மதயானை
மீ.விசுவநாதன்
நல்லவன் போலே தெரிகின்ற
நடிப்புக் கலைஞன் நானேதான் !
வில்லனை உள்ளே தெரியாமல்
வெளியே சிரிப்பவன் நானேதான் !
சொல்கிற வார்த்தை கனிபோலே
சுகமாய்த் தருபவன் நானேதான் !
சல்லடை யிட்டே சலித்தாலும்
சாந்தி இலாதவன் நானேதான் !
வல்லினப் பேச்சால் வகையின்றி
வசைகள் பொழிபவன் நானேதான் !
மெல்லின மாதர் மதிமயக்க
மெய்யை மறைப்பவன் நானேதான் !
கல்லிலும் பாலைக் கறக்கின்ற
காசுக் கலைபவன் நானேதான் !
துல்லிய மாக எடைபோடும்
தூய இறையுளம் நானேதான் !
பள்ளியில் தூங்கிப் படிக்காத
பச்சைத் துரோகியும் நானேதான் !
சுள்ளியில் கூடக் கவிதையினைச்
சுண்டும் கவிஞனும் நானேதான் !
கள்ளிலே தேனின் சுவைதேடும்
கடைந்த அசடனும் நானேதான் !
உள்ளிலே உள்ள மதயானை
உருவாய் இருப்பவன் நானேதான் !
