படக்கவிதைப் போட்டி – 71
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
சாந்தி வீஜே எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்
திறந்த வெளியில் பசு மாடு உண்பதை பாரு
நேசத்தோடு கன்றுடன் உண்பதையும் பாரு
காக்கை தன் இனத்தை கூவி அழைப்பதை பாரு
பகிர்ந்து உண்ண கற்றுக்கொடுத்ததும் யாரு?
கோமாதா என் குலமாதா சொன்னவர் யாரு ?
வீதீயீலும் , குப்பைத்தொட்டி அருகில் மேய விட்டது யாரு ?
நம் உயிரையும்,உடலையும், வளர்ப்பது தாயும், பசுவுமே ,
பால் தரும் வரை அதனை உபயோகப்படுத்துகிறோமே
பால் தராவிட்டால் அதனை அடிமாடு என்கிறோமே
அதனை பராமரிக்க கோசாலை இருப்பதை மறந்தோமே,
பறவைகளும், மிருகங்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை,
பணத்தால், ஏழை, பணக்கார ஜாதி தோன்றாமல் இல்லை !
பசுவதை சட்டம் உள்ளது எனஅறியவில்லையா
உசி போட்டு பால் கறப்பதை கொடுமை என கூறவில்லையா !
தாயும், பசுவும் ஒன்று தெரிந்துகொள் மனிதனே,
கோசாலையில் விட்டு பராமரிக்க உதவுபவனும் மனிதனே !
ரா.பார்த்தசாரதி
உயர்வு பெற…
உண்ண உணவு கிடைத்துவிட்டால்
உறவை யழைத்துச் சேர்ந்துண்ணும்
கண்ணியம் மிக்க காக்கையொடு
கன்றோ டுண்ணும் பசுவையுமே
கண்ணில் கண்டும் மனிதனிடம்
கடுகள வேனும் மாற்றமில்லை,
உண்மை யிதனை உணர்ந்தாலே
உயர்வு பெறுவீர் மானிடரே…!
-செண்பக ஜெகதீசன்…
மாட்டுத்தீவனமும் வைக்கோலும்
விலை ஏறிப்போனதால்
பாலைக்கறந்ததும் மாட்டையும் கன்றையும்
பட்டியிலிருந்து அவிழ்த்து விடும் அவலம்
பொது இடங்கள் சென்று
போதும்கிற அளவுக்கு
பேப்பரையும் காய்கறிக்கழிவுகளையும்
மேய்ந்து செல்லும் கோலம்
காகத்திற்கு இட்ட சோற்றைக்கூட
ஆகாரமாய் தின்று பசி ஆறும் கொடுமை
ஒற்றுமைக்கும் கூடி வாழ்தலுக்கும்
பகிர்ந்துண்ணும் பழக்கமும் கொண்ட
காக்கைகள் விட்டுக்கொடுக்கின்றன உணவை
காகம் திட்டி மாடு சாகாது
மனிதர்கள் போல் அடித்துக்கொள்ளாது
வழக்கம்போல் கூடி உண்கிறது
பழக்கத்தால் மேன்மை அடைகிறது
படக்கவிதை 71
நம் குரலின் ஓசையில் ஒற்றுமையில்லை
நாம் கொண்ட உருவமும் ஒன்றுபோலில்லை
பசியும் தாகமும் நமக்கு ஒன்றுதான்
பகிர்ந்துண்ணும் பழக்கம் நமக்குண்டுதான்
எங்கு கிடைக்கும் என்ற ஏக்கமுமில்லை
என்ன கிடைக்கும் எனும் எண்ணமுமில்லை
கொடுப்பவர் யாரென கேள்வியுமில்லை
எடுப்பாரே உணவை என்ற பயமுமில்லை
பதுக்கி வைத்து நாம் உண்பதுமில்லை
சேமித்து வைக்கும் பழக்கமுமில்லை
எல்லை விட்டு எங்கு சென்றாலுமே
எழுப்பும் குரல் என்றுமே ஒன்றுதான்
கூவி அழைத்து உண்ணும் போது
கொள்ளை இன்பம் வருகுதய்யா
காவேரி கரையிலும் கத்துவது “கா”வென்றே
கலிஃபோர்னியாவிலும் கத்துவது “கா”வென்றே
ஆத்தங்கரைஆனாலும் கத்துவது “மா” என்றே
அமெரிக்காவில் கத்துவதும் “மா” என்றே
இன்னும் ஆறறிவு ஏழறிவு ஏதுக்கைய்யா
இங்த அஞ்சறிவே எங்களுக்கு போதுமைய்யா
அனுப்புனர்
திருமதி ராதா விஸ்வநாதன்