நலம் …… நலமறிய ஆவல்! (2)

நிர்மலா ராகவன்

படிக்க மட்டும்தானா கல்லூரி?

நலம் (1)

(நான் கோலாலம்பூரிலுள்ள ஒரு கல்லூரியில் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் உரையாற்றி முடிந்ததும் என்னிடம் ஒரு மாணவி பகிர்ந்துகொண்டது).

மாணவியின் வருத்தம்: என் தாய் அதிகப் படிப்பறிவு இல்லாதவர். கல்லூரியில் பாடங்கள் முடிந்ததும், எந்த நிகழ்ச்சியிலும், விளையாட்டிலும் கலந்துகொள்ளாது, உடனே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார். இதனால் பிற மாணவிகளின் கேலிக்கு ஆளாகிறேன்.
அலசல்: திரைப்படங்களில் கல்லூரி மாணவ மாணவிகள் அடிக்கும் கொட்டத்தைப் பார்த்து பயந்திருக்கவேண்டும் உங்கள் தாய். ஆண்களுடன் இளம்பெண்கள் பேசிப் பழகினாலே காதல் பிறந்துவிடும், இல்லையேல் தகாத உறவு ஏற்பட்டுவிடும் என்று நினைத்திருக்கிறார்கள்.
ஆண்-பெண் கவர்ச்சி இளமையில் மட்டுமல்ல, வேறு எந்த வயதிலும் ஏற்படலாம். இது இயற்கை. இது புரிந்து, மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டுவது அவசியம்.

`அம்மாவுக்கு கல்லூரியைப்பற்றிச் சொன்னால் என்ன புரியும்!’ என்ற அலட்சியப்போக்கு இல்லாது, ஒவ்வொரு நாளும் தன்னை மகிழ்வித்த, அல்லது பாதித்த சமாசாரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். (உதாரணம்: ஒரு பதின்ம வயதுப்பெண்ணுடன் படிக்கும் பையன்கள், `வாவ்! உன் காலெல்லாம் எவ்வளவு முடி!’ என்று வியந்து பாராட்ட, அவளுக்கோ ஒரே அவமானம். பையன்களுக்குப் பெருமையாகத் தோன்றுவது பெண்களுக்குக் கேவலமாகப்படும். தாயுடன் இதைப் பகிர்ந்துகொண்டால், உடலில் தேவையற்ற ரோமத்தை நீக்கும் வழியைச் சொல்லித்தருவாரே!)
நான் அந்த மாணவியிடம் கூறியது: `நீ உண்மையாக நடந்துகொள்கிறாய் என்ற நம்பிக்கையை ஏற்படுத்து. `தமிழ்ப்பெண்கள் உத்தியோகத்தில் படும் பாடு’ என்பதுபோல் நான் பேசியது உனக்கு உபயோகமாக இருந்ததா? அதைப் போய்ச்சொல்லு!’

`நான் இன்னிக்கே கடைக்குப் போய் நாலு புடவை வாங்கிக்கப்போறேன்!’ என்றாள் அப்பெண். (நான் எப்போதும் புடவையே உடுத்துவதை உத்தியோகம் பார்த்த இடத்தில் சில அறிவிலிகள் கேலி செய்வதாகக் கூறியிருந்தேன்).

மேலும் கேட்டேன்: `கல்லூரியில் நடப்பதை அம்மாகிட்டே சொல்வியா?’

அவள் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள். மறுத்துத் தலையாட்டினாள்.

`சொல்லணும்,’ என்றேன். `இன்னிக்கு நான் வந்து பேசினது, அதிலே ஒனக்குப் பிடிச்சது, பிடிக்காதது — இப்படி’.

அன்று சனிக்கிழமை. பாடங்கள் கிடையாது. இருந்தாலும், தோழி ஒருத்தி வற்புறுத்தி அவளை அழைத்து வந்திருந்தாள். `தமிழ்ச்சங்கமும், விளையாட்டுப்போட்டிகளும் உன்னைப் போன்றவர்களுக்குத்தானே! நீயே கலந்து கொள்ளாவிட்டால் எப்படி?’

அவள் முகம் மலர்ந்தது. `இன்னிக்கு அம்மாகிட்டே எல்லாத்தையும் சொல்லப்போறேன்!’ என்று விடைபெற்றுக்கொண்டாள்.

தொடருவோம்

Share

Comments

One response to “நலம் …… நலமறிய ஆவல்! (2)”

  1. Innamburan

    நாங்கள் கல்லூரியில் படிப்பைத் தவிர மற்றதை எல்லாம் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டோம். பரிக்ஷையில் மார்க் வாஙக்வும் கற்றுக்கொண்டோம். 
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *