க.பாலசுப்பிரமணியன்

படித்தலும் கற்றலும்

education

“அவனைப் பார்த்தாயா, எவ்வளவு வேகமாக பொருள் அறிந்து படிக்கிறான்.. நீயும் படிக்கிறாயே…” என்று குழந்தைகளைப் பார்த்து  அங்கலாய்க்கும் பெற்றோர்களின் குரல் காதில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது..

மற்ற வீட்டுக் குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மட்டுமின்றி கூடப்பிறந்தவர்களோடும் ஒப்பிட்டிப்பார்க்கும் மனம்  குடும்பங்களில் உண்டு. இது நமது மனத்தின் அன்பின் ஆதங்கத்தில் பிறந்த சொற்களாக இருந்தாலும் அறியாமையின் அறிகுறியாகவே வெளிப்படுகின்றது..

முன்பே சொன்னபடி ஒரு காட்சியைப் பார்க்கின்ற கண்கள் அந்த ஒளி அலைகளை பிரித்து மூளையின் வெவ்வேறு பாகங்களுக்கு அனுப்புகின்றது. உதாரணமாக ஓடுகின்ற ஒரு நாயைப் பார்க்கும் நமது கண்கள் அதன் உருவ வடிவங்களை நேர் கோடுகளாகவும், வட்டங்களாகவும் மற்றும் பல வடிவங்களாகவும் பதிவு செய்கின்றது. அதே நேரத்தில் அந்த நாயின்  வண்ணங்கள், அதன் நீள அகல பரிமாணங்கள் அனைத்தும் அலசப்பட்டு மூளையின் வெவ்வேறு இடங்களுக்குச்  செல்கின்றன. .. அதே நேரத்தில் குறைத்துக் கொண்டு ஓடுகின்ற அந்த நாயின் ஒலி அலைகளும் காதில் பதிவு செய்யப்பட்டு மூளையின் வெவ்வேறு பாகங்களுக்கு அனுப்பபடுகின்றன. மேலும் ஓடுகின்ற அந்த நாயின் வேகம், நகர்வு, தூரம், திசை அனைத்தும் கண்களால் பரிசீலிக்கப்பட்டு மூளையின் பல்வேறு பாகங்களைச் சென்று அடைகின்றன. . இத்தனையும் சேர்த்து மூளை கண்ணிமைக்கும் நேரத்தின் ஒரு சிறிய விழுக்காட்டிற்குள் ” இந்த கரிய மற்றும் வெள்ளை வண்ணம் கொண்ட நாய் மிகவும் அதிகமாக குறைத்துக்கொண்டே தெரு முனையை நோக்கி வேகமாகச் செல்கின்றது.” என்ற ஒரு பொருளை நமக்கு அறிவிக்கின்றது.

இந்த செயல் எல்லா மனிதருடைய மூளையிலும் ஒரே மாதிரியாகவும் ஒரே நேரப் பரிமாணங்களிலும் நடப்பதில்லை. இந்த மாறுபட்ட அறிதல் புரிதல் செயல்கள் ஒவ்வொரு தனி மனிதனுடைய கற்றலின் திறனை நிர்ணயிக்கின்றது. அப்படியிருக்கும் போது ஒரு புத்தகத்தை படிக்கும் மாணவன்  முடிக்கும் நேரம், வேகம், திறன் ஆகியவை அவனுக்குத் தனிப்பட்டதாகவே  அமையும்.ஆகவே எந்த இரு மாணவர்களின் படிக்கும் திறனை ஒப்பிடுதல் அறிவுபூர்வமான செயலாகத் தெரியவில்லை. ஆனால் இந்த செயல்களின் திறனை பயிற்ச்சிகள் மூலம் மேம்படுத்தலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர் . படிக்கும் திறனை மேம்படுத்த “வேகமாகப் படித்தலுக்கான” (Speed Reading) பயிற்ச்சிகள், புரிதலை மேம்படுத்துவதற்காக “மெதுவாகப் படித்தலுக்கான” (Slow Reading) பயிற்ச்சிகள்  அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. மேலும் கவிதை படித்தல் (Poetry Reading), கதை படித்தல்,(Story Reading) நாடகம் படித்தல் (Drama Reading) போன்ற உத்திகள் கையாளப்படுகின்றன.

படித்தல் என்பது ஒரு உணர்வு சார்ந்த செயலாக இருத்தல் அவசியம். படிக்கும் கருத்தை உணர்வுபூர்வமாக படிக்கும் பொழுது அது மனதில் படிவது மட்டுமின்றி நிரந்தர நினைவுக்கு (Long term Memory) அடிப்படையாகவும் அமைகிறது. சில நேரங்களில் வற்புறுத்தலால் குழந்தைகள் பாடங்களைப் படிக்கும் பொழுது அது அவர்கள் செய்யும் ஒரு கடமையின் நிர்வாகமாகவே இருக்குமன்றி உண்மையான கற்றலுக்கு வழி வகுக்காது.

புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்வது கற்றலில் ஒரு பங்குதான். படிக்கும் பொழுது படிப்பவரின் உடல்நிலை, மனநிலை, உணர்வுநிலை ஆகியவை அதை பாதிக்கின்றன.  படிக்கின்ற எல்லா விஷயங்களும் அறிதலிலும் புரிதலிலும் முடிவதாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. மற்றும் படிக்கின்ற வேகமும் முறைகளும் படிக்கின்ற விஷயத்தைப் பொறுத்ததே.

உதாரணமாக கதைகளைப் படிக்கின்ற வேகத்திலே நாம் கவிதைகளைப் படிப்பதில்லை. ஏனென்றால் கவிதைகளைப் படிக்கும் பொழுது அதன் பொருள் உள்வாங்கிக்கொள்ள (meaning making) கதைகளைவிட அதிக நேரமாகின்றது. அதேபோல்தான் நாடகங்களைப் படிப்பதைபோல் கட்டுரைகளையும் வர்ணனைகளையும் படிப்பதில்லை.

சில புத்தகங்களைப் படிக்கும்பொழுது நாம் மேலெழுந்தவாரியாகப் படிக்கின்றோம். மற்ற சில புத்தகங்களைப் படிக்கும் பொழுது ஓரிரு பக்கங்களைப் படிப்பதற்க்கே அதிக நேரமும் கவனமும் எடுத்துகொள்கின்றோம். இதைப் பற்றி அழகாகச் சொல்லுகின்ற ஆங்கிலக் கட்டுரையாளர் பிரான்சிஸ் பேகன்  (“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”) சில புத்தகங்களை படிக்கும்பொழுது நாம் அவற்றை சுவைக்கவேண்டும்  சிலவற்றை அப்படியே விழுங்க வேண்டும். மற்றும் சிலவற்றை மென்று ஜீரணிக்க வேண்டும்” என்று கூறுகின்றார்.

அவர் கூறுவது புத்தகங்களை அல்ல; புத்தகங்களில் உள்ள கருத்துக்களை !!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.