-எம். ஜெயராம சர்மா, மெல்பேண், அவுஸ்த்திரேலியா

மதுவைநீ நாடாதே மதிகெட்டுப் போயிடுவாய்
மங்கையரை நாடுவதால் வலியுனக்கு வந்துவிடும்
சதிசெய்யும் குணமுடையார் சகவாசம் தனைவிடுத்தால்
சரியான வழிநடக்கத் தானாகப் பழகிடுவாய்!

ஏழ்மைநிலை இருப்பாரை இரக்கமுடன் அணைத்துவிடு
எதிரியென எவரையுமே என்றும்நீ எண்ணாதே
சோதனைகள் வந்திடினும் சோர்ந்துவிடா திருந்துவிடின்
சாதனையின் நாயகனாய்த் தலைநிமிர நின்றிடுவாய்!

அறத்தினை நினை அன்பை யணை
சிரத்தையுடன் நீ சிறந்தன தேர்ந்திடு
இறப்பினைப் பற்றி எண்ணா திருந்திடு
சிறக்க வாழ்ந்திட சிந்தனை செய்திடு!

அரக்க குணத்தை அடியோ டழித்திடு
உரக்க வுண்மையை வாழ்வினி லுரைத்திடு
குறைக்குள் சென்றிடா மனத்தைத் தடுத்திடு
சிறக்க வாழ்ந்திடச் சிந்தையைச் செலுத்திடு!

தாழ்வுமனப் பான்மையினைத் தானழித்து நில்லு
வீழ்கின்ற எண்ணம்வரின் விரட்டியே கொல்லு
ஆர்வந்து எதிர்த்தாலும் அன்புவழி நில்லு
அகிலமதி லுன்வாழ்வு அர்த்தமுட னமையும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.