மீ.விசுவநாதன்

 

நல்லவன் போலே தெரிகின்ற

நடிப்புக் கலைஞன் நானேதான் !

வில்லனை உள்ளே தெரியாமல்

வெளியே சிரிப்பவன் நானேதான் !

சொல்கிற வார்த்தை கனிபோலே

சுகமாய்த் தருபவன் நானேதான் !

சல்லடை யிட்டே சலித்தாலும்

சாந்தி இலாதவன் நானேதான் !

 

வல்லினப் பேச்சால் வகையின்றி

வசைகள் பொழிபவன் நானேதான் !

மெல்லின மாதர் மதிமயக்க

மெய்யை மறைப்பவன் நானேதான் !

கல்லிலும் பாலைக் கறக்கின்ற

காசுக் கலைபவன் நானேதான் !

துல்லிய மாக எடைபோடும்

தூய இறையுளம் நானேதான் !

 

பள்ளியில் தூங்கிப் படிக்காத

பச்சைத் துரோகியும் நானேதான் !

சுள்ளியில் கூடக் கவிதையினைச்

சுண்டும் கவிஞனும் நானேதான் !

கள்ளிலே தேனின் சுவைதேடும்

கடைந்த அசடனும் நானேதான் !

உள்ளிலே உள்ள மதயானை

உருவாய் இருப்பவன் நானேதான் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.