நான் அறிந்த சிலம்பு – 212
மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை
கண்ணகி வந்ததை வாயிலோன் மன்னனுக்குத் தெரிவித்தல்
வாயிலோன் கூறலானான்:
” எம் கொற்கை அரசே! வாழி!
தெற்கில் பொதிகை மலை கொண்ட தலைவனே வாழி!
செழியனே வாழி! தென்னவனே வாழி!
பழிவரும் காரியங்கள் செய்யாத பஞ்சவனே வாழி!
பொங்கி வழிகின்ற குருதியால் புண்ணாக இருக்கின்ற
மகிடாசுரனின் பிடரொடு கூடிய தலைப் பீடத்தில் நின்று
தன் அகன்ற கைகளில் வெற்றிவேல் ஏந்திய
கொற்றவை போலும் இருக்கிறாள்;
எனினும் அவள் கொற்றவை அல்லள்;
ஏழு கன்னியருள் இளையவள் பிடாரி போல் இருக்கிறாள்
எனினும் அவள் பிடாரி அல்லள்;
சிவனை நடமாடச் செய்து
அந்த ஆடலைக் கண்ட
பத்ரகாளி போல் இருக்கிறாள்;
எனினும் அவள் பத்ரகாளி அல்லள்;
பயமுறுத்தும் காட்டினை விரும்பி
வாழும் காளி போல் இருக்கிறாள்;
எனினும் அவள் காளியும் அல்லள்;
தாருகாசுரனுடைய அகன்ற மார்பினைக் கிழித்த
துர்க்கை போல் இருக்கிறாள்;
எனினும் அவள் துர்க்கையும் அல்லள்;
தன் உள்ளத்தில் பழியுணர்ச்சி கொண்டவள் போல
மிகுந்த சினம் கொண்டவள் போல
மிகவும் அழகிய வேலைப்பாடமைந்த
பொற்சிலம்பினைக் கையில் ஏந்தியவளாய்,
கணவனை இழந்த பெண்ணொருத்தி
நம் வாயிலின் கண் நிற்கிறாள்.”
இங்ஙனம் அச்சம் மேலிட
அரசனிடம் அறிவித்தான் வாயிற்காவலன்.
படத்துக்கு நன்றி:
கூகுள்