ்சள் நிறம், அதன் உருண்டை வடிவம், அதன் மணம், சுவை, மென்மை இவையெல்லாம் உன் ஐந்து புலப்பாட்டுச் சாதனங்கள் மூலமாகத்தான் வருகின்றன. ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அந்த மாம்பழம் ஓரிடத்தில் உள்ளதாக, ஒரு காலக்கட்டத்தில் உள்ளதாக, அதாவது இடம், காலம் என்ற இரண்டு குறியீடுகளோடுதானே உனக்குப் புலப்படுகிறது? எந்த இடத்திலுமே இல்லாத, எந்தக் காலப் பரிமாணத்துக்கும் உட்படாத எதையும் நீ புலனுகர்ச்சி செய்வதில்லையே. அந்த இடத்தையும், காலத்தையும் நீ எந்தப் பொறி மூலம், எந்தப் புலனாக அறிகிறாய்? இதுதான் அவன் கேட்ட கேள்வியின் சாரம்.

    இன்னும் சற்று வேறு விதமாக நினைத்துப் பார்க்கலாம். நம் ஐந்து பொறிகளின் மூலம் ஐந்து வகைப்பட்ட புலப்பாடுகளாக நம் அகத்துக்குள் நுழைய வெளியுலகப் பொருட்களும், காட்சிகளும் முண்டியடித்துக் கொண்டு வருகின்றன. அவற்றை நம் அறிவு புரிந்து கொள்ளும் முன்பு, அவை இன்னின்ன பொருட்கள், காட்சிகள் என்று நம் அறிவு வகைதொகை செய்து உணர்ந்து கொள்ளும் முன்பு, ஒவ்வொரு பொருள், அல்லது காட்சியின் மீதும், அது புலன் நுகர்வு செய்யப்பட்ட இடம், காலம் என்ற இரண்டு ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளைக் குத்திப் பிறகுதான் அறிவின் சேமிப்புக் கிடங்குக்குள் அனுமதிக்கிறது. இந்த இடமும், காலமும் எந்தப் பொறி வழியாகவும் நுகரப் படுவதில்லை. இடமும், காலமும் பொறிகளின் மூலம் நுகரப்படும் எந்தப் புலப்பாடும் இல்லை. அப்படியென்றால் அவை என்ன? இடம், காலம் ஆகிய இரண்டு முத்திரைச் சாதனங்கள் அறிவின் கட்டுமானத்திலேயே உள்ளடங்கியவை. அந்தச் சாதனங்களோடுதான் அறிவே உருவாகிறது. இடம் என்பதையோ, காலம் என்பதையோ நாம் ஒரு நிறம், வடிவம், சுவை, வாசனை இப்படி ஏதாவது ஒரு புலன் நுகர்ச்சியாக அறிவதே இல்லையே! இவ்வாறு, புறத்தில் இருந்து, புலன் வழியாகப் பெறாத சில உள்ளீடுகள் அறிவின் கட்டுமானத்திலேயே உள்ளன, எனவே, புலன் நுகர்ச்சியைச் சாராமலேயே, பொறிகளின் வழியே பெறாத உள்ளீடுகள் அறிவின் அகத்தே உண்டு என்று சுட்டிக் காட்டிச் சூனிய வாதத்தை இம்மானுவெல் கன்ட் எதிர்கொண்டான்.

    இவ்வளவு கனமான, கடினமான ஒரு தத்துவப் பிரச்சினையை இங்கே நான் குறிப்பிடக் காரணம் உண்டு. அதை விளக்குவதற்கு அந்த ஜெர்மானிய தத்துவ மேதை பயன்படுத்திய இரண்டு கலைச் சொற்களை இங்கே பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும். அவை ஆங்கிலத்தில், “ஆ ப்ரையாரி” (a priori) என்றும், “ஆ பாஸ்டீரியோரி” (a posteriori) என்றும் குறிக்கப் படுகின்றன. முதலில், இந்தக் கலைச்சொற்கள் எந்தக் கருத்துச் சூழலில், என்ன பொருளில், எதை விளக்கப் பயன்பட்டன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ‘நேற்று காலை 7 மணிக்கு நான் மக்கள் தொலைக்காட்சியில் பேசினேன்’ என்று ஒருவர் சொன்னதும் அதை இன்னொருவர் நம்ப மறுத்தால், அந்தத் தொலைக்காட்சியின் பதிவுகளைப் பார்த்து அக்கூற்று மெய்யா, பொய்யா என்பதை அறிந்து கொள்ள முடியும். நயாகரா நீர்வீழ்ச்சி கானடா, அமெரிக்க எல்லையில் உள்ளது என்ற கூற்றை யாரேனும் சந்தேகப் பட்டால், அதை நேரில் கண்டு தெளிய முடியும். ஐந்து புலன்களில் ஏதேனும் ஒன்றின் அல்லது சிலவற்றின் மூலமாக மட்டுமே நிறுவக் கூடிய கூற்றுகளை ‘ஆ பாஸ்டீரியோரி கூற்றுகள்’ என்றும், அப்படியன்றி, எந்தப் புலச்சான்றும் தேவைப்படாமலேயே ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்றுகளை ‘ஆ ப்ரையாரி கூற்றுகள்’ என்றும் கன்ட் குறிப்பிட்டான். ஒரு பிரும்மச்சாரி திருமணம் செய்து கொள்ளாதவன் என்பதற்குப் புலச்சான்று எதுவும் தேவை இல்லை. காரணம், திருமணம் செய்து கொண்டிருந்தால் அவனை பிரும்மச்சாரி என்று சொல்ல முடியாதே. அதே போல், ஒருவன் இறந்து விட்டான் என்றால் அவன் இதயத்துடிப்பு நின்றிருக்கும் என்பதற்கு எந்தப் புலச்சான்றும் தேவையில்லை. இதயத் துடிப்பு நின்றால்தான் ஒருவன் இறந்து விட்டதாகச் சொல்ல முடியும். இதயத் துடிப்போடு, கிட்டத்தட்ட இறந்து விட்ட நிலையில் இருப்பதை மூளைச்சாவு (Brain Death) என்று குறிப்பிடும் வழக்கம் உண்டே தவிர அது மரணம் ஆகாது.

    இன்னொரு உதாரணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சென்டி மீட்டர் விட்டம் உள்ள ஓட்டை போட்ட ஒரு தட்டில் நிறைய நாணயங்களைக் கொட்டினால் அந்த ஓட்டை வழியாகக் கீழே விழுந்துவிடும் நாணயங்களைப் பற்றி ஒரு செய்தி நிச்சயம் சொல்லி விடலாம். கீழே விழுந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான விட்டம் உள்ளவையாகத்தான் இருக்க முடியும். இதை அளந்து, புலப்பாட்டுக்கு உட்படுத்திப் பிறகுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. புலப்பாடே தேவையில்லாமல் இந்தச் செய்தியை நிறுவ முடிவதற்குக் காரணம், தட்டின் கட்டுமானம், அதில் ஒரு சென்டி மீட்டர் விட்டமுள்ள ஓட்டை இருப்பது நமக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பதுதான்.

    இவையெல்லாம் புலச்சான்று தேவைப்படாமலேயே நாம் ஒப்புக் கொள்ளும் ‘ஆ ப்ரையாரி’ கூற்றுகள். இடமும், காலமும் புலச்சார்பு இல்லாத ‘ஆ ப்ரையாரி’ கருத்தீடுகள் என்பதுதான் கன்டின் வாதம். இவ்வளவு சிரமமான, தர்க்க ரீதியான பாடத்தை எங்களுக்கு நடத்தி விட்டு, எங்கள் தத்துவப் பேராசான் முனைவர் டி.என்.கணபதி வகுப்பில் சொன்னதை நான் மறக்கவே முடியாது. வகுப்பில் அவர் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சொன்னது இதுதான்:

    ‘ஆ ப்ரையாரி’ என்றால் என்னவென்று புரிய வேண்டுமா. ஒளவையாரிடம் கேளுங்கள். “அன்னையும் பிதாவும் முன்னறிatr தெய்வம்” அதாவது, ஆங்கிலத்தில் சொன்னால், Mother and Father are a priori gods. எந்தப் புலன்விசாரணையும் இல்லாமல் நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தெய்வம் அன்னையும் பிதாவும். அவர்களே முன்னறி தெய்வம். அதாவது, புலன் விசாரணை மேற்கொள்ளும் முன்பே, நாம் முந்தி அறிந்து கொள்ளும், முன்னதாக அறிந்து கொள்ளும் தெய்வம்; a priori gods; முன்னறி தெய்வம்.

    அடாடா! பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மன் மொழியில் இம்மானுவெல் கன்டும், இருபதாம் நூற்றாண்டில் அவனுடைய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நார்மென் கெம்ப் ஸ்மித்தும் சிரமப்பட்டுப் பக்கம் பக்கமாக விளக்க முற்பட்டதை இரண்டாயிரம் அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் ஒளவைப் பாட்டி எவ்வளவு அநாயசமாக, ஒரு முன்னறிவிப்பாகச் சொல்லிவிட்டார் என்பதை என் பேராசான் சொல்லச் சொல்ல மலைத்துப் போனேன்.

    இதுதான் மறைமொழி என்பது. இங்கே திருவள்ளுவர் வாக்கை நினைவு படுத்திக் கொள்வோம்:

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

    மறைமொழி காட்டி விடும்

    மிகச் சுருக்கமாகச் சொல்லப் படும் மறைமொழி, அறிஞர் பெருமக்கள் நிறையச் சொல்லி அறிவுறுத்தும் உண்மைகளை எல்லாம் எளிதில் காட்டி விடும். இப்படித்தான் இந்தக் குறள் பொருள்படும் என்று நான் சொல்லவில்லை. இப்படியும் பொருள்படலாம். நிறைவாழ்வு வாழ்ந்து நீத்தாரின், அதாவது, வாழ்வாங்கு வாழ்ந்து உடல்நீத்த அருளாளர்களின் பெருமையை மறைமொழி காட்டிவிடும் என்றும் பொருள் கொள்ளலாம். திருக்குறளே மறைநூல் ஆயிற்றே!

    avvaiyarசித்தர் இலக்கியங்களில் தோய்ந்து, போகர் பற்றியும், திருமூலர் பற்றியும், சிவவாக்கியர் பற்றியும் அற்புதமான பலநூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி அரும்பணியாற்றிக் கொண்டிருக்கும் 80 வயது இளைஞர் கணபதி என் தத்துவப் பேராசான் என்பதை நான் பெருமையாகக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? அந்தப் பெருமையை, அவர் பாடம் நடத்தும் போது சுட்டிக் காட்டிய ஒளவையாரின் மறைமொழியே காட்டிவிடும். சரிதானே!

    இந்த இடத்திலே ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். அன்னையும் தந்தையும் நமக்கு முன்னறி தெய்வங்கள், அதாவது நாம் எந்த விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லாமல் முந்தி அறியும் தெய்வங்கள். இது எவ்வளவு உண்மையோ, அதே போல, நம் ஒவ்வொருவரையும் தக்க தருணத்தில் ஏதேனும் ஒரு குருவின் வடிவில் பரம்பொருளே வந்து ஆட்கொண்டு வழிசெலுத்துவதால், குருவே நம்மை நமக்கு முன்பாகவே அறிந்த தெய்வம் என்பது மறுக்க முடியாத உண்மை. அன்னையும், தந்தையும் நாம் முன்னறிந்து கொள்ளும் தெய்வங்கள். குருவோ நம்மை முன்னறிந்து கொள்ளும் தெய்வம்.

    ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த என் நண்பர் அமரர் சிவகுமார் எழுதிய ஒரு பாடல் கனமாக நெஞ்சில் வந்து அமர்கிறது :

    எங்கிருந்தாலும் என்னை அறிபவன் ஒருவன்

    எண்ணத்தினால் வளர்ப்பான் என்குல இறைவன்

    சங்கல்பம் ஓய்ந்துவிடச் சரண்புகுந் திருந்தாலும்

    சஞ்சித சாகசத்தால் புறம்புறம் திரிந்தாலும்

    தன்கையில் பிள்ளையெனத் தாங்கும் அவன்பரிவு

    தடம் மறந்தாலுமங்கே தேடிவரும் உறவு

    என்னப்பா, காட்சிப் புலன் என்று தொடங்கி, தரிசனம் என்று பேசிவிட்டுக் கடைசியில் குருவிடம் அடைக்கலம் கொண்டுவிட்டாய் என்ற கேள்வி ஒலிக்கிறது. சித்தன் போக்கு சிவன் போக்கு!

    என் குருநாதர், டாக்டரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்: சீடன் குருவைத் தேட வேண்டுமா, குரு சீடனைத் தேடி வருவாரா?

    அவர் சொன்ன பதில்: யார் தன் குரு என்று தேர்ந்தெடுக்கும் அறிவு சீடனிடம் இருக்கக் கூடுமோ? அந்த அறிவு அவனுக்கு இருந்து விட்டால் அவனுக்குப் பாடமே தேவையில்லையே. குருதான் சீடனைத் தக்க தருணத்தில் அடையாளம் கண்டு வரவேண்டும்.

    நான் மேலும் கேட்டேன்: இராமபிரானுக்கு வசிஷ்ட முனிவரும், அகத்திய முனிவரும் குருநாதர்களாக உபதேசம் செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களைக் காட்டிலும், பரம்பொருளாகிய இராமபிரான் அறிவில் குறைந்தவனா?

    டாக்டர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அப்போது நாங்கள் இருவரும், சென்னை சென்ட்ரல் ரயில்நிலயம் அருகில் இருந்த ‘த செளத் இண்டியா அத்லெடிக் அஸோஸியேஷன்’ (SIAA) என்ற சங்கத்தின் வளாகத்தில் ஓர் அறையில் தனியாக அமர்ந்திருந்தோம். 1986-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். சிறிது நேர மெளனத்துக்குப் பின் அவர் கண் திறந்தார். அப்பப்பா, அதில் தெரிந்த ஒரு கோபச் சிவப்பை நான் மறக்கவே முடியாது. பயந்து விட்டேன்.

    அவர் பேசினார்: பெரியவன், சிறியவன் என்றெல்லாம் பேசக் கூடாது. தக்க தருணத்தில் பிரசவம் பார்த்துக் குழந்தையை வெளியே கொண்டுவரும் மிட் வைஃப் மாதிரி, ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் இருக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரத் தக்க தருணத்தில் குருநாதன் வருவான். அது கடவுளின் ஆக்ஞை. கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் அவருக்குள் இருக்கும் மகத்துவம் வெளிப்பட ஒரு குருநாதன் கண்டிப்பாகத் தேவை.

    நான் மெளனமானேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அவர் என்னைப் பாடச் சொன்னார். மனத்தில் இருந்து பொங்கி வந்த சொற்களைச் சிந்து பைரவி ராகத்தில் பாடினேன்:

    நினைத்தேனா இங்கு வருவேன் என்று

    ஜென்மங்கள் ஆயிரம் எடுப்பேன் என்று

    நினைத்தேனா இங்கு வருவேன் என்று

    … … ..

    … … …

    (தொடரும்)

    Share
  • அணையாத சுடரேற்றுவேன்!

    -கே. ரவி

    அணையாத சுடரேற்றுவேன் – நெஞ்சில்
    அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக்
    கணையாக உருமாற்றுவேன் – இமைக்கும்
    கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில்
    அணையாத சுடரேற்றுவேன்!

    விண்மீன்கள் சிறுதுளிகளாய் – வான                             flame-symbol
    விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற
    எண்ணற்ற உயிர்க்குலங்கள் – வாழும்
    விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் களிகொள்ள
    அணையாத சுடரேற்றுவேன்!

    பொய்சூழும் நெஞ்சங்களைத் – துளைத்துப்
    போகின்ற ஒளியுலகில் இல்லையே என்றமொழி
    பொய்யாகிப் போய்மறைய – எந்தப்
    பொல்லாங்கும் இல்லாமல் எல்லாரு மேமகிழ
    அணையாத சுடரேற்றுவேன்!

    மாயை விரித்த வலையோ – ஜனன
    மரணத்தி லேசுழலும் புரியாத மர்மமோ
    தீயை உமிழும் சொற்கள் – பட்டுத்
    தீப்பற்றி எரியட்டும் சூழ்ச்சிகள் முறியட்டும்
    அணையாத சுடரேற்றுவேன்!

    சொற்களைத் தோய்தெடுக்கக் – கோடி
    சூரியப் பிழம்பொன்று தேடிச் சென்றேன் – அன்று
    கற்பிலே கனல்விளைத்த – தெய்வக்
    கண்ணகித் தாயிடம் வேண்டி நின்றேன் – இருட்
    பட்டினிப் பாழ்க்குகையில் – கிடந்து
    பதறுமோர் ஏழையின் கண்ணீர்த் துளியிலொரு
    சிட்டிகை எடுத்து வைத்தாள் – அதில்
    சீறிப் புறப்படும் தீயில்சொல் தோய்த்தெடுத்(து)
    அணையாத சுடரேற்றுவேன் – இந்த
    அகிலமெல்லாம் உண்மை ஒளிகூட்டுவேன்!
    அனைவர்க்கும் ஒருநீதியே – என்ற
    அருளாட்சி மலரநான் அறைகூவியே
    அணையாத சுடரேற்றுவேன்!

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 51

    — கே.ரவி.

    கானல் நீரோ, கற்பகச் சோலையோ இந்தத் தொடரின் கருப்பொருள் இல்லை. இதன் கருப்பொருள் கவிதை. அடாடா! பெரிய தவறு. கவிதை இதன் கருப்பொருள் இல்லை; கதாநாயகி!

    தானே வெடித்துச் சிதறிய ஒற்றைப் புள்ளியும் அவள்தான். அதிலிருந்து பொலபொலவென்று பிரிந்து பரவும், பரவிக் கொண்டே இருக்கும் பிரபஞ்ச சக்தியும் அவள்தான். “ஊடலும் கூடலும் கோவலர்க் களித்து” என்று இளங்கோ சொன்னது போல் ஊடலும், கூடலும் பாவலர்க்களிக்கும் மாதவிப் பொன்மயிலாளள் அவள்தான். கூடல் மாநகரையே தீக்கிரையாக்கிய கண்ணகியைப் போல், மனக்காட்டை எரிக்கும் அக்கினிக் குஞ்சும் அவள்தான்.
    அவளை ஆராதிக்கவே இந்தத் தொடர்.

    ‘அதெல்லாம் சரி, கவிதை எழுதுவதில் என் பங்கு என்ன என்று தெளிவாகச் சொல்லுவே’ என்று எரிச்சலுடன் கேட்கிறான் புத்தி சிகாமணி.

    சொல்கிறேன். எழுதும் போது அடங்கியிருக்கும் நீ, எழுதி முடித்தபின் போடும் ஆட்டம் இருக்கிறதே அது பேயாட்டம் அப்பா! கவிஞன், அவன் மனம் போன போக்கில் ஏதேதோ எழுதிவிட, அதை வைத்துக் கொண்டு நீ செய்யும் வியாக்கியானம் இருக்கிறதே, அது தலைசுற்ற வைப்பது!

    சிகாமணி கேட்கிறான்: ‘ஏம்பா, நீ கூட போன பகுதியில் கானல், கோணல் என்று என்னென்ன வியாக்கியானம் செய்தாய், இப்போது என்னைக் குறை சொல்கிறாயே!’

    நானா செய்தேன், இல்லை. அது, கவிதை தானே தனக்குச் செய்து கொள்ளும் அலங்காரம். எந்த அனுபவக் களத்தில் அது ஊற்றெடுத்து வந்ததோ, அதன் ஆபரணங்களை அது அணிந்து கொண்டுதான் வரும். எழுதும் கவிஞனுக்குப் புலப்படாத அந்த நுட்பங்கள் படிக்கும் ரசிகனுக்குப் புலப்படத்தான் செய்யும்.

    ‘நானும் அதைத்தானே செய்கிறேன்’ என்று சீறுகிறான் சிகாமணி.

    இல்லை, ரசிகனின் பார்வைக்கு அணிகள் புலப்படலாம். ஆனால், ரசிகனே அணிகள் செய்து அவளுக்கு மாட்டிவிடக் கூடாது. புரிகிறதா?

    என்ன புரிந்ததோ போ என்று சிகாமணி அலுத்துக் கொள்கிறான்.

    vairamuthuஎப்படி ஒரு கவிதை தானே அணிகள் அணிந்து வருகிறது என்பதற்குத் தற்கால எடுத்துக் காட்டு ஒன்று சொல்கிறேன். கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் சர்ச்சைக்கு உள்ளானது. தோழன் என்ற தமிழ்ச்சொல் இருக்க அவர் ஏன் சினேகிதனே என்று எழுதினார் என்ற கேள்வி ஒரு மேடையில் எழுந்த போது, நான் பதில் சொன்னேன்: அந்தப் பாடலை முதலில் சரியாகப் படிக்க வேண்டும். அதில் “சினேகிதனே” என்று அவர் எழுதவில்லை. “ஸ்னேகிதனே” என்றுதான் எழுதியிருக்கிறார்.

    “ஸ்னேகிதனே, ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே”

    இதுதான் அந்தப் பாட்டின் முதல் வரி. இதைத் ‘தோழனே ரகசியத் தோழனே’ என்று பாடிப் பாருங்கள். ஜீவனே இருக்காது. ‘ஸ்’ என்ற உச்சரிப்புத்தான் இந்தக் கவிதையின் உயிர்நாடி. ரகசியத்தின் குறியீடு ‘உஸ்’ தானே! ரகசியத் தோழமையை ஒலிக்குறிப்பாலேயே உணர்த்தும் உச்சரிப்பு அது. ரகசியமாகக் காதுக்குள் யாரோ பாடுவது போன்ற அனுபவத்தைத் தரவல்ல உச்சரிப்பு அது. எப்படி அந்தக் கவிதை தன் அனுபவக் களத்தில் இருந்தே தன் அணிகலனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டது பார்த்தாயா, சிகாமணி, உன் உதவி இல்லாமலேயே!

    இன்னொரு கவிதை, சற்றே பழைய கவிதை:

    murugaசீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
    தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
    கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
    கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே

    என்னய்யா இது வள்ளலாருக்குத் தமிழ் இலக்கணம் தெரியாதா என்ன? ஆறு வதனங்கள், பன்னிரு தோள்கள், இரண்டு தாள்கள், ஒரு வேல், மயில்வாகனம், கோழிக்கொடி, தணிகாசலம், ஆக மொத்தம் 24 விஷயங்களைச் சொல்லிவிட்டு, இவ்வளவும் தம் ‘கண்ணுற்றது’ என்று ஒருமையில் சொல்லி விட்டாரே!
    vallalpic1இந்தப் பாடலின் அனுபவக் களம் என்ன தெரியுமா? கண்ணாடியில் இராமலிங்கர் தம்மைப் பார்த்த போது, அதிலே மேற்சொன்னவாறு முருகப் பெருமான் காட்சி தந்தார். அப்போது வந்த பாடல் இது. மேலே சொன்ன 24 விஷயங்களும் தனித்தனியாகவா அவருக்குப் புலப்பட்டன? இல்லை. மேற்சொன்ன அனைத்துமே வடிவான ஒரே முருகப் பெருமான் அவருக்குக் காட்சியானான். இதை ஒருமையில் சொன்னது எவ்வளவு பொருத்தம்! இதை ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ‘ஸிந்தடிக் யூனிட்டி’ (Synthetic Unity) என்று சொல்ல வேண்டும். அதாவது, ஒன்றிய நிலை அல்லது ஒருமை நிலை.

    நான் ஏதோ கதையளப்பதாகக் கருத வேண்டாம் தம்பி! ‘இம்மானுவெல் கன்ட்’ என்ற ஜெர்மானிய தத்துவ மேதையைப் பற்றி முன்பே சொன்னேன் இல்லையா? அவன் சொன்னது இதுதான். நாம் ஓர் ஆப்பிள் பழத்தைப் பார்க்கும் போது, சிவப்பு நிறம், மென்மையான தோல், குளுமையான சுவை, உருண்டையான வடிவம் என்றெல்லாம் அதன் பண்புகளைத் தனித்தனியாக நுகர்ந்து, அவற்றைப் பிறகு ஒன்றிணைத்து ஆப்பிள் என்ற ஒரு பொருளை அறிவில் உருவகப் படுத்திக் கொள்கிறோமா, இல்லை, ஆப்பிள் என்ற ஒரு பழத்தைப் புலன்களால் பலவாறு நுகர்ந்து, அதன் பண்புகள் இன்னின்னவை என்று பகுத்துத் தெளிகிறோமா என்பதுதான் அவன் கேட்ட கேள்வி.

    பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில் ஒரு விதமான சூனிய வாதம் எழுந்து, பரவி, ஆதிக்கம் செய்தது. அது என்ன வாதம்? நாம் புலன்களால் நுகரும் பண்புகள் தவிர்த்துப் பொருண்மை என ஒன்றுமே இல்லை, அதாவது, சிவப்பு, மென்மை, குளுமை, உருண்டை ஆகிய பண்புகளைத் தவிர ஆப்பிள் என்ற ஒரு பொருளை நாம் நேரடியாக நுகர்வதே இல்லை, எனவே பொருண்மை என்பதே இல்லை. இதுதான், பார்க்லீ, ஹ்யூம் ஆகிய பிரிட்டிஷ் சிந்தனையாளர்கள் உலவ விட்ட சூனிய வாதம். அது ஒரு பெரிய அறிவியற் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த போதுதான் கன்ட் மேற்சொன்னவாறு கேள்வி கேட்டு அந்தச் சூனிய வாதத்தை எதிர் கொண்டான் என்பது மெய்யியல் வரலாறு.

    வள்ளற் பெருமானின் கவிதையில் வந்த ஒருமை-பன்மை மயக்கம் எவ்வளவு பெரிய தத்துவக் குழப்பத்துக்கு விடையாகித் தெளிவு சேர்த்தது! ஆனால், சமீபத்தில், என் இனிய நண்பர், நல்ல கவிஞர் ஒருவர் எழுதிய பாடல் தேசிய விருது பெற்றது. அது கருத்து ரீதியாக மிக நல்ல பாடல்தான். ஆனால், அதன் தொடக்க வரியில் உள்ள ஒருமை-பன்மைக் குழப்பத்தை யாராலும் தீர்க்க முடியாது.

    “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே”

    இதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிப் பார்க்கலாமே:

    EVERY FLOWERS TELLS!

    என்ன சொல்லி இதை அமைதி செய்வது!

    நான் அந்தக் கவிஞரின் மனத்தைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. இதற்கு ஒரு நல்ல சமாதானம் அவரோ, வேறு யாரோ சொல்லிவிட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். எனக்கு அந்தச் சமாதானம் தோன்றாமற் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். உரைநடைக்கும், செய்யுளுக்கும் வடிவ வேற்றுமை உண்டு. ஆனால் உரைநடைக்கும், கவிதைக்கும் வடிவத்தில் மட்டுமா வேற்றுமை காண்பது? உரைநடையில் சொல்ல முடிவதைக் கவிதையில் சொல்வது தேவையற்றதோ என்று தோன்றுகிறது. படிப்பவருடைய சிந்தனையை நோக்கித் தொடுக்கப்படும் வாக்கியங்கள் உரைநடையில் அமைவதே பொருத்தம் என்று நினைக்கிறேன். அதுதான் நேரடியான அறிவுத் தொடர்புச் சாதனம். ஆனால் எதை உரைநடையில் சொல்ல முடியவில்லையோ அதைச் சொல்ல முற்படுவதே கவிதை என்று ஒரு தீர்மானம் போட்டுவிடலாமா?

    என்னப்பா சட்டசபையா நடத்துகிறோம், தீர்மானம் போடுவதற்கு? நம் சங்கை நாம் ஊதுவோம். அவரவர் பங்குக்கு அவரவர் சங்கை ஊதிக் கொள்ளட்டுமே. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ய நாம் யார்? அப்படிச் செய்ய வேண்டியது என்ன அத்தனை அவசியமா? இல்லை அது சாத்தியமா? எதை உரைநடையில் சொல்ல முடியாது? “மின்னல் உறங்கியது” என்று சொல்லி என்ன புரிய வைக்க முடியும்? அதைப் புரிந்து கொள்ளத் தேவையே இல்லை; உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால்தான் தன் நூலுக்கே, “மின்னல் உறங்கும் போது” என்ற அருமையான ஒரு கவிதைத் தலைப்பைத் தந்தார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். அது புரிந்து கொள்வதற்காக இல்லை, ரசிப்பதற்காக.

    கவிஞர் மருதகாசியின் பழைய திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:

    தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
    கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

    பாரதியின் குயில் பாட்டில் வரும் அமர வரிகள்:

    மின்னற் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்
    வந்து பரவுதல் போல் ……

    இதை உரை நடையில் எழுதி யாருக்கு என்ன புரிய வைக்க முடியும்! கவிதையின் சமாச்சாரமே வேறு சாமி!

    மேலே சொல்லப்பட்ட வள்ளலார் பாட்டில் ஒன்றை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிட்டோம். “அருள் கார்கொண்ட தணிகாசலமும்” என்று சொல்கிறாரே! அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலை. புறக் கண்களுக்குப் புலனாகும் தணிகை மலை கார்மேகங்கள் சூழ்ந்த மலைதான். ஆனால் அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலையாக முருகப் பெருமானே இருப்பது புறக் கண்களுக்குப் புலப்படாது. கவிஞன் எந்தக் கண்களால் தரிசனம் பெறுகிறான் என்பதை இந்தப் பாடல் எப்படித் தெளிவாக்குகிறது பார்த்தாயா தம்பி!

    “என்கவிதை எந்நாளும் பயன்படாது” என்ற என் கவிதையை முன்பே முழுசாகத் தந்து விட்டேன். அதில் வரும் ஒரு புலம்பல் வரி இப்போது கொஞ்சம் புரியத் தொடங்குகிறதோ?

    தரிசனக் கடலாடி விட்டு வார்த்தைத்
    தறிகளிலே சிக்குண்டு தவிக்கும் பேதை

    ஆனால் அந்தத் தறியில் தான் எத்தனை வண்ண வண்ண ஆடைகள் நெய்து கொள்கிறோம்!

    (தொடரும்)

    Share
  • மழையும் மெளனமும்!

    -கே. ரவி

    மெளனத்தைக் குடையாக விரித்துக் கொண்டு
    மழைமேகம் நடந்துவரக் காற்று வந்து
    கெளரவமாய்க் கைப்பிடித்துக் கூட்டிச் செல்ல    Lightning
    ககனத்தில் ஒருபாதை திறக்க ஆஹா
    சவுக்கைப்போல் வெட்டியது மின்னல் சட்டச்
    சடசடவென் றதிர்வெடிகள் எக்கச் சக்கம்
    மெளனத்தின் உடலெல்லாம் பொத்தல் பொத்தல்
    மழையோடு மெளனமுற வாட லாமா?

    மல்லாந்து படுத்திருந்தேன் வானம் இல்லை
    மாறாக மின்விசிறி சுழலக் கண்டேன்
    சொல்லாழ்ந்த கற்பனையா மாயச் சூதா
    சூழ்ச்சிவலை பின்னுபவள் யாரோ எங்கும்
    கல்லாத வித்தையிது கவிதை யாகக்
    கலகலக்கும் உற்சாக வெள்ளம் இங்கே
    இல்லாத உண்மைக்குச் சாயம் பூசி
    இதயத்தைக் கொள்ளையிடும் ஜாலக் காரி!

    எனக்குள்ளே ஒருகனவா இல்லை நானோர்
    ஏகாந்தக் கனவுக்குள் இருக்கின் றேனா?
    தனக்குவமை இல்லாத ஒருநி லைக்குத்
    தள்ளாடிக் கொண்டேநான் நடக்கின் றேனா?
    மனக்குளத்தில் தூறெடுக்க மலர்நீட் டத்தை
    மகோன்னதத் தூரிகையாய் மாற்றி னேனா?
    கனக்கிறது பனித்துளியும் காலை வேளை
    கண்திறக்கக் காத்திருக்கும் புல்நான் தானா?

    சொல்லடீ சொல்லடியென் றுலுக்கி னானே
    சொன்னாயா சொல்லாமல் போக்குக் காட்டிக்
    கொல்லாமல் கொன்றாயா உணர்ச்சி கள்நீ
    கொய்துவிளை யாடுகின்ற கொய்யாத் தோப்பா?
    புல்லென்று நினைக்காதே பூகம் பத்தைப்
    புன்னகையோ டெதிர்கொள்ளத் தெரிந்த வன்நான்
    நில்லென்று கூவுகிறேன் நின்று காட்டு
    நெறிஞ்சியிலுன் பாதங்கள் சிவந்தால் என்ன?

     

    Share
  • ஆண்டுக் கணக்கா யுகக்கணக்கா?

    -கே. ரவி

    ஆண்டுக் கணக்கா யுகக்கணக்கா
    தோண்டத் தோண்ட வளர்கிறதே
    வானும் புவியும் பிரிந்த போது
    நானும் நீயும் பனியும் தீயும்
    கடல்பி ரிந்து கலைந்த போது
    நீயும் நானும் நீரும் நிலமும்
    பாரி வள்ளல் ஏறி வந்த
    தேரே உன்மேல் படர்ந்தி ருந்த
    முல்லைக் கொடியை மறந்து விட்டாயா?

    மரப்பொந் தாய்நான் காட்டை எரிக்கும்
    அக்கினிக் குஞ்சாய் அமர்ந்தி ருந்தாய்
    அள்ளி எடுத்துனை அப்படி யேயென்
    மனத்துக் குள்ளே வைத்தா னேயவன்
    மறக்க முடியுமா பிரிந்துவிட் டோமே
    யார்பிரித் தார்கள் ஏன்பிரிந் தோம்நாம் – ஓ
    மானிட இருட்டின் மாயா ஜாலம்
    விடியத் தானே போகிறது
    வெளிச்சம் வந்து விட்டால்
    உலகத் துக்கே தெரிந்துவிடும்
    நீதான் எந்தன் நிழல் என்று!

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 50

    — கே.ரவி.

    சொற்களுக்குள் ஏறிக் கொண்டேன். என்ன செய்யப் போகிறாய்?
    தம்பி, உனக்கும் எனக்கும் பதில் சொல்லவே வந்தது ஒரு கவிதை, 1978-ல்:

    என்
    சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
    கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்

    மேகங்களிலே தேகம் இழைத்து மேனி படைத்திடலாம்
    மின்னலைப்போல் துள்ளித்துள்ளி வானில் குதித்திடலாம்
    நிலாப்பிறையைத் துந்துபியாக்கி நாதம் எழுப்பிடலாம்
    வானவில்லை வளைத்துக் கட்டி ஆடை நெய்திடலாம்
    என்
    சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
    கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்

    நீர்க்குமிழிக்குள் நினைவிழந்துபோய் நித்திரை செய்திடலாம் – அங்கு
    நேர்ப்படுகின்ற காற்றை நமக்குக் காவல் அமர்த்திடலாம்
    நட்சத்திரங்களை எல்லாம் நமது வார்த்தை வயிரங்களால்
    வெட்கப்பட வைத்து நெஞ்சம் விம்மிப் புடைத்திடலாம்
    என்
    சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
    கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்

    உயிர்க்கருவுக்குள் ஊடுருவிப்போய் உண்மை யறிந்திடலாம் – அங்கு
    வடிவம் எடுத்து வளரும் புதிய மாயம் உணர்ந்திடலாம்
    உலக விளிம்புக் கோடிச்சென்றே உருண்டு விழுந்திடலாம்
    விழுந்து கொண்டே வீரக் கதைகள் பேசிக் களித்திடலாம்
    ஆனால் என்
    சொற்களூக்குள் ஏறிக்கொண்டால் மீண்டுவர மாட்டாய்
    சொற்களோடு சொற்களாகக் கரைந்துபோய் விடுவாய்
    விழிதொடாத இடமெலாமென் மொழிநுழைந்து செல்லும்
    அழிவிலாத அட்சரங்கள் அமரவாழ்வு நல்கும்
    சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
    கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்
    அதோ அந்தக்
    கானல் நீரைக் கடந்து சென்றால் கற்பகச் சோலை வரும்

    கானல் நீரை எப்படிக் கடப்பது? கானல் நீர் ஒரு தோற்ற மயக்கம்தானே. அது மெய்யில்லையே! பிறகு அதை எப்படிக் கடந்து செல்வது? இருக்கும் ஒன்றைக் கடப்பதற்கு முயற்சி செய்யலாம். இல்லாத ஒன்றைக் கடக்க என்ன செய்ய முடியும்? இல்லாத ஒன்றைக் கடப்பது வெகு சுலபம். அது இல்லை என்பதை உணரும் கணமே அதைக் கடந்து சென்று விடுகிறோம். கானல் நீரைக் கடந்து செல்கிறோமோ இல்லையோ, இப்படிப்பட்ட வியாக்யான, விளக்கங்களை எல்லாம் கடந்து சென்றால்தான் கவிதையாகிய கற்பகச் சோலை வரும்!

    புரிகிறது. ஆனாலும் அறிவு, அதான் நம்ம புத்தி சிகாமணி, எப்பொழுதும் இப்படிப்பட்ட வியாக்யானங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறான். மனம், அதாங்க நம்ம மனோன்மணி, பாவம், இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

    பதினைந்து ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் மாலையில், சென்னை, மெரினா கடற்கரை சாலையில் நான் காலார நடந்து சென்று கொண்டிருந்தேன். என் கூட ஒரு நங்கையும் நடந்து வந்தாள். ஒளவையார் சிலையருகே வந்ததும், ‘வாக்குண்டாம்’ என்ற செய்யுளை உரக்கச் சொல்லிக் கொண்டே நடந்தேன். ஏன் என்று கேட்க வேண்டாம். நான் எதைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும் அதை எப்படியாவது ஒரு கவிதையுடனோ, செய்யுளுடனோ தொடர்பு படுத்திவிடும் என் மனம். இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்குச் சமீப கால எடுத்துக்காட்டு ஒன்று சொல்கிறேன். எனக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்திருந்த மாத்திரையை என் ஓட்டுநர் சிவசங்கரன் வாங்கி வந்து கொடுத்ததும் அந்த மாத்திரையின் பெயரைப் பார்த்தேன். ரேஜோ டி (Razo D) என்று எழுதியிருந்தது. உடனே, ‘ரேஜோ, ரேஜோ டி என்னோட மருந்து’ என்று ‘யாரோ யாரோடீ’ என்ற திரைப்படப் பாடல் மெட்டில் என் மனம் முணுமுணுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பைத்தியம் முற்றி விட்டது.

    சரி, மீண்டும் மெரினா கடற்கரை, ஒளவை சிலை, வாக்குண்டாம் என்ற சமாசாரத்துக்கு வருகிறேன். நான் அந்தச் செய்யுளைச் சொன்னதும் அருகில் நடந்து வந்த நங்கை அதன் அர்த்தத்தைக் கேட்டாள். அதை அப்படியே சொன்னாலே போதுமே, பொழிப்புரையே தேவையில்லையே என்று நினைத்து அர்த்தம் சொல்லத் தொடங்கியதும், என் குரலும், போக்கும் மாறிவிட்டதை உணர்ந்தேன். வேறு ஏதோ ஓர் அதிர்வுக்கு ஆட்பட்டு நான் பேசுவது போல் எனக்கே தோன்றியது. பேசினேன்:
    வாக்கு உண்டாகும். சாதரணச் சொல் இல்லை வாக்கு என்பது. ‘மணிவாக்கு’ என்று பாரதி குறிப்பிட்டானே அந்த வாக்கு உண்டாகும். நல்ல மனம் உண்டாகும். அந்த ‘நல்ல’ என்ற சொல்லுக்குப் பொருள் தெரிய வேண்டுமா:

    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டுமுடனே
    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

    இந்த வாசகத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்க வேண்டும். அப்போது புரியலாம், ‘நல்ல’ என்ற சொல்லின் அர்த்தம். அத்துடன், மாமலராள் நோக்கு உண்டாகும். அதாவது, ‘மலரின் மேவு திருவே’ என்று பாரதி பாடினானே, அந்தத் திருமகளின் நோக்கு உன் மேல் விழும் என்பது ஒருபுறமிருக்க, மாமலராகிய இந்தப் பிரபஞ்சத்தையே ஆள்கின்ற நோக்கு உனக்கு ஏற்படும். பூக்கொண்டு தும்பிக்கையான் பாதம் சார்வாருக்கு என்று எளிதாக முடித்து விடக் கூடாது, தோழி! “மேனி நுடங்காது” என்ற சொற்றொடரை விட்டுவிடக் கூடாது. அதாவது மேனி வளையாமல், பூக்கொண்டு தும்பிக்கையான் பாதம் சார்வாருக்கு என்று படிக்க வேண்டும். இது என்ன குழப்பம்! மேனி வளைந்துதானே இறைவனைத் தொழுவது வழக்கம். அதுதானே நமஸ்காரம் செய்யும் முறை. மேனி வளையாமல் என்றால்…? மேனி வளையாமல் த்யான நிலையில் அமர்ந்து கொண்டு வணங்க வேண்டுமோ? இல்லை மகளே. மேனி வளையாமல், பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் சார வேண்டுமாம்! அதாவது, த்யான நிலையில் அமர்ந்து கொண்டு, உன் மேனி வளையாமல் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, தும்பிக்கையான் பாதத்தைச் சார வேண்டும். எது சார வேண்டும்? துப்பார் திருமேனி சார வேண்டும்! ஸ்தூல சரீரம் எனப்படும் திட்பவுடல் வளையாமல், நிமிர்ந்து த்யான நிலையில் அமர்ந்து கொண்டால், சூக்ஷ்ம சரீரம் எனப்படும் நுட்பவுடல் நீர்போல் தெளிவாக இருக்குமாம். வெறும் மேனி வளையாமல் த்யான நிலையில் உட்கார வேண்டும். மனம் அடங்கியிருக்க வேண்டும். அப்போது திருமேனியாக, தூய நீர்போல் ஆசாபாசங்கள் எதுவும் இன்றி நுட்பவுடல் துலங்கும். அப்போது அதில் பூக்கின்ற ஞான மலரைக் கொண்டு தும்பிக்கையான் பாதம் சார வேண்டுமாம். தும்பிக்கையைச் சொல்லி, அப்படிப்பட்ட கையுடையவனின் திருப்பாதத்தைக் காட்டுக்கிறாளே இந்தப் பாட்டி! கைகாட்டிக் கால்காட்டும் வித்தை என்ன வித்தையோ! தும்பிக்கை என்பது யோக மார்க்கத்தில், பன்னிரண்டு அங்குலத் தொலைவு பாயும் ஸ்வாஸத்தை, மூச்சுக் காற்றைக் குறிக்கும் ஒரு பரிபாஷை வழக்கு. அதன் பாதம் என்பதோ மூலாதாரச் சக்கரம் என்ற நுட்ப ஸ்தானம். அந்தத் திருப்பாதத்தைச் சேர்ந்தவர்க்கு என்று சொல்லாமல் ‘சார்வார் தமக்கு’ என்று சொல்கிறாளே!

    சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றொழித்துச் சார்தரா சார்தரு நோய்

    உலகப் பொதுமறையின் சாரத்தை அன்றோ பாட்டி இங்கே குறிப்பிடுகிறாள்!

    இதையெல்லாம் கேட்டுக் கொண்டே அருகில் நடந்து வந்து கொண்டிருந்த நங்கையின் கண்கள் பனித்தன. “சார், இப்படியெல்லாம் இந்தப் பாடல் பற்றி நான் யோசித்ததில்லையே” என்று நாத்தழுதழுக்க அவள் சொன்னதும், “யோசித்து வருவதில்லை இது. யோகத்தில் வருவது!” என்று நான் பதில் சொன்னதாக ஞாபகம்!

    Rani Srinivasanஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகள் என் செயலாளராகப் பணிபுரிந்ததோடு, எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே இருந்துவிட்டு, இப்பொழுது லண்டனில் சென்று வாழும் செல்வி ராணி ஶ்ரீநிவாசன் என்பவர்தான் அந்த நங்கை. இந்தச் சம்பவம் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில், தான் ஒரு சொற்பொழிவு ஆற்றப் போவதாகவும், அதில் ‘வாக்குண்டாம்’ பாடலைப் பற்றிய விளக்கத்தைச் சொல்ல ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டு, அந்த விளக்கத்தை மீண்டும் நினைவு படுத்தி எழுதுமாறு மின்னஞ்சல் மூலம் என்னைக் அவள் கேட்டிருந்தாள். கேட்டதும் வருமா விளக்கம்? யோசித்து வருவதில்லை பெண்ணே, அது யோகத்தில் வருவது என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு அவள் கேட்டபடி விளக்கம் அனுப்பாமலேயே விட்டுவிட்டேன். அவள் அந்தக் கூட்டத்தில் என்ன பேசினாளோ தெரியவில்லை.

    இப்படியெல்லாம் வியாக்யானம் சொல்வது சரியா என்பது மிகவும் நியாயமான கேள்வி. ஆனால், ‘மறை’ என்று நம்பப்படும் படைப்புகளில் படிப்பவர் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு அடுக்குகளாக அர்த்தங்கள் பொதிந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. ‘The Occult Element in Tamil speech’ என்று பாரதி ஓர் ஆங்கிலக் கட்டுரை எழுதியிருந்தான். அதில் மறை வல்லுநர்கள் பொதுவான சமூக மொழியைப் பயன்படுத்தும் போது கூடத் தாங்கள் சொல்லும் சொற்றொடர்களில் மறை பொருள் இருக்கும் வண்ணமே பேசுவார்கள் என்று குறிப்பிட்டுவிட்டு, ‘அப்படிப்பட்டவர்கள், ‘உட்கார்’ என்று சொன்னால், அது, உட்(கு)+ ஆர் எனப் பிரிந்து, ‘உள்ளமைதி பெறுக’ எனப் பொருள்தரக் கூடும் என்று எழுதியுள்ளான்.

    பதினைந்து அண்டுகளுக்கு முன், மெரினா கடற்கரை சாலை ஓர் ஆரண்யமாக, அதாவது, வனமாக ஆனதும், அங்கே, நெருங்கியமர்ந்து கொண்டு ஓர் உபநிடதப் போக்கில் ராணியும் நானும், கார்க்கியும் யக்ஞவால்க்யரும் போல் உரையாடியதும் இப்போது மனத்திரையில் நிழலாடுகிறது. அதெல்லாம் ஒரு கண நேர அனுபவம். யோசித்து வாராது தம்பி. வெறும் புத்தி முயற்சியில் விரித்துப் பேசும் வியாக்யானம் இல்லையது. ஆட்கொள்ளப்பட்ட நிலையில் உள்ளிருந்து ஊற்றெடுத்து வரும் உணர்வு தம்பி. ஆங்கிலத்தில் ‘ஞானத் தாழிசை’ விளக்க நூலாகிய ‘த வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ எழுதும் போது என்னை என் குருநாதர் அப்படிப்பட்ட நிலையில்தான் வைத்திருந்தார்.
    ‘தம்பட்டம் போதுமண்ணே’ என்று இடித்துரைக்கிறான் சிகாமணி.
    தம்பட்டம் இல்லை தம்பி, தத்துவம். இப்பொழுது விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

    நம் திட்ப உடலைக் கடந்த நிலையில் இன்னோர் அதிர்வுக்கு நாம் வசமாவதுதான் ‘பரவசம்’ என்ற செய்தியைச் சொல்லத்தான் இந்தக் கதை. அப்படிக் கடந்த நிலையில் வசமாவதைத்தான் ‘பரவசம்’ என்று குறிப்பிடுகிறோம். ஆங்கிலத்தில் இதுதான் ‘எக்ஸ்டஸி’ எனப்படுகிறது. இதையே தத்துவ மொழியில் சொன்னால், ‘Transcendental Experience’.

    வியாக்யானமே தேவைப்படாத என் பாடல் ஒன்றின் வரிகள் இப்பொழுது மேலும் சுடர் விட்டுப் பிராகாசிப்பதைப் பார்க்க முடிகிறது. பாரதியை நினைத்து எழுதிய அந்தப் பாட்டு முழுமையும் முன்பே ஒரு பகுதியில் தந்து விட்டேன். இருந்தாலும், பரவசம் பற்றிய விளக்கத்துக்குப் பிறகு மேலும் ஒளிபெற்று விளங்கும் அந்த வரிகளை மட்டும் இங்கே மீண்டும் நினைவு கூரலாம்:

    கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே
    காட்டு வழியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே
    தேடிச் சென்ற திசையெல்லாம் பெருந் தீ வளர்த்தானே
    தேகம் எடுத்ததனாலே அவனும் தேய்ந்து விட்டானே

    கானல் நீரைக் கடந்து சென்றால் கற்பகச் சோலை வருமா, வராதா?

    (தொடரும்)

    Share