இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 203 )

0

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள். அடுத்தொரு வாரம் , இங்கிலாந்து அரசியல் வானிலே அடுத்தொரு மின்னல். 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதி ஈராக் நாட்டின் மீது அமெரிக்காவின் தலைமையில் இங்கிலாந்து நாடும் இணைந்து தொடுத்ததொரு போர். காரணம் ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் கொடுக்கும் பயங்கரமான அமைதியின்மை. அவர் வசம் உலகையே ஆட்டி வைக்கக்கூடிய பயங்கரமான இராசயன ஆயுதங்கள் இருப்பதற்கு ஆதரமாக அமெரிக்க, இங்கிலாந்து உளவுப்ப்படைகளின் அறிக்கை.

b54e68ed-da78-41ab-9d0e-19da24eda6eb

இவைகள் தான் அன்று இங்கிலாந்துப் பாராளுமன்றத்திலே முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் அவர்களால் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட சான்றுகள். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னால் ஈராக் அதிபருக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு. இவைகளின் அடிப்படையில் அமெரிக்க நாட்டின் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கெதிராக அமெரிக்கா தாம் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மற்றைய நாடுகளின் உதவியையும் அனுசரணையையும் கோரியது.

அந்நிலையில் இப்பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு பிரித்தானியாவும் தன் முழுமனதுடன் ஒத்துழைப்பு நல்குவதாக அறிவித்தது. டோனி பிளேயருக்கும், அமெரிக்க அதிபரான ஜோர்ஜ் புஷ் அவர்களுக்கிடையிலுமான நட்புணர்வு இருநாடுகளுக்கிடையிலுமான நேச உணர்வுகளை விட மிக நெருக்கமாக உருவெடுத்தது.

758e9b77-9564-46de-b2e9-fc07206771f8

அடுக்கடுக்காக இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்தன. ஈராக் நாட்டில் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவிற்கு ஒத்துழைப்பு நல்காமல் அந்நாட்டின் அதிபர் சதாம் ஹூசேன் இழுத்தடிப்புச் செய்தது அமெரிக்காவின் ஈராக் மீதான வெளியுறவுக் கொள்கைக்கு சாதகமாக அமைந்தது.

இவ்வாயுத பரிசோதகர்கள் 1991ம் ஆண்டிலிருந்து இவ்வாய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ஆனால் ஈராக் அதிபரோ அவர்களை தம்மால் முடிந்தளவு இடையூறுகளுக்கு முகம் கொடுக்க வைத்து அவர்கள்கின் முயற்சியில் தோல்வியுறச் செய்தார்.

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஈராக் நாட்டிற்கெதிராக பல ஜநா சார்பான சட்டங்கள் அமுலாக்கப்பட்டன. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஈராக் அதிபரினால்
மீறப்பட்டு வந்தது.. இந்நிலையில் தான் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீதான் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்கா தனது இராணுஇவ மகத்துவத்தை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. அச்சமயம் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது ஈராக்கும், சர்வதேச சட்டதிட்டங்களை முற்றுமுழுதாக நிராகரிக்கும் அதன் அதிபர் சதாம் ஹூசேனும்.

அமெரிக்கா இராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை சதான் ஹூசேன் அவர்களே ஏற்படுத்திக் கொடுத்தார். எப்படி என்கிறீர்களா ? அனைத்து சர்வதேச சட்டதிட்டங்களுக்கும், புறம்பாக தமது அயல்நாடான குவைத் நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்றியதே !.

குவைத் நாட்டை ஈராக்கிடம் இருந்து மீட்பதற்கும் அமெரிக்காவின் தலைமையிலேயே போர் நடந்தது . அப்போதைய அமெரிக்க அதிபர் சீனியர் ஜோர்ஜ் புஷ் அவர்கள் ஈராக் இராணுவத்தை குவைத்திலிருந்து கலைத்ததன் பின்னர் தமது போரை நிறுத்திக் கொண்டார். ஆனால் அப்போரைத் தொடர்ந்து ஈராக்கில் சதாம் ஹூசேனின் ஆட்சியை மாற்றியமைத்திருக்க வேண்டும் என்று சில அரசியல், இராணுவ அவதானிகள் அப்போதே கருத்து தெரிவித்திருந்தனர்.

சரி இந்த அலசலெல்லாம் எதற்காக என்னும் கேள்வி எழுகிறது இல்லையா ? இங்கிலாந்து 2003ஆம் ஆண்டு ஈராக் போரில் ஈடுபட்டது சட்டத்திற்குப் புறம்பானது எனும் கோஷம் வலுத்துக் கொண்டு வந்ததினால் சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னர் இப்போரின் தன்மைகளைப் பற்றி ஆராய ஒரு விசாரணைக் கமிஷன் “ஜான் சில்க்கொட்” என்பவரின் தலைமையில் நிறுவப்பட்டது.

சுமார் ஏழு வருடங்களாக இவ்வாரய்வு நிகழ்த்தப்பட்டது. இதை இவர்கள் இழுத்தடிப்பது பூசிமெழுகுவதற்காகவே எனும் அபிப்பிராயம் நிலவியது. இவ்வபிப்பிராயத்தின் பின்னனியில் பலவிதமானோர் சம்பந்தப்பட்டிருந்தனர். இப்போரில் தமது உறவினர்களை பறிகொடுத்த இங்கிலாந்து மக்கள், மூன்று தடவைகள் தொடர்ந்து வெற்றியீட்டிய முதலாவது லேபர் கட்சிப் பிரதமர் எனும் பெயரைத் தட்டிக் கொண்ட டோனி பிளேயர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றுக் கட்சியினர். தமது கலாச்சாரப் பின்னனியான தீவிர இடதுசாரக் கொள்கையினின்றும் விலகி மிதவாத இடதுசாரக் கொள்கையைக் கடைப்பிடித்த டோனிபிளேயர் மீது பகையுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்காக கங்கணம் கட்டிக் கொண்டவரது கட்சியைச் சேர்ந்த தீவிர இடதுசாரக் கொள்கையைக் கொண்டவர்கள்.

ஆனால் ஏழு வருடங்களின் இவ்விசாரணைக் கமிஷனின் அறிக்கை நேற்ரு அதாவது 6ம் திகதி வெளியிடப்பட்டது.. இவ்வறிக்கை அநேகரின் கருத்துப்படி பூசிமெழுகப்பட்ட அறிக்கையாக இல்லாமல் மிகவும் அடிமட்டம் வரை சென்று மிகவும் விரிவான ஆய்வு நடாத்தப்பட்டதன் விளைவான அறிக்கையாகவே காணப்படுகிறது.. அவ்வறிக்கையின் முக்கிய முடிவுகள்,

ஈராக் மீதான போர் மிகவும் அவசரப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. சமாதானத்திற்கு போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை.

ஈராக் நாட்டில் மிகவும் பயங்கரமான இரசாயனத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளது எனும் உளவுத்துறையின் அறிக்கை சரியான தகவல்களின் அடிப்படையில் அமையவில்லை. இதனை யாரும் தட்டிக் கேட்கவில்லை.

இப்போருக்கான காரணத்தை நியாயப்படுத்த அப்போதைய பிரதமர் டோனி பிளேயர் மிகவும் ஆர்வமாக எல்லையைக் கடந்து செயல்பட்டிருந்திருக்கிறார்.

நாட்டு மக்களையும் , பாராளுமன்றத்தையும் ஏமாற்றி இப்போரை டோனி பிளேயர் நடத்தவில்லை.

இப்போருக்கான காரணத்தை உண்மையாக டோனி பிளேயர் ஏற்றுக் கொண்ட காரணத்திலாயே அவர் இப்போரில் இங்கிலாந்தை இணைத்துக் கொண்டார்.

அமெரிக்காவுடன் நட்பு நாடாக இணைந்து செயலாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்த டொபொனி ப்ளேயர் இதன் மூலம் பயங்கரவாதத்தை ஒடுக்கலாம் என்று நம்பியதால் தான் இப்போரில் ஆர்வம் காட்டினார்.

இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் இப்போரில் தமது உறவினர்களைப் பறிகொடுத்த உறவினர்கள் மிகவும் கொப்புடன் உள்ளார்கள்.. தாம் தமது உறவுகளை இழக்கக் காரணமாக இருந்தவர் டோனி பிளேயர் என்றும் இவரைப் போர்க்குற்றவாளியாக்கி சர்வதேச போர்குற்றவாளிகளை விசாரிக்கும் கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.

ஆனால் சட்டம் பயின்றவர்களும், சட்டம் அறிந்தவர்களும் இவ்வறிக்கையில் டோனி பிளேயர் மீது வழக்குத் தொடரக்கூடிய வகையில் அவரை குற்றம் சாட்டவில்லை என்கிறார்கள். இவ்வறிக்கை சமர்ப்பித்ததின் பின்னால் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டோனி பிளேயர் தான் பிரதமராக இருந்த பொழுது தான் எடுத்த முடிவுகளின் முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இப்போரில் ஏற்பட்ட பின்விளைவுகளின் பிரகாரம் இழக்கப்பட்ட உயிர்கள் அனைத்தின் பாரத்தையும் என்னெஞ்சில் எவ்வாறு சுமக்கிறேன் என்பதை அறிந்தவர்கள் இல்லை என்றார். தான் தவறு செய்தாக யாரும் எண்ணியிருந்தால் தான் அவர்களின் மன்னிப்புக் கோருவதாகக் கூறிய அதேசமயம் அன்றைய சூழலில் ஒரு பிரதமராக தான் எடுத்த முடிவு தன் நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பைக் கருதியே எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இவரது வாதங்களை உறவினர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவர் , நாட்டின் எத்தனையோ நன்மை பயக்கக்கூடிய மாற்றங்களுக்கு காரணமாகவிருந்தவர் இன்று குற்றவாளியென விமர்சிக்கப்பட்டு, தன் நாட்டு மக்களையே லட்சக்கணக்கில் கொன்றுகுவித்த சதாம் ஹூசேன் அவர்களுக்கிணையாக விமர்சிக்கப்படுவது முறையா ? என்பது ஒரு நியாயமான கேள்வியே !

ஒரு நிகழ்வு நடந்து முடிந்த பின்னால் அதைப்பற்றிய பலவிதமான விமர்சனங்களையும் செய்வது மிகவும் இலகுவான செயலே. ஆனால் அன்றைய பொழுதில் தான் எடுக்கப் போகும் முடிவு தனது நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டு அம்முடிவை எடுத்திருந்தால் இன்று அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முயற்சிப்பது சரியான செயலா ?

பல கேள்விகள் பல முனைகளில் இருந்து எழுகின்றன. இவையனைத்துக்கும் விடையை காலச்சுழற்சி பகருமோ ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.